சந்தோஷம் வழங்கும் சாஸ்தா வழிபாடு


சந்தோஷம் வழங்கும் சாஸ்தா வழிபாடு
x
தினத்தந்தி 9 May 2018 10:58 AM GMT (Updated: 9 May 2018 10:58 AM GMT)

சாஸ்தா வழிபாடு என்பது தென் மாவட்டங்களில் பரவலாக இருந்து வரும் ஒன்று.

பங்குனி உத்திரத் திருநாளில்தான் பெரும்பாலானவர்கள் சாஸ்தாவை வழிபடுவார்கள் என்றாலும், தினந்தோறும் ஒவ்வொரு வரும் வழிபட வேண்டிய தெய்வமாக சாஸ்தா வழிபாடு இருப்பதுதான் முக்கியமானது. எப்படித் தொடங்கியது இந்த சாஸ்தா கோவில் வழிபாடு? என்பது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

சாஸ்தா தோற்றம்

தாங்கள் செய்த வேள்விகளின் வழியாகக் கிடைத்த பலன்களை நல்வழிக்குப் பயன்படுத்தாத சில முனிவர்கள், தங்களிடமிருக்கும் பலன்களைப் பெரிதாக நினைத்ததுடன், தங்களை விட உயர்ந்தவர்கள் எவருமில்லை என்று அகந்தையும் கொண்டனர். அகந்தை கொண்ட முனிவர்களெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து மிகப்பெரிய வேள்வி ஒன்றை நடத்தி, முப்பெருங்கடவுள்களின் சக்தியையும் தாங்கள் பெற்று விட வேண்டும் என்று முடிவு செய்தனர்.

தாருகா வனத்தில் ஒன்று கூடிய அவர்கள், முப்பெருங்கடவுள்களின் சக்தியைப் பெறுவதற்கான வேள்வியைச் செய்யத் தொடங்கினர். அந்த வேள்வி நிறைவடைந்தால், அவர்களது அகந்தை மேலும் அதிகரிப்பதுடன், தங்களுக்கும் மரியாதை இல்லாமல் போய்விடும் என்று நினைத்த சிவபெருமானும், விஷ்ணுவும் அந்த வேள்வியைத் தடுக்கத் திட்டமிட்டனர்.

அவர்கள் திட்டத்தின்படி, இறைவன் சிவபெருமான் பிச்சாடனர் வேடமும், விஷ்ணு மோகினி வேடமும் கொண்டு அந்த இடத்திற்குச் சென்றனர்.

பிச்சாடனராக வேடமிட்ட சிவபெருமான், முனிவர்களின் குடில்கள் அமைந்திருந்த பகுதிக்குள் நுழைந்து, அங்கிருந்த முனிவர்களின் மனைவிகளிடம் தனக்குப் பிச்சையிடுமாறு கேட்டார். சிவபெருமானின் பிச்சாடனர் தோற்றத்தைக் கண்ட அவர்களது மனதில், ‘தங்கள் கணவரை விட இவர் அழகாக இருக்கிறாரே’ என்கிற எண்ணமும், தடுமாற்றமும் ஏற்பட்டது.

இது போல், மோகினித் தோற்றத்தில் சென்ற விஷ்ணு, முனிவர்கள் வேள்வி நடத்திக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்று, அவர்களின் முன்பாகப் போய் நின்றார். மோகினியின் தோற்றத்தில் மயங்கிய முனிவர்களின் மனம் வேள்வியிலிருந்து வெளியேறி, மோகினியின் அழகில் அலைபாயத் தொடங்கியது.

முனிவர்கள் மற்றும் அவர்களது மனைவிகளின் மனங்களில் ஏற்பட்ட தவறான எண்ணங்களால் வேள்வியைத் தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. முனிவர்களுக்குத் தாங்கள் செய்யவிருந்த தவறும் நன்றாகத் தெரிந்தது. அவர்கள் தங்களது வேள்வியை உடனே நிறுத்தி விட்டனர்.

இந்நிலையில், பிச்சாடனர் உருவத்திலிருந்த சிவபெருமானும், மோகினி உருவத்திலிருந்த விஷ்ணுவும் அங்கிருந்த நீர்நிலை ஒன்றின் அருகில் சந்தித்துக் கொண்டனர். மோகினியின் அழகில் மயங்கிய பிச்சாடனர், மோகினியுடன் இணைந்தார். அதனால், மோகினியின் கையில் குழந்தை ஒன்று தோன்றியது.

இருவரது சேர்க்கையிலும் தோன்றிய அந்தக் குழந்தைக்கு இருவரது சக்திகளும் கிடைத்தன. அந்தக் குழந்தையைப் பார்த்த சிவபெருமான், பிற்காலத்தில் அவர் பூலோக மக்களின் காவல் தெய்வமாகப் புகழ் பெறுவார் என்று வாழ்த்தினார். சிவன், விஷ்ணு இருவரும், தங்களுக்குப் பிறந்த குழந்தைக்குத் துணையாகத் தங்களது பாதுகாவலர்களில் சிலரையும், அந்தக் குழந்தை சொல்லும் பணிகளைச் செய்வதற்காக இயக்கியர்கள் என்கிற மாடன், மாடத்தியர்களையும் கொடுத்தனர்.

குழந்தையாக இருந்த அவர், வளர்ந்து இளம்பருவத்தை அடைந்த போது, சிவபெருமான் வாழ்த்தியபடி சாஸ்தா எனும் பெயரில் கிராம மக்களின் காவல் தெய்வமாக உயர்ந்தார்.

அய்யனார்

பொதுவாக அமைதியான தோற்றத்திலேயே சாஸ்தா இருக்கிறார். அவர் கோபத்துடன் வீரமான தோற்றத்திலிருக்கும் நிலையில் அவரை ‘அய்யனார்’ என்று அழைக்கின்றனர். பிச்சாடனருடன் இணைந்த மோகினியின் கையில் தோன்றிய குழந்தை என்பதால், இவரைக் ‘கையனார்’ என்று அழைத்து, இந்தப் பெயரே பின்னர் ‘ஐயனார்’ என்று மருவி விட்டதாகச் சிலர் சொல்கின்றனர்.

சாஸ்தாவிற்குப் பல இடங்களில் கோவில்கள் அமைக்கப்பட்டன. அக்கோவில்களில் இருக்கும் சாஸ்தா மார்பில் பூணூல் அணிந்து, சிவபெருமான் அணிந்திருக்கும் அனைத்து அணிகலன்களையும் அணிந்து கொண்டிருப்பார். இளம் வயதுத் தோற்றத்தில், வலது கையில் தண்டம் ஒன்றை வைத்திருக்கும் இவர், இடது கையை, இடது காலின் மீது சார்த்தியபடி வைத்திருப்பார். இடது காலை மடித்துப் பீடத்தின் மேல் வைத்துக் கொண்டு, வலது காலைத் தொங்க விட்ட நிலையில் அமர்ந்திருப்பார். சில இடங்களில் குதிரை அல்லது யானையின் மீது அமர்ந்த நிலையிலும் இருப்பதுண்டு. இது போல், சில இடங்களில் சாஸ்தா நின்ற நிலையிலும் இருக்கிறார்.

சாஸ்தா தேவலோகத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும், அவர் பூலோகத்தில் தோன்றியவர் என்பதால், அவருக்குத் தேவலோகத்தைச் சேர்ந்த புஷ்கலா எனும் தேவியும், பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவி எனும் தேவியுமாக இரண்டு தேவியர்கள் உடனிருக்கின்றனர். பல சாஸ்தா கோவில்களில் சாஸ்தாவுடன் பூர்ணாதேவி, புஷ்கலா தேவி என்று இரண்டு தேவியர்களும் இருக்கின்றனர்.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்திருக்கும் சிறிய அளவிலான சாஸ்தா கோவில்களில் சாஸ்தாவிற்கு எனத் தனிச்சிலைகள் எதுவுமில்லாமல், முக்கோண வடிவிலான பீடம் மட்டும் அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கோவில்களில், பங்குனி உத்திரத் திருவிழா நாளில் பீடத்தின் முன்பாக சாஸ்தாவின் உருவம் அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.

பொதுவாக சாஸ்தா கோவில்களில், அவருக்குப் பாதுகாவலாகச் சுடலை மாடன், கருப்பசாமி ஆகிய துணைக் கடவுள்களில் ஒருவரும், இயக்கியர்கள் என்று அழைக்கப்படும் சிறு காவல் தெய்வங்கள் இருபத்தொன்று பேர்களும் இருப்பது போன்ற அமைப்பு செய்யப்பட்டுள்ளன.

சாஸ்தா வழிபாடு

சாஸ்தா கோவில்களில் அவர் தோன்றியதாகக் கருதப்படும் பங்குனி உத்திர நாளில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இக்கோவில்களில் பங்குனி உத்திர நாளில் காலை ஐந்து மணிக்குத் தொடங்கும் வழிபாடு, இரவு பன்னிரண்டு மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

சாஸ்தா கோவில் வழிபாடுகள் அனைத்தும் குலதெய்வ வழிபாடு போன்றே தனித்து அமைந்திருக்கிறது. இருப்பினும், பல சமூகத்தினர் இணைந்து வழிபடும் கோவில்களாகவே சாஸ்தா கோவில்கள் இருக்கின்றன. பங்குனி உத்திர நாளில் சாஸ்தா கோவிலுக்குக் குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்தால், அந்தக் குடும்பத்தினரின் துன்பங்கள் அனைத்தும் தொலைந்து, அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

சாஸ்தாவிற்குச் சர்க்கரைப் பொங்கலிட்டு வழிபடும் பக்தர்கள், கோவிலில் சைவ உணவையே உண்கின்றனர். சில சாஸ்தா கோவில்களில் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல், கருப்பசாமி, சுடலை மாடன் போன்ற துணைக்கடவுளுக்கு ஆடு, கோழி போன்றவைகளைப் பலியிட்டு, அந்த இறைச்சியைக் கொண்டு அசைவ உணவு தயாரித்து பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.

சாஸ்தா கோவில் வழிபாடு என்பது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களிடமே அதிகம் காணப்படுகிறது. இம்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், இம்மாவட்டங்களிலிருந்து வெளியூர்களில் சென்று வசிப்பவர்களும் சாஸ்தா வழிபாட்டிற்காக ஆண்டுதோறும், பங்குனி உத்திர நாளில் தங்களுடைய சாஸ்தா கோவில்களுக்கு வந்து சாஸ்தாவை வழிபட்டு மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்கின்றனர்.

- தேனி மு. சுப்பிரமணி


அஷ்ட சாஸ்தாக்கள்

கிராமக் கடவுளான சாஸ்தாவின் உருவம் எட்டு வகையாக வடிவமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த எட்டு வகையான சாஸ்தாக்களையும் வடமொழிப் பயன்பாட்டில் ‘அஷ்டசாஸ்தா’ என்று சொல்கின்றனர்.

சந்திரனைப் போல் குளிர்ச்சியான அருளை வழங்கி இல்லற வாழ்க்கையை இனிமையாக்கக் கூடியவராக இருக்கும் வடிவிலான சாஸ்தாவை ‘சம்மோகன சாஸ்தா’ என்றும், திருமணத் தடைகளை நீக்கித் திருமணத்தை விரைவில் நடத்திட உதவும் வடிவிலிருக்கும் சாஸ்தாவை ‘கல்யாண வரத சாஸ்தா’ என்றும், இறை பக்தியுடன் ஆன்மிகப் பணியில் மகிழ்ச்சி தேடுபவர்களுக்கு உதவும் வடிவிலான சாஸ்தாவை ‘வேத சாஸ்தா’ என்றும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தைகளை அளித்து, அக்குழந்தைகளின் வழியாகக் குடும்பத்தில் மகிழ்ச்சியடையச் செய்யும் வடிவில் அமைக்கப்பட்ட சாஸ்தாவை ‘சந்தான ப்ராப்தி சாஸ்தா’ என்றும் சொல்கின்றனர்.

வாழ்க்கையில் வரும் அனைத்து தோசங்களையும் நீக்கிப் பெரும் மகிழ்ச்சியளிக்கும் வடிவில் அமைந்த சாஸ்தாவை ‘மகா சாஸ்தா’ என்றும், கல்விச் சிறப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் வடிவத்திலான சாஸ்தாவை ‘ஞான சாஸ்தா’ என்றும், சனிக்கிரகத் தோசத்தினால் வரும் துன்பங்களிலிருந்து காத்தருளும் சாஸ்தாவை ‘தரும சாஸ்தா’ என்றும், தீயசக்திகளிடமிருந்து காக்கும் கடவுளாகக் குதிரை மீது அமர்ந்த நிலையில் இருக்கும் சாஸ்தாவை ‘வீர சாஸ்தா’ என்றும் அழைக்கின்றனர்.

இந்த எட்டு சாஸ்தாக்களையும் வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் அனைத்து வளங்களும் கிடைப்பதுடன், மகிழ்ச்சியும் சேர்ந்து கிடைக்கும்.

கணியான் கூத்து

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருக்கும் குலதெய்வக் கோவில்களில் நடைபெறும் கொடை விழாவில் (கோடை காலங்களில் நடத்தப்படும் விழா என்பதால், முன்பு கோடை விழா என்று அழைக்கப்பட்டுப் பிற்காலத்தில் கொடை விழா என்று மாற்றமடைந்திருக்கலாம்) ‘கணியான் கூத்து’ என்கிற ஒரு கிராமியக்கலை இடம் பெறுகிறது. இந்தக் கணியான் கூத்தில் குலதெய்வத்தின் வரலாற்றுக்கு முன்பாக, சாஸ்தாவின் வரலாறுதான் முதலில் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சங்ககாலத்தில் சாஸ்தா

சங்கப் பாடல்களில் இடம் பெற்றிருக்கும் புலவர்களில், பாண்டியன் கீரன் சாத்தன், அரசன்கிழார் மகனார் பெருஞ்சாத்தன், ஒக்கூர் மாசாத்தியார், பிரான் சாத்தனார், பெருந்தோள் குறுஞ்சாத்தன், மோசி சாத்தனார், மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச்சாத்தனார் என்று பலரின் பெயர்களில் ‘சாத்தன்’ என்ற பெயர் இடம் பெற்றிருக்கிறது. சாஸ்தாவின் தமிழ்ப் பெயரே சாத்தன் என்று சொல்பவர்களும் இருக்கின்றனர். இந்தப் புலவர்களில் ஒக்கூர் மாசாத்தியார் மட்டும் பெண் புலவர் என்பதால், அவர் சாத்தன் என்ற சொல்லின் பெண்பாலான ‘சாத்தி’ என்ற பெயரைக் கொண்டிருந்தார் என்றும் சொல்கின்றனர்.

மஹத்பூதமே சாஸ்தா

தசரதர் குழந்தைப்பேறு வேண்டிச் செய்த வேள்வியின் போது, அந்த வேள்வித் தீயிலிருந்து கையில் குழந்தைப்பேறு அளிக்கும் பாயசத்துடன் ஒருவர் தோன்றினார். அப்படித் தோன்றியவரை அங்கிருந்தவர்கள் ‘மஹத்பூதம்’ என்று அழைத்ததாக வால்மீகி தான் எழுதிய ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளார். வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மஹத்பூதமே, சாஸ்தா என்று சிலர் சொல்கின்றனர். பூதமாகத் தோன்றிய சாஸ்தாவுக்குப் பூதநாதன், பூதத்தான் என்கிற பெயர்களும் இருக்கின்றன என்றும் சொல்லப்படுகிறது. 

Next Story