கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருங்கள்


கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருங்கள்
x
தினத்தந்தி 27 April 2018 1:30 AM GMT (Updated: 26 April 2018 8:34 AM GMT)

தேர்வு நாட்களில் தேவன் தாமே தம்முடைய ஞானத்தினாலும், ஞாபக சக்தியினாலும் உங்களை நிரப்பி இவ்வருடம் உங்களுக்கு வெற்றியை நிச்சயம் கட்டளையிடுவார்.

நம்புங்கள்

‘நீரே என் நம்பிக்கை’. (சங்கீதம் 39:7)

இச்செய்தியை வாசிக்கிற நீங்கள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கலாம் அல்லது தேர்வுக்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கலாம். உங்களுடைய சுய பலத்தையோ, ஞானத்தையோ நம்ப வேண்டாம். உங்களுக்கு வெற்றியை அருளுகிற ஜீவனுள்ள தெய்வம் ஒருவர் இருக்கிறார். அவர்- ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அவரை நீங்கள் முதலாவது நம்ப வேண்டும்.

நம்புவது என்றால் என்ன?

எனக்காக இயேசு சிலுவையில் அறையப்பட்டார், தன் ஜீவனையே எனக்காக கொடுத்தார். மூன்றாம் நாள் கல்லறையில்இருந்து உயிரோடெழுந்தார். அவர் இன்றும் ஜீவிக்கிறார் என்ற மாறாத இந்த சுவிசேஷத்தை நம்ப வேண்டும். இவ்வாறு நீங்கள் நம்பிக்கையோடு இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள்.

மேலும், ‘கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்’ (சங்கீதம் 40:4) என்று தாவீது ராஜா கூறுகிறார். எந்தச் சூழ்நிலையிலும் குறிப்பாக தேர்வு காலங்களில் எந்த மனுஷனுடைய ஞானத்தையும், அறிவையும் நம்பாமல் கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருங்கள்.

விடாமுயற்சி

‘செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்’ (பிரசங்கி 9:10).

மேற்கண்ட வார்த்தையை தேவன் அருளின ஞானத்தோடு சாலொமோன் ராஜா கூறுகிறார்.

அற்புதங்களை செய்கிறவர் தேவன்தான் என்றாலும், நாம் செய்ய வேண்டியதை நாம்தான் செய்ய வேண்டும் அல்லவா? இந்நாட்களில் கர்த்தருடைய ஆவியின் ஏவுதலினால் உங்களுக்கு நான் கூறும் மற்றொரு முக்கிய ஆலோசனை, உங்கள் பாடங்களை கருத்தோடு முயற்சி எடுத்துப் படியுங்கள். அதிக உணவுக்கும், அதிக நித்திரைக்கும் இடங்கொடாதிருங்கள். இவை இரண்டும் சோம்பலையும், அசதியையும் கொண்டு வரும்.

உங்களால் முடிந்தவரைக்கும் முயற்சிபண்ணுங்கள். உங்கள் இயலாமையைக் குறித்து மனவேதனைப்படாமல் ஆண்டவரிடம் அர்ப்பணித்து விடுங்கள். தேவன் அதை பொறுப்பெடுப்பார். பிரயாசப்படும் போதுதான் அதன் பலனை அடையமுடியும்.

ஆயத்தம்


‘குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்’ (நீதிமொழிகள் 21:31).

எந்த ஒரு அற்புதங்களையும், வெற்றியையும் நாம் அடைவதற்கு ஆயத்தம் அவசியம் தேவை. அதைப்போல தேர்வு நாட்களில் உங்கள் பாடங்களை கருத்தோடு படிக்க நேரத்தை ஒதுக்குங்கள். படிக்க வேண்டிய நேரங்களில் டெலிவிஷன், நண்பர்கள், உறவினர்களை சந்தித்தல் இவை அனைத்தையும் முற்றிலுமாய் தவிர்த்து, தேர்விற்காக உங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.

மேலே குறிப்பிட்ட வசனத்தை கவனித்தீர்களா? குதிரையை யுத்தம் செய்வதற்கு ஆயத்தப்படுத்தினால் தான் வெற்றியை கர்த்தர் அருள முடியும்.
ஆயத்தமாயிருக்க வேண்டிய காலங்களில் ஏனோதானோ என்று வீணாக காலங்களைக் கழிக்காதீர்கள்.

நாட்களை பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்


`நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்’ (எபேசியா 5:16)

உங்கள் வாழ்க்கையில் காலங்களும் நாட்களும் மிகவும் முக்கியம். ஒவ்வொன்றுக்கும் ஒரு காலங்களை கர்த்தர் வைத்திருக்கிறார்.

நம்முடைய கர்த்தர் உங்களுக்கு ஜெயத்தைக் கொடுக்கவும், ஞானத்தையும், அறிவையும் அருளவும் வல்லவராயிருக்கிறார். என்றாலும் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியம் உண்டு.

காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்வதுதான் அந்த முக்கியமான காரியம். முதலாவது வேத வசனத்தை வாசித்து ஜெபிப்பதற்கு சற்று நேரத்தை ஒதுக்குங்கள். அதன்பிறகு உங்களுக்கு கிடைக்கும் நேரத்தை வீணாகக் கழிக்காமல் முயற்சி எடுத்துப் படியுங்கள்.

இந்நாட்களில் உங்களுக்குக் கிடைக்கிற ஒவ்வொரு மணி நேரமும் மிகவும் முக்கியம். பொழுதுபோக்குகளை முற்றிலும் தவிர்த்து படிக்க வேண்டிய காலங்களில் படித்து ஓய்வு எடுக்க வேண்டிய நேரங்களில் ஓய்வெடுத்து கர்த்தரையே முற்றிலும் சார்ந்திருங்கள். கர்த்தரோடு நீங்கள் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் எதிர்காலத்திற்கு மிகுந்த ஆசீர்வாதங்களைக் கொண்டுவரும். உங்கள் வாழ்க்கையில் இனி தோல்வி இல்லை. வெற்றி நிச்சயம்.

- சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன்,  ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.

Next Story