இறைவன் எதிர்பார்ப்பது?


இறைவன் எதிர்பார்ப்பது?
x
தினத்தந்தி 27 March 2018 9:56 AM GMT (Updated: 27 March 2018 9:56 AM GMT)

இறைவன் தன்னை வழிபடும் பக்தர்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்பது பற்றி, ‘ஸ்ரீமத் நாராயணீயம்’ பாடிய நாராயண பட்டதிரியுடன் குருவாயூரப்பன் நிகழ்த்திய உரையாடல் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கும்.

குருவாயூரப்பனின் மகிமைகளை எடுத்துரைக்கும் ‘ஸ்ரீமத் நாராயணீயம்’ பாடிய நாராயண பட்டதிரியை அனைவரும் அறிந்திருப்பார்கள். அவருடன் குருவாயூரப்பன் நிகழ்த்திய உரையாடல் மிகவும் சுவையானது, ரசிக்கத்தக்கது.

ஒரு முறை தன் முன்பாக தோன்றிய குருவாயூரப்பனிடம், ‘பகவானே! நீங்கள் மிகவும் விரும்பும் நிவேதனம் என்ன?’ என்று பட்டதிரி கேட்டார்.

அதற்கு குருவாயூரப்பன் ‘நெய்ப் பாயசம்’ என்று பதிலளித்தார்.

உடனே பட்டதிரி ‘ஒருவேளை நெய்ப் பாயசம் செய்ய எனக்கு வசதி இல்லை என்றால், நான் என்னசெய்வது?’

‘அவலும் வெல்லமும் போதுமே!’

‘சரி பகவானே! அவலும் வெல்லமும் நைவேத்தியம் செய்து வைக்க எனக்கு வசதி இல்லை என்றால்?’

‘வெண்ணெய், வாழைப்பழம், பால், தயிர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து வழிபடு. நான் ஏற்றுக் கொள்கிறேன்’

‘மன்னிக்க வேண்டும் பகவானே! தற்போது தாங்கள் சொன்ன நான்கும் என்னிடம் இல்லை. இப்போது நான் என்ன செய்வது?’

‘துளசி இலைகள் அல்லது ஒரு உத்தரணி தீர்த்தமே எமக்குத் திருப்தி தரும்!’

‘அதுவும் என்னிடம் இல்லை என்றால்?’ பட்டதிரியின் குரல் தளர்ந்துபோனது.

இப்போது இறைவன் கூறுகிறார். ‘எனக்கு நைவேத்தியம் செய்து வைக்க ஒன்றும் இல்லையே என்று வருத்தப்பட்டு கவலையுடன் நீ அழுவாய் அல்லவா? அப்போது உன் கண்களில் இருந்து கசியும் இரண்டு சொட்டுக் கண்ணீரே எனக்குப் போதும்’.

இதைக் கேட்டதும் ‘ஓ..’ வென்று கதறி அழுது விட்டாராம் பட்டதிரி.

தெய்வங்கள், தன் பக்தர்களிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது எல்லாம் உண்மையான பக்தி ஒன்றைத்தான்.

Next Story