ஆனந்தம் தரும் அறுபடை வீடுகள்


ஆனந்தம் தரும் அறுபடை வீடுகள்
x
தினத்தந்தி 23 May 2018 4:45 AM GMT (Updated: 23 May 2018 4:45 AM GMT)

நெருப்புப் பிழம்பான ஈசனின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப்பெருமான். அவர் அவதரித்தது, வைகாசி மாதம் விசாக நட்சத்திரம் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

அன்றைய தினம் முருகப்பெருமான் வீற்றிருக்கும் அனைத்து தலங்களிலும் வைகாசி விசாகத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த நாளில் முருகனின் அறுபடை வீடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அவைகளை இங்கே பார்ப்போம்.

திருப்பரங்குன்றம்

அறுபடை வீடுகளில் முதலும் மூலாதாரமுமான திருத்தலம் இது. முருகப்பெருமான் சூரனை வதம் செய்தபின், இந்திரனின் மகள் தெய்வானையை கைப்பற்றிய சிறப்புமிகு தலம் திருப்பரங்குன்றம். அழகில் சிறந்த முருகன் தனது மனைவி தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார்.

முருகனின் உருவம் புடைப்புச் சிற்பமாக அமைந்திருப்பதால், இங்கு ஞானத்தின் அடையாளமாக விளங்கும் பார்வதி தேவி முருகப் பெருமானுக்கு அளித்த வேலுக்குத் தான் அபிஷேகம் நடைபெறுகிறது. இங்கு சரவணப்பொய்கை, லட்சுமி தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் உள்ளன. தெய்வத்திருமணங்களில் புகழ்பெற்ற முருகன்- தெய்வானை திருக்கல்யாணம் தேவர்கள் சூழ நடைபெற்ற தலம் என்பதால், திரு மணத் தடை இருப்பவர்கள் இங்கு திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்யலாம். இதனால் விரைவில் திருமணம் நடைபெறும்.

இவை மட்டுமின்றி, ஈசனையே எதிர்த்து வாதம் புரிந்ததுடன் ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்ற நக்கீரர் வாழ்ந்த புண்ணிய பூமி இது. பவுர்ணமியன்று இம்மலையை கிரிவலம் வருவதும் நன்மை அளிக்கும். மலையின் தென்புறம் உள்ள சமணர்காலத்திய குடைவரைக் கோவில்களும், மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலும், வற்றாத சுனையும், மச்சமுனி எனும் சித்தரின் சமாதியும் இத்தலத்தின் சிறப்புகளாகும்.

மதுரை- திருநெல்வேலி மார்க்கத்தில் உள்ள இத்தலத்தில் முருகனுக்குரிய அனைத்து விழாக்களும் கொண்டாடப்பட்டாலும், வைகாசிப்பெருவிழா முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.

திருச்செந்தூர்

முருகன் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளில், இரண்டாவது தலம். கடற்கரையோரம் எழிலாக அமைந்திருக்கும் இந்த ஆலயம், சூரபதுமனை முருகப்பெருமான் அழித்த இடம். இங்கு ராஜ அலங்காரத்தில் சண்முகனாக, கைகளில் அன்னை தந்த வேல் தாங்கி வெற்றிவீரனாக அருள் கிறார் முருகப்பெருமான்.

பிறப்பால் ஊமையான குமர குருபர சுவாமிகள், தனது ஐந்தாவது வயதில் இத்தலம் வந்து பேசும் திறனைப் பெற்ற அதிசய தலம் திருச்செந்தூர். முருகன் தன் கைகளில் ருத்ராட்ச மாலையும் தாமரை மலரும் கொண்டு பூஜிக்கும் அருட் கோலத்தில் இங்கு காட்சி தருகிறார்.

இங்குள்ள நாழிக் கிணறு மற்றும் கடல் தீர்த்தங்கள் இங்கு வரும் பக்தர்களின் அனைத்து நோய்களையும் போக்கும் ஆற்றல் கொண்டது.

இந்த ஆலயத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ராஜகோபுரம் மிகவும் பெரியது. மூலவரான சுப்பிரமணியர் கிழக்கு பார்த்தும், சண்முகம் தெற்கு நோக்கியும் அருள்புரிகின்றனர். கருவறையின் வடக்குப்பகுதியில் உள்ள சிறிய வாசலில் நுழைந்து சென்றால், முருகப்பெருமான் வழிபட்ட பஞ்ச லிங்கங்களை தரிசிக்கலாம்.

ஐப்பசியில் இங்கு நடைபெறும் கந்தசஷ்டிப் பெருவிழா வெகு பிரசித்தம். சூரனை சம்ஹாரம் செய்த இடம் என்பதால் அந் நாளில் நிகழும் சூரசம்ஹாரத்தைக் காண பல லட்சம் பக்தர்கள் கூடுவது தனிச்சிறப்பு.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலத்திற்குச் செல்ல ெரயில் வசதிகளும், பேருந்து வசதிகளும் உண்டு.

திருவாவினன்குடி (பழநி)

கந்தனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது தலம் இது. பழநி மலையடிவாரத்தில் சற்று மேல்புறத்தில் அமைந்துள்ளது திருவாவினன்குடி ஆலயம். திருமகளும், அலைமகளும், காமதேனுவும் பூஜித்த தலம். மலை உச்சியில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சிலை நவபாஷாணத்தால் செய்யப்பட்டது. இதனைச் செய்தவர் சித்தர்களில் ஒருவரான போகர்.

சித்திரை மாதம் அக்னி நட்சத்திர காலத்தில் நவபாஷாண சிலையை, இங்கு போகர் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது. எனவே அக்னி நட்சத்திர நாட்கள் இங்கு விசேஷமாக உள்ளது. ஆண்டி கோலத்தில் மேற்கு நோக்கி அருளும் இத்தல இறைவன், இங்கு பாலகனாக வீற்றிருக்கிறார்.

இங்கு இறைவனின் நவபாஷாண சிலையின் மீது சாத்தப்பட்ட சந்தனம், மிகவும் புனிதமான பிணி தீர்க்கும் மருந்தாக மாறுகிறது. இங்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தமும், விபூதியும் கூட நம்பினோரின் நோய்களை நீக்கி நன்மை செய்கிறது. இந்த ஆலயத்திற்கு காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது பிரசித்தி பெற்ற நிகழ்வாகும்.

போகர் முனிவருடன் அருணகிரிநாதர், நந்தியடிகள், தேவராய சுவாமிகள், நக்கீரர் போன்ற எண்ணற்ற முனிவர்கள், சித்தர்கள் இங்கு வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலத்திற்கு செல்ல தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பேருந்து வசதி உள்ளது.

திருவேரகம் (சுவாமிமலை)

முருகப்பெருமான், தன் தந்தையான ஈசனுக்கே உப தேசம் செய்த தலமான சுவாமிமலை. இது அறுபடை வீடுகளில் நான்காவதாக குறிப்பிடப்படுகிறது. சுவாமி என்பது இங்கு எல்லோருக்கும் பெரியவனாகிய சிவபெருமானையேக் குறிக்கிறது. இருப்பினும் மகனுக்கு சீடனாக இருந்து ஈஸ்வரன் உபதேசம் பெற்றதால், குருவாகிய முருகனுக்கு மேலே உயரத்தில் சன்னிதியும், கீழே சிவனுக்கு சன்னிதியும் அமைந்துள்ளது. இங்கு உள்ள 64 படிகளில் 60 படிகள் 60 ஆண்டுகளையும், 4 படிகள் 4 யுகங்களையும் குறிப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆலயத்தின் நுழைவு வாசலில் சிவனின் இடது தோளில், குழந்தையாக வடிவேலன் அமர்ந்து உபதேசம் செய்யும்காட்சி சுதை சிற்பமாக உள்ளது. பாம்பன் சுவாமிகள், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சாரியார் போன்ற பல யோகிகள் பாமாலை பாடி இங்குள்ள முருகனை துதித்துள்ளனர்.

இங்கு வழிபடும் பக்தர் களுக்கு கல்வி வளம், குழந்தைப் பேறு கிடைக்கும். குரு மூர்த்த சன்னிதி என்பதால், இங்கு உபநயனம் எனப்படும் பூணூல் விழாக்கள் நடத்துவது பிரசித்தமாகும்.

கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் சுமார் 3 கிலோ மீட் டர் தொலைவில் உள்ள இத்தலத்திற்குச் செல்ல வசதியாக பேருந்துகள் இயங்குகின்றன.

பழமுதிர்சோலை (அழகர்மலை)

அறுபடைவீடுகளில் முருக பக்தர்களின் மனம்கவரும் வகையில் அமைந்த தலம் இது. பசுமையான சூழலில் மலை மீது அமைந்துள்ள இந்த ஆலயத்தில் வள்ளி-தெய்வானையுடன் தம்பதி சமேதராக முருகப்பெருமான் அருள்புரிந்து வருகிறார். அழகர்கோவிலுக்கு மேலே சுமார் நான்கு கிலோமீட்டர் உயரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

தொடக்கத்தில் முருகனின் அம்சமாக வேல் வைத்து வழிபாடு நடைபெற்று வந்தது. தற்போது சிலை ரூபத்தில் பிரதிஷ்டை செய்து வணங்கும் முறை உள்ளது.

தமிழ்க் கடவுளான முருகன் சிறுவனாக வந்து, நாவல் மரத்திலிருந்து நாவல் பழங்களை உதிர்த்து தமிழ் மூதாட்டி அவ்வையிடம் ‘சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ எனக்கேட்டு வாழ்வின் தத்துவத்தை விளக்கிய தலம் இது. ‘பழம் உதிர் சோலை’ என்பதே ‘பழமுதிர்சோலை’ என்றானது.

இதன் அருகே உள்ள நூபுரகங்கை எனும் தீர்த்தம் மிக பிரசித்தி பெற்றது. இதன் உற்பத்தி ஸ்தானத்தை இன்னும் கண்டறிய முடியாததே இதன் சிறப்பு. இங்குள்ள தீர்த்தங் களுக்கு காவல் தெய்வமாக ராக்காயி அம்மன் உள்ளார். இவருக்கு அமாவாசை தினத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

பழமுதிர்சோலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகர் கோவிலும் பிரசித்தி பெற்றது என்பதால் இங்கு வரும் பக்தர்கள் ஏராளம்.

திருத்தணி

சூரபதுமனையும், அவனது சகோதரர்களான சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோரையும் முருகப்பெருமான் வதம் செய்தார். அவர்களின் அழிவு வழி போர்க் கோலத்துடன் ஆவேசமாக இருந்த முருகப்பெருமான், தன்னுடைய கோபம் தணிய வந்து அமர்ந்த தலம் திருத்தணி. ‘செரு’ என்றால் கோபம் என்றும், ‘தணி’ என்றால் ‘குறைதல்’ என்றும் பொருள். முன்காலத்தில் ‘செருத்தணி’ என்று அழைக்கப்பட்டு வந்த ஊரே தற்போது ‘திருத்தணி’ என்று வழங்கப்படுவதாக கூறுகிறார்கள்.

முருகப்பெருமானின் ஐந்தாவது வீடு இது. முருகப்பெருமான், குறத்திப் பெண்ணான வள்ளியை மணம் புரிந்து கொண்டதும் இந்தத் தலத்தில்தான். சுமார் 400 அடி உயரமுள்ள சிறிய மலைமீது பக்தர்கள் செல்ல வசதியாக 365 படிகள் உள்ளன. வருடத்தின் நாட்களை இப்படிகள் குறிப்பதாக சொல்லப்படுகிறது.

தணிகைநாதன், தணிகேசர், தணிகைவள்ளல் என்றெல்லாம் புகழப்படும் இந்த தல நாயகனுக்கு ஆடிக்கிருத்திகை மிகவும் விசேஷம். வள்ளிமலை திருப்புகழ் சுவாமிகள் தொடங்கி வைத்த திருப்படி பூஜையும் இங்க நடைபெறுகிறது.

அருணகிரிநாதர், முத்துசாமி தீட்சிதர், ராமலிங்க வள்ளலார், கச்சியப்ப தேசிகர் போன்ற மகான்கள் இங்கு வந்து தணிகைநாதனின் அருட்பார்வை பெற்றுள்ளனர்.

வேலூர் மாவட்டம் அருகே உள்ள இத்தலத்திற்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

- சேலம் சுபா

Next Story