“ரமலானை வரவேற்போம்...!”


“ரமலானை வரவேற்போம்...!”
x
தினத்தந்தி 11 May 2018 1:00 AM GMT (Updated: 10 May 2018 11:02 AM GMT)

ரமலான் நோன்பு புனிதம் மிக்கது; மனிதம் மிக்கது. பசி என்றால் என்ன என்பதை அனைவருக்கும் புரியவைப்பது; சுய உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் அடக்கிவைப்பது; சுய கட்டுப்பாட்டுடன் நாம் வாழக்கற்றுக் கொள்வது... என பல்வேறு படிப்பினைகளை கற்றுத்தருவது தான் இப்புனித நோன்பு.

‘ரமலான்’ என்ற அரபுச்சொல்லிற்கு ‘கரித்தல்’, ‘எரித்தல்’, ‘பொசுக்குதல்’ என பல பொருள்கள் உண்டு. இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன்பு தொடங்கி, அஸ்தமனம் வரை உண்ணாமல், பருகாமல் இருந்து, முறையாக பிரார்த்தனைகள் செய்து, ஏழைகளுக்கு வாரிவழங்கி, இறைவன் வகுத்த கடமைகளை செய்வதன் மூலம் நமது பாவக்கறைகளை போக்கிவிடலாம்.

இந்த மாதத்தில் தான் சர்வதேசத்திற்கும் வழிகாட்டியான சங்கைமிகு திருக்குர்ஆன் இறங்கப்பெற்றது என்பதால், இந்த ரமலான் மாதம் எத்தகைய சிறப்பு மிக்கது என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

ரமலான் மாதத்தின் சிறப்பு குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

‘ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய)தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டும் திருக்குர்ஆன் (என்னும் வேதம்) இறக்கப்பட்டது. அது (நன்மை, தீமையைப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக்கூடிய வசனங்களை உடையதாகவும் இருக்கிறது.

ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும். ஆனால் (அக்காலத்தில் உங்களில்) யாராகிலும் நோயாளியாகவோ அல்லது பிரயாணத்திலோ இருந்தால் (ரமலான் அல்லாத) மற்ற நாள்களில் (விட்டுப் போன நாள்களின் நோன்பைக்) கணக்கிட்டு (நோற்று)விடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவா(ன கட்டளையைக் கொடு)க்க விரும்புகிறானே தவிர கஷ்டத்தை (கொடுக்க) விரும்பவில்லை.

மேலும் (தவறிய நாள்களைக் கணக்கிடும்படி கட்டளையிட்டதெல்லாம், உங்கள்மீது கடமையாக உள்ள ஒருமாத நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமை செய்வதற்காகவும்; (அவ்வாறே) அல்லாஹ் உங்களை நேரான பாதையில் நடத்தியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; (நோய், பிரயாணம் போன்ற சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்காதிருக்க உங்களுக்கு அனுமதி வழங்கியதற்காக) நீங்கள் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதற்காகவுமே ஆகும்’. (திருக்குர்ஆன் 2:185)

நோன்பு என்பது மனிதர்களை சிரமப்படுத்துவதற்காக வந்த ஒன்றல்ல. மனிதர்கள் அனைவரும் ஈருலகிலும் சிரமம் இல்லாமல் வாழ்வதற்காக அல்லாஹ்வால் உருவாக்கப்பட்ட ஒன்று தான் இந்த ரமலான் நோன்பு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருமாதத்திற்கு முன்பிருந்தே நோன்புக்கு தயாராகி விடுவார்கள் என்பது நபிமொழியாகும்.

மனிதர்களுக்கு கடமையான இந்த நோன்பு குறித்த திருக்குர்ஆன் வசனம் வருமாறு:

‘ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்’. (2:183)

நோன்பு நமக்கு மட்டும் கடமையாக்கப்படவில்லை. நமக்கு முன் வாழ்ந்த சமூகத்தினர் மீதும் இந்த நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது என்பதை இந்த வசனத்தின் மூலம் நாம் அறியலாம். மேலும், இந்த நோன்பின் மூலம் நமக்கு கிடைக்கும் பலன் என்ன என்பதையும் இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது.

அதாவது, இந்த நோன்பின் மூலம் நாம் இறையச்சம் உடையோராக ஆகலாம். ரமலான் மாதத்தில் நாம் கடைப்பிடிக்கும் இந்த நோன்பு நம்மை இறையச்சம் மிக்கவர்களாக மாற்றும் சிறப்பு மிக்கது என்பதை இதன்மூலம் நாம் அறியலாம்.

மனித வாழ்வு சிறக்க இறையச்சம் மிக அவசியம். அந்த அற்புதமான இறையச்சத்தை இந்த நோன்பு நமக்கு வாரிவாரி வழங்குகிறது. ரமலான் நோன்பின் மூலம் அந்த இறையச்சத்தை நாம் பெறலாம் என்றால், அதை பயன்படுத்திக்கொள்வது தானே புத்திசாலித்தனம்.

இறையச்சம் இல்லாமல் செய்யப்படும் எந்த பிரார்த்தனைகளும் இறைவனிடம் ஏற்கப்படுவதில்லை. மேலும் இறையச்சம் உள்ளவர்களுக்குத் தான் நேர்வழியில் வாழும் வாய்ப்பும் கிடைக்கும். இதன் மூலம் இறையச்சமற்ற எந்த ஒரு செயலும் வீண் என்பதை எளிதாக நாம் புரிந்து கொள்ளலாம்.

இறையச்சம் என்பது அல்லாஹ்வை அஞ்சுவது மட்டுமல்ல. அவன் விதித்தவைகளை ஏற்று நடக்க வேண்டும், அவன் விலக்கியவைகளை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும்.

அப்படி நடக்கும் போது தான் கட்டுப்பாடு என்பது நமக்குள் உருவாகும். ஒருவனுக்கு சுயக்கட்டுப்பாடு வந்து விட்டால் அவனை எந்த துன்பமும் அணுக யோசிக்கும். அந்தக் கட்டுப்பாடு நமக்கு வர உதவுகிறது இந்த புனித ரமலான் நோன்பு.

உடலின் ஆசைகளையும்,  உயிரின் ஆசைகளையும் நோன்பு நிச்சயம் தடுத்து நிறுத்தும். அதற்கு முதலில் நாம் நமது நோன்பை இறைவன் வகுத்த வழியில் கடைப்பிடிக்க வேண்டும். சும்மா பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் அல்ல நோன்பு. இறைவன் காட்டிய வழியில் நோன்பை கடைப்பிடிப்பது தான் சிறப்பு மிக்கது.

இதனால்தான், ‘நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலிகொடுப்பேன்’ என்கிறான் அல்லாஹ்.

இந்த பாக்கியம் நோன்பாளிகளுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அத்தகைய சிறப்பு மிக்க ரமலானைப் போற்றுவோம், இறைவன் காட்டிய வழியில் நோன்பிருந்து  இறையச்சத்தைப் பெறுவோம்.

- மவுலவி எஸ்.என்.ஆர்.ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.

Next Story