கைரேகை அற்புதங்கள் : அதிர்ஷ்ட ரேகை யாருக்கு?


கைரேகை அற்புதங்கள் : அதிர்ஷ்ட ரேகை யாருக்கு?
x
தினத்தந்தி 10 May 2018 9:30 PM GMT (Updated: 10 May 2018 9:45 AM GMT)

சொல்லிவிட்டு வீட்டுக்கு வருவது விருந்தாளிகள். சொல்லாமல் வீட்டுக்கு வந்து வாசல் கதவைத் தட்டுவதுதான் அதிர்ஷ்டம். இந்த அதிர்ஷ்டம் எந்த நேரத்திலும் வரலாம். அப்படி வரும் போது, அதை வரவேற்பதும், உபசரிப்பதும் நமது கடமை.

நம் வாழ்க்கையில் வரும் அதிர்ஷ்டத்தை திடீரென்று கொடுப்பது, நமது முன்ஜென்ம யோகம், பூர்வ புண்ணியம். ஒருவர் ஜாதகத்தில் 5-ம் பாவமான பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமாக அமைந்திருந்தால், அந்த நபருக்கு அதிர்ஷ்டம் தானாக வீட்டு வாசலைத் தட்டும். சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு இருந்தால், ‘கஜகேசரி’ என்னும் சிறப்பான யோகம் உண்டாகும். பொருள் வரவு, வறுமையில் இருந்து விடுபடுதல், சாதனையாளர் என்ற பட்டம் போன்ற சுப பலன்கள் திடீரென்று உண்டாகும்.

குரு, தான் வீற்றிருக்கும் இடத்தில் இருந்து 5-ம் வீட்டைக் கால்பங்கு பார்வையாகவும், 9-ம் வீட்டை முக்கால் பங்கு பார்வையாகவும், 7-ம் வீட்டை முழு பார்வையாகவும் பார்க்கும். ஜென்ம ராசியில் இருந்து 2, 5, 7, 9, 11 ஆகிய வீடுகளில் குரு பகவான் சஞ்சாரம் செய்யும் போது, அந்த ஜாதகருக்கு குருவின் பரிபூரண பலம் உண்டு என்றும், வாழ்க்கையில் திடீர் அதிர்ஷ்டம் உண்டு என்றும் ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. ஜென்ம ராசிக்கு 3, 4, 8, 10, 12 ஆகிய வீடுகளில் சஞ்சாரம் செய்யும் போது குரு பலம், அதிர்ஷ்டம் குறைந்த காலம் என்று பொருள் கொள்ள வேண்டும்.

இனி கைரேகை சாஸ்திரப்படி மச்ச ரேகை அல்லது அதிர்ஷ்ட ரேகை எப்படி அமைந்திருக்கும் என்பதைப் பார்க்கலாம். அதிர்ஷ்ட ரேகை என்பது எல்லோரது கைகளிலும் இருக்காது. சூரிய ரேகையானது ஆயுள் ரேகைக்கு அருகில், சந்திர மேட்டில் உற்பத்தியாகி, மோதிர விரலுக்கு அடியில் உள்ள சூரிய மேடு வரைச் செல்லும். சூரிய ரேகையானது கலை, ஞானம், சங்கீதம், உயர்கல்வி, நடனம் முதலியவற்றில் விசேஷ ஞானத்தைக் குறிக்கும்.

ஒருவர் கையில் (ஆணாக இருப்பில் வலது கை, பெண்ணாக இருப்பின் இடது கை) சுக்ர மேடு நன்றாக அமைந்து, சுக்ர மேட்டில் வெட்டுக்குறி அடையாளங்கள் இன்றி சுத்தமாக அமைந்திருப்பது மிக மிக அவசியம். அதே சமயம் அவரது பெருவிரல் (விரல்களைச் சேர்த்து வைக்கும்போது) பின்புறம் சற்று வளைந்து அமைந்திருக்க வேண்டும். அடுத்ததாக சூரிய மேட்டில் சூரிய ரேகை செங்குத்தாக ஒரே மாதியாக அமைதல் கூடாது. ஏணி போன்ற அடையாளத்துடன் சூரிய ரேகை கையில் இருக்குமானால், அந்த நபருக்கு மச்ச ரேகை என்னும் அதிர்ஷ்ட ரேகை உண்டு என்றும், அவருக்கு திடீரென்று எதிர்பாராத விதமாக திடீர் அதிர்ஷ்டம் வந்து சேரும் என்றும் சொல்லலாம்.

- கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ.

Next Story