திரிசங்கு அடைந்த சொர்க்கலோகம்


திரிசங்கு அடைந்த சொர்க்கலோகம்
x
தினத்தந்தி 14 March 2018 7:34 AM GMT (Updated: 14 March 2018 7:34 AM GMT)

ஒருமுறை காசி திருத்தலத்தில் விசுவாமித்திரர் கடும் தவத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் முன் தோன்றிய சிவபெருமான், ‘நீ திருப்போரூருக்கு வா.. என்னுடைய திரு நடனக்காட்சியை அங்கு அருள்கிறேன்’ என்று கூறி மறைந்தார்.

 திருப்போரூர் புறப்பட்ட விசுவாமித்திரர், காஞ்சி நதியில் நீராடி சுவாமியையும், அம்பாளையும் வழிபட்டார். பின்னர் வெள்ளியம்பலத்தில் தவத்தில் ஈடுபட்டார். அவர் முன் தோன்றிய ஈசன், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று கேட்டார்.

அதற்கு விசுவாமித்திரர், ‘அடியேனுக்கு தங்கள் திருவடியை எப்போதும் தரிசிக்கும் பாக்கியத்தை தந்து அருள வேண்டும். மேலும் முக்தி தரும் இந்த திருத்தலத்துக்கு வந்து தரிசிக்கும் அனைவருக்கும், அனைத்து தர்மங் களையும் தந்து அருள வேண்டும்’ என்று வேண்டினார்.

இதைக் கேட்ட சிவபெருமான் அகமகிழ்ந்து, ‘விசுவாமித்திரா! உன் பக்தியில் யாம் எம்மை மறந்தோம். உனக்கானதை மட்டும் கேட்காமல், இவ்வுலகத்தில் உள்ள அத்தனை ஆன்மாக்களுக்கும் வேண்டிய நித்திய தர்மங்களையும் நீவிர் வரங்களாக கேட்டது உன் பொதுநலத்தைக் காட்டுகிறது. தன்னலம் மட்டுமின்றி பிறர் நலமும் பேணி காக்க வேண்டும் என்று நினைக்கும் உமது தொண்டு வளர்க. நீவிர் கேட்ட அனைத்து வரங்களும் தந்தோம்’ என்று ஆசி கூறி மறைந்தார்.

இதை தொடர்ந்து விசுவாமித்திரர் கேட்டு கொண்டபடி, பேரூர் சென்று வழிபடும் அனைத்து ஆன்மாக்களுக்கும் சிவபெருமான் முக்தியை அளித்துக் கொண்டிருந்தார். இதனால் எமதர்மனுக்கு பணி இல்லாமல் போனது. அவர் பூலோகம் வந்து காஞ்சி நதியில் நீராடி, சிவ சின்னங்களைத் தரித்து பட்டீஸ்வரரையும், பச்சைநாயகி அம்மனையும் வணங்கினார். பின்னர் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

அவர் முன் தோன்றிய ஈசன், ‘எமதர்மா! உன்னுடைய எண்ணம் எனக்குத் தெரியும். என்னை நாடி வரும் அனைவரிடமும் அன்பு செலுத்துவது தானே தர்மமாகும். ஆதலால் இத்தலத்திற்கு என்னை நாடி வருபவர்களுக்கு வேண்டிய தர்ம காரியங்கள் கொடுத்து, அவர்களின் ஆன்மா வீடுபேறு பெற யாம் வழிவகுப்போம். எம்மை நாடாத ஆன்மாக்கள் உன்னை வந்து சேரும்’ என்று அருளினார்.

விசுவாமித்திரர் மற்றும் எமதர்மனுக்கு அருள் செய்தது போல, பிரம்மதேவனுக்கும் திருப்பேரூர் ஈசன் அருளாசி வழங்கியிருக்கிறார். அந்தக் கதையைப் பார்ப்போம்.

அது ஒரு கற்ப காலம். சிவபெருமான் திருவருளினால் இந்த உலகத்தையும், அதில் வாழும் உயிர்களையும், பல சிவாலயங்களையும், தீர்த்தங்களையும் படைத்திருந்தார் பிரம்மா.

அப்போது ஒரு அசீரிரி ஒலித்தது. ‘திருப்பேரூரும், காஞ்சி நதியும் உன்னால் படைக்கப்பட்டதோ’ என்றது அந்தக் குரல்.

பிரம்மா திகைத்தார். ‘தனக்குத் தானே பரமன் படைக்கும் ஆற்றலைக் கொடுத்தார். நான் திருப்பேரூரையும், காஞ்சி நதியையும் படைக்கவில்லை. வேறு யார் அதை படைத்து இருப்பார்கள்’ என்ற எண்ணம் அவரை ஆட்கொண்டது.

பிரம்மதேவன் உடனடியாக கயிலாயம் சென்று அங்கு எழுந்தருளியிருக்கும் உமா மகேஸ்வரரை வணங்கி, ‘எம்பெருமானே! திருப்பேரூர் தோன்றிய மகிமைகளை யாம் அறிய எடுத்துரைக்க வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டார்.

உடனே ஈசன், ‘பிரம்மதேவரே! நீவிர் ஒருமுறை படைக்கும் தொழில் மேற்கொண்ட போது துயில் கொண்டீர்! பின்னர் அந்த படைக்கும் ஆற்றல் வேண்டி திருப்பேரூர் வந்து எமது திருநடனத்தை கண்டு தரிசித்து பேறு பெற்றீர். அப்போது எமது திருமுடியில் இருந்து தோன்றிய காஞ்சி நதி அங்குள்ள அனைத்து ஆன்மாக்களுக்கும் வீடுபேறு பாக்கியத்தை வழங்கியது. இந்த தலத்திலேயே எம்மை தரிசித்து பலர் சிரஞ்சீவி ஆக மாறி இருக்கிறார்கள்’ என்று கூறியவர், அந்த திருத்தலத்தின் மகிமைகளைப் பற்றி மேலும் திருவாய் மலர்ந்தார்.

ஒருமுறை அயோத்தி நகரை ஆட்சி செய்த திரிசங்கு, வசிஷ்ட முனிவரைச் சந்தித்தான். ‘தவமுனியே! முனிவர்கள் பலரும் பூத உடலுடன் சொர்க்க லோகம் சென்று வருவது போல், நானும் அங்கு சென்று வர ஆசைப்படுகிறேன். எனது ஆசையை நிறைவேற்றித் தாருங்கள்’ என்றான்.

அதைக் கேட்ட வசிஷ்டர், ‘மாமன்னனே! அத்தகைய சூழல் தற்போது இல்லை. நான் அவ்வேளை வரும்போது சொல்கிறேன்’ என்றார்.

ஆனால் அவசரப்பட்ட திரிசங்கு, ‘தவ முனியே! உங்களைப் போல் மிகச் சிறந்த குரு யாராவது இருக்கிறார்களா? சொல்லுங்கள். நான் அவரிடம் சென்று என் ஆசையை நிறைவேற்றிக் கொள்கிறேன்’ என்றான்.

அவன் சொன்னதைக் கேட்ட வசிஷ்டர், ‘என்னை விட சிறந்தவனைக் கேட்கிறாயா?’ என்றபடி, ‘நீ நீசனாக மாறுவாய்’ என்று சாபமிட்டார்.

வசிஷ்டரிடம் சாபம் பெற்ற திரிசங்கு, தன் நிலையை நினைத்து வருந்தியபடி திருப்பேரூர் திருத்தலம் வந்து சேர்ந்தான். அங்கு தவம் இருந்து பல வரங்களைப் பெற்றிருந்த விசுவாமித்திர முனிவரைச் சந்தித்தான். தன்னுடைய ஆசையையும், அதற்கு வசிஷ்டர் கொடுத்த சாபத்தையும் அவரிடம் எடுத்துரைத்தான்.

வசிஷ்டரின் மீது ஏற்கனவே கோபம் கொண்டிருந்த விசுவாமித்திரர், ஒரு மாபெரும் வேள்வியை நடத்தினார். அந்த யாகத்தின் சக்தியைக் கொண்டு, திரிசங்குவை, பூத உடலுடன் இந்திரன் வீற்றிருக்கும் சபைக்கு நடுவே கொண்டு போய் நிறுத்தினார். இதைப் பார்த்து ஆத்திரம் கொண்ட இந்திரன், திரிசங்குவை காலால் உதைத்து பூலோகம் நோக்கித் தள்ளினான்.

மேலிருந்து கீழே விழுந்த திரிசங்கு, ‘விசுவாமித்திரரே! காப்பாற்றுங்கள்’ என்று சத்தமிட்டான். உடனே விசுவாமித்திரர், திரிசங்கு கீழே விழாமல் இருக்க யாகத்திற்கு நெய் வார்க்கும் சுருக்கை என்ற கரண்டியை மேல் நோக்கி வீசினார். அது அந்தரத்திலேயே திரிசங்குவை தடுத்து நிறுத்தியது. பின்னர் விசுவாமித்திரர் தன் தவ வலிமையக் கொண்டு, அந்தரத்திலேயே ஒரு சொர்க்கலோகத்தை அமைத்து, அதில் திரிசங்குவை அமர வைத்தார்.

இத்தகையை தவ வலிமைய விசுவாமித்திரர் பெறுவதற்கு காரணமாக இருந்த தலம் திருப்பேரூர் என்று சிவபெருமான் கூறினார்.

இதைக் கேட்ட பிரம்மதேவர், ஈசனை தரிசித்து விட்டு நேராக திருப்பேரூர் வந்து காஞ்சி நதியில் நீராடினார். பின்னர் சுவாமியையும், அம்பாளையும் வழிபட்டு விட்டு சத்தியலோகம் புறப்பட்டுச் சென்றார்.

-தொடரும்.

வியாசர் பெற்ற சாபம்

காசி திருத்தலத்தில் கூடி இருந்த முனிவர்களுக்கு இடையே ஒரு சர்ச்சை எழுந்தது. மகாவிஷ்ணு, பரசிவன் இருவரில் யார் பெரியவர்? என்பதில் எழுந்த வாதம் அது. இரு தரப்பினரும் வியாசரை நோக்கி வணங்கி, ‘தவ சீலரே! நீங்கள் சொல்லுங்கள். பரம்பொருள் விஷ்ணுவா? சிவனா?’ என்றனர்.

வியாச முனிவரும், ‘வேதங்கள் எல்லாம் பரம்பொருள் என்று அழைப்பது மகாவிஷ்ணுவைத் தான். எனவே அவர் தான் பரம்பொருளாக இருக்க முடியும்’ என்று தன் கருத்தை தெரிவித்தார்.

சிவனிடம் பக்தி கொண்ட முனிவர்கள் சிலர், இந்தக் கருத்தை ஏற்க மறுத்தனர். ‘வியாசரே! உங்களுடைய கருத்தை காசி விஸ்வநாதர் சன்னிதி முன்பாக வைத்து கூறுங்கள், நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்’ என்றனர்.

வியாசரும் கங்கை நதியில் நீராடி, விஸ்வநாதரின் சன்னிதி முன்பு நின்று, தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் உயர்த்தி, ‘பரம்பொருள் என்பவர் விஷ்ணுவே’ என்று உரக்க முழங்கினார்.

ஈசனின் சன்னிதி முன்பு காவல் புரிந்த நந்தியம்பெருமான், இந்த வார்த்தையைக் கேட்டு ஆத்திரம் அடைந்தார். ‘ஆதி பரம்பொருளான ஈசனின் சன்னிதி முன்பாக நின்று, விஷ்ணு தான் பரம்பொருள் என்கிறாயா?’ என்றவர், ‘உன்னுடைய இரு கைகளும், நாவும் நின்று போகட்டும்’ என்று சபித்தார்.

அவ்வளவு தான்! வியாசரால் தலைக்கு மேலே தூக்கிய கைகளை கீழே இறக்க முடியவில்லை. பரம்பொருள் விஷ்ணுவே என்று உச்சரித்த நாவால் மேற்கொண்டு எந்த வார்த்தையும் பேச முடியவில்லை.

செய்வதறியாது திகைத்த வியாசர், ‘வேதங்கள் எடுத்துரைத்த தாங்கள் தான் பரம்பொருள் என்று நான் கூறியது தவறா?’ என்று விஷ்ணுவை நோக்கி தியானித்தார்.

அவர் முன்பு தோன்றிய மகாவிஷ்ணு, ‘வேதங்கள் நான் தான் பரம்பொருள் என்று கூறினாலும், அருட்சக்தியாகிய சிவன் எங்கும் வியாபித்து இருப்பதால், அவரே ஆதி பரம்பொருள்’ என்று கூறி மறைந்தார்.

இதையடுத்து வியாசர், சிவபெருமானை நோக்கி தியானித்தார். அவர் முன் தோன்றிய ஈசன், ‘நீவிர்.. நந்தியிட்ட சாபம் நீங்க, திருப்பேரூர் சென்று வழிபடுங்கள்’ என்றார்.

வியாசரும் திருப்பேரூர் வந்து காஞ்சி நதியில் நீராடி, ஆதி அரசம்பலவாணரை வழிபட்டு மனம் உருகி தியானித்தார். அப்போது அவரது சாபம் நீங்கி, தலைக்கு மேல் இருந்து கைகள் கீழிறங்கியது. நாவும் வார்த்தைகளை உச்சரிக்கத் தொடங்கியது. ஆதி பரம்பொருளின் மகிமையை உணர்ந்த வியாச முனிவர், அவரை துதித்து வணங்கினார்.

Next Story