நன்மை வழங்கும் ராமர் வழிபாடு


நன்மை வழங்கும் ராமர் வழிபாடு
x
தினத்தந்தி 20 March 2018 10:25 AM GMT (Updated: 20 March 2018 10:25 AM GMT)

ராமநவமி விரதம் இருந்து ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும்.

காவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும். அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார்.

மனிதன் நீதிமுறைகள், ஒழுக்க நியதிகள் மற்றும் ஆன்மிக லட்சியங்கள் குறித்து உறுதியான கொள்கையுடன் விளங்க வேண்டும். இப்படி தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியது ராமாவதாரம். ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்று வாழ்ந்தவர் அவர்.

அந்த ராமபிரான் அவதரித்த நாளே ‘ராமநவமி’ என்று கொண்டாடப்படுகிறது.

அயோத்தியை ஆண்டுவந்த தசரத சக்கரவர்த்திக்கு கோசலை, சுமித்ரா, கைகேயி ஆகிய மூன்று மனைவிகள் உண்டு. தனது புஜ, பல பராக்கிரமத்தால் உலகெங்கும் வெற்றிக்கொடி நாட்டி புகழ்கொடியை பறக்கவிட்ட தசரதருக்கு நாட்டை ஆள ஆண் வாரிசு இல்லாதது பெரும் மனக்குறையாக இருந்தது. தனது மனக்குறையை குலகுரு வசிஷ்ட மகரிஷியிடம் அவர் கூறினார்.

வசிஷ்டரின் ஆலோசனைப்படி மகரிஷி ருஷ்யஷ்ருங்கர் உதவியுடன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். அந்த யாகத்தின் விளைவாக யக்னேஸ்வரர் தோன்றி பாயசம் நிறைந்த ஒரு கிண்ணத்தைக் கொடுத்து அதை மனைவிகளிடம் கொடுக்கும்படி கூறினார். தசரதர் பாயசத்தை தனது மனைவிகளுக்கு கொடுத்தார். சில நாட்களுக்கு பிறகு கோசலை, கைகேயி, சுமித்ரா ஆகிய மூவரும் கர்ப்பமுற்றனர்.

பங்குனிமாதம் நவமியன்று கோசலை ராமபிரானைப் பெற்றார். கைகேயிக்கு பரதனும், சுமித்ராவுக்கு லட்சுமணன், சத்ருக்னன் ஆகியோரும் பிறந்தனர்.

ராமன் அழகும், நல்ல தோற்றமும் அரச அம்சங்களுடனும் பிறந்தார். பூமியில் அவருக்கு நிகர் எவருமில்லை. மிகவும் பண்பானவர். அகில உலகமும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. தன்னை நம்பி வந்தவர்களை அவர் கைவிட்டதே இல்லை.

மிதிலை மாநகரில் ஜனகன் அரண்மனையில் ராமபிரானின் கைப்பட்டு பரமேஸ்வரனின் வில் உடைப்பட்டது. கானகத்தில் பெருமாளின் கால்பட்டு கல் உருகப்பெற்றது. ராமபாணத்தால் தாடகையை வதம் செய்தார். ராமநாம மகிமையால் வேடன் வால்மீகியின் சாபம் நீங்கியது. ராமரின் திருநாம ஜெபத்தால் நமது பாவங்கள் எல்லாம் விலகும். புண்ணியங்கள் பெருகும்.

தசரதனுக்கு புத்திரனாக அவதரித்த ராமன் வசிஷ்டரிடம் வித்தைகளை கற்றார். விஸ்வாமித்திரருடன் சென்று தாடகையை வதம் செய்தார். மிதிலையை அடைந்து வில்லை ஒடித்து ஜானகியை மணம் புரிந்தார். கூனியின் சூழ்ச்சியால் கைகேயி தசரதனிடம் பெற்ற வரத்தால் கானகம் சென்றார். சீதையை கவர்ந்து சென்ற ராவணனை தேடிச் செல்லும் வழியில் சுக்ரீவனுக்காக வாலியை வதம் செய்தார். அனுமன் உள்ளிட்ட வானரர்களின் உதவியுடன் கடலுக்கு நடுவில் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்று போரில் ராவணனை அழித்தார். விபீஷ்ணனை இலங்கையின் அரசனாக நியமித்தார்.

சீதையை தீக்குளிக்க செய்து புஷ்ப விமானத்தில் அழைத்து கொண்டு அயோத்தி சென்று முடிசூடி நல்லமுறையில் அரசாண்டார்.

ராமன் பிறந்தகாலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்சநிலையில் இருந்தது. அதனால் ராமருடைய ஜாதகத்தை எழுதி, அதை பூஜை அறையில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய நவக்கிரகதோஷம் நீங்கும். வியாதிகள் குணமாகும். ஐஸ்வரியங்கள் பெருகும்.

விரதம் இருப்பது எப்படி?

ராமநவமி அயன்று அதிகாலையில் குளித்துவிட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி விரதம் கடைப் பிடிக்க வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டிட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.

சாதம், பாயசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். அன்றைய தினம் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படித்தும், பாராயணம் செய்வதுமாக இருக்க வேண்டும். அன்றைய தினம் ராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ராமநவமி விரதம் இருந்து ராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.

லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும்.

‘ஸ்ரீராமஜெயம்’ என்ற எழுத்தை 108 முறை அல்லது 1008 முறை எழுதத் தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும். 

Next Story