நினைத்த வரம் அருளும் கரிக்ககம் சாமுண்டி


நினைத்த வரம் அருளும் கரிக்ககம் சாமுண்டி
x
தினத்தந்தி 22 March 2018 11:30 PM GMT (Updated: 22 March 2018 7:05 AM GMT)

ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது இந்தக் கோவிலின் தனிச்சிறப்பு.

ழங்காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்கள் ஆட்சி காலத்தில், தாங்கள் ஆண்டப் பகுதிகளில் ஆலயங்களை அமைத்து வழிபட்டு வந்தனர். முன்னதாக மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படும் பரசுராமர், சேர நாட்டில் 108 சிவாலயங்களையும், 108 பகவதியம்மன் கோவில்களையும் அமைத்தார். பரசுராமர் ஆலயங்களை அமைத்த பகுதியே ‘கேரளம்’ என்று அழைக்கப்பட்டது. பிற்கால சேரர்கள், சிவன் கோவில்களுடன், பராசக்தியை பகவதி அம்மனாக, சாமுண்டி தேவியாக பற்பல இடங் களில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர்.

இவ்வாறு ‘கரிக்ககம்’ என்ற இடத்தில் உருவானது தான், ‘தேவி கரிக்ககத்தம்மா’ என்று அழைக்கப்படும் கரிக்ககம் சாமுண்டி கோவில். இந்த ஆலயத்தில் உக்கிர சொரூபிணியாக.. ரத்த சாமுண்டி தேவியானவள், சத்தியத்தை நிலைநாட்டும் சக்தியோடு அருள்பாலித்து வரு கிறாள். இது பிற்கால சேர மன்னனான அனு‌ஷம் திருநாள் ராமவர்மா காலத்தில் உருவான ஆலயம் ஆகும்.

தல வரலாறு

வேதவிற்பன்னர் ஒருவர், யோகீஸ்வரன் என்பவரை தன்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு அவருக்கு அறிவுரைகளும், அருள்வாக்கும் அருளினார். யோகீஸ்வரனும் தன்னுடைய குருவைப் போலவே பராசக்தியை வழிபட்டு வந்தார். அவர் முன்பு அன்னையானவள், சிறுமி உருவத்தில் தோன்றினாள். அந்த சிறுமியை குருவும், சீடருமாக சேர்ந்து தற்போது கரிக்ககம் ஆலயம் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்து, பச்சைப் பந்தல் அமைத்து சிறுமியை குடியமர்த்தினர். உடனே அந்தச் சிறுமி, அம்பிகையாக காட்சியளித்து அங்கேயே குடிகொள்வதாகக் கூறி மறைந்தாள். இதையடுத்து குருவின் ஆலோசனைப்படி யோகீஸ்வரன் ஒரு அம்மன் சிலையை அங்கே பிரதிஷ்டை செய்தார். அந்த அம்மனே அருள் சுரக்கும் கரிக்ககத்து அம்மனாக விளங்குகிறாள். இந்த அம்மனை பராசக்தி என்றும், பகவதி என்றும், பரமேஸ்வரி என்றும் அங்குள்ள மக்கள் வழிபடுகின்றனர். 

ஒரே தேவியை மூன்று வடிவங்களில் வழிபடுவது இந்தக் கோவிலின் தனிச்சிறப்பு. சாமுண்டி தேவி, ரத்த சாமுண்டி தேவி, பால சாமுண்டி தேவி என மூன்று விதமாக அம்மனை மக்கள் வழிபாடு செய்கின்றனர். இதில் ரத்த சாமுண்டி, பால சாமுண்டி இருவரும் சுவர் சித்திரமாகவே உள்ளனர். இந்தச் சன்னிதியில் எந்த சிலை வடிவமும் இல்லை.

முன்னொரு காலத்தில் இந்த ஆலயத்தின் கருவறை மூலஸ்தானத்தில், சாமுண்டிதேவியின் உருவம் வெள்ளி முகத்துடன் கலைமான் கொம்பில் பீடத்தின் பிரதிஷ்டையாக இருந்தது. நாளடைவில் பக்தர்கள், தேவியின் உருவத்தைப் பார்த்து வணங்கி பிரார்த்தனை செய்ய விக்கிரக பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தனர். அதன்படி சாஸ்திர முறைப்படி பழைய கருவறையில் சிலை அமைக்கப்பட்டது. தேவியை பஞ்சலோக விக்கிரகமாக செய்து பிரதிஷ்டை செய்தனர். அமைதி வாழ்வுக்கும், தீராத நோய் நீங்கவும் மக்கள் இந்த தேவியை வழிபட்டு வருகின்றனர். இந்த அம்மனுக்கு கடும் பாயசம் நைவேத்தியமாக படைக்கப் படுகிறது. ரத்த புஷ்பார்ச்சனை, சுயம்வரார்ச்சனை, சகஸ்ர நாம அர்ச்சனை செய்யப்படுகிறது. பால் பாயசம், பஞ்சாமிர்த அபிஷேகமும் செய்வார்கள். காலையில் நிர்மால்ய தரிசனம் முடிந்ததும், உடனடியாக தேவிக்கு நடத்தப்படும் வழிபாடு பஞ்சாமிர்த அபிஷேகம் ஆகும். நினைத்த காரியம் நிறைவேறவும், தடைகள் விலகவும் தொடர்ந்து 13 வெள்ளிக்கிழமை தேவிக்கு ரத்த புஷ்பார்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். உடல்நலனுக்காகவும், பயம் நீங்கவும் ‘கறுப்புக் கயிறு’ ஜெபித்துக் கட்டப்படுகிறது. இந்த தாயத்து, தேவியின் பாதங்களில் 21 தினங்கள் பூஜை செய்து கொடுக்கப்படுவதாகும்.

இந்த ஆலயத்தில் ரத்த சாமுண்டி தேவி, உக்கிர வடிவத்தில் சுவர் சித்திரமாக அருள்பாலித்து வருகிறாள். முன் காலத்தில் இருந்தே, இந்த அன்னையின் சன்னிதி யில் சத்தியம் செய்வது ஓர் சடங்காக இருந்து வந்துள்ளது. அந்த காலத்தில் நீதிமன்றம், போலீஸ் நிலையங்களுக்கு பயப்படாதவர்கள் கூட இந்த அம்மனுக்கு பயந்து உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இந்த சன்னிதியில் நடைபெறும் முக்கிய பூஜை ‘சத்ரு சம்கார’ (பகைமை அழிக்கும்) பூஜையாகும். தோ‌ஷங்கள், தடைகள் அகலவும், புதியதாக தொடங்கப்பட உள்ள சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறவும், கண் திருஷ்டி நீங்கவும், செய்வினை தோ‌ஷம், பகைவர்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் விலகவும் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

அடுத்தது பால சாமுண்டி தேவி சன்னிதி. இந்த அன்னையும் சித்திரமாகவே காட்சி தருகிறாள். ஆனால் இவளது தோற்றம் சாந்த சொரூபிணியானது. இந்த அன்னை அமைதியும் அழகும் நிறைந்த தோற்றத்தில் காணப்படுவதால், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த சன்னிதியில் வழிபாடு செய்யலாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இந்த அம்மனின் சன்னிதியில் தட்சணை செலுத்தி வழிபாடு செய்தால், அன்னையின் அருள் நிச்சயம் கிடைக்குமாம்.

இந்த ஆலய வளாகத்தில் மகா கணபதி, யக்ஷியம்மா, புவனேஸ்வரி, ஆயிரவல்லி, நாகர் வனம், அன்னபூர்ணேஸ்வரி ஆகிய உப சன்னிதிகளும் அமைந்துள்ளன. 

இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தேவியின் நட்சத்திர தினமான பங்குனி மாதம் மக நட்சத்திர தினத்தில் பொங்கல் விழா நடைபெறும். விழாவின் 7–ம் நாளில் பொங்கல் வைக்கும் விழா நடக்கும். இதில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து அன்னையை வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 22–ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 28–ந் தேதி (புதன்கிழமை) வரை நடைபெறும் இந்த விழாவின் இறுதி நாளில் பொங்கல் விழா நடைபெறுகிறது.

ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந் திருக்கும்.

அமைவிடம்

திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி ஆலயத்தின் வடமேற்கு திசையில் பார்வதி புத்தனாற்றின் கரையில் அமைந்துள்ளது, கரிக்க கம் சாமுண்டி தேவி ஆலயம்.

–எம்.பிரபா முத்துக்குமார்.

வழக்கைத் தீர்க்கும் அம்மன்

ஒரு முறை சேர மன்னன் ஒருவனின் அரசாட்சியில், அரசியின் விலை மதிப்பான காதணி காணாமல் போனது. சந்தேகத்தின் பேரில் ஒரு காவலரைப் பிடித்து சிறையில் அடைத்தனர். அந்த காவலரின் காதலி, அரசியின் தோழி ஆவாள். அவள் செய்தி கேட்டு ஓடோடி வந்து தன்னை தண்டிக்கும்படியும், காவலரை விடுவிக்கும்படியும் மன்றாடினாள். அதைக் கேட்ட காவலனோ, ‘இல்லை.. நான் தான் குற்றவாளி. எனக்கே தண்டனை கொடுங்கள்’ என்றான்.

‘யார் குற்றவாளி’ என்று கண்டுபிடிக்க, கரிக்ககம் கோவிலில் ரத்த சாமுண்டி சன்னிதானத்தில் சத்தியம் செய்வது என்று முடிவானது. பொய் சத்தியம் செய்பவருக்கு அம்மனே தண்டனை வழங்குவார் என்பது உறுதி. குற்றம் சுமத்தப்பட்ட காவலரும், அந்த காவலரின் காதலியும் ஆலய குளத்தில் நீராடி, ஈர உடையுடன் ரத்த சாமுண்டி சன்னிதிக்கு வந்தனர். அப்போது அரசியின் துணிகளை சலவை செய்யும் பெண் ஒருத்தி அங்கு ஓடோடி வந்தாள்.

‘அரசியார் சலவைக்குப் போட்டத் துணியில், அரசியின் காதணி இருப்பதைக் கண்டேன். சாமுண்டி தேவியின் அசரீரி வாக்குப்படி, அதனை ஒப்படைக்கே இங்கே வந்தேன். காவலரும், அந்தப் பெண்ணும் நிரபராதிகள் மன்னா!’ என்று கூறி தன்னிடம் இருந்த காதணியைக் கொடுத்தாள். மன்னன் மகிழ்ந்தான். காவலரும், அந்தப் பெண்ணும் விடுவிக்கப்பட்டனர். தன்னுடைய காதணிகள் இரண்டையும், சாமுண்டி தேவிக்கே சமர்ப்பித்தாள், அரசி.

அப்போதிருந்து இன்றுவரை பல சிக்கலான வழக்குகள், சாமுண்டி தேவியின் சன்னிதி முன்பு சத்தியம் செய்வதன் மூலம் தீர்த்து வைக்கப்பட்டு வருகின்றன.

Next Story