மகாலட்சுமிக்கு அருளிய லட்சுமிபுரீஸ்வரர்


மகாலட்சுமிக்கு அருளிய லட்சுமிபுரீஸ்வரர்
x
தினத்தந்தி 23 May 2018 6:15 AM GMT (Updated: 23 May 2018 6:15 AM GMT)

சோழ மன்னனான கோச்செங்கோட்சோழன், தில்லை என்னும் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க விரும்பினான். அதற்காக தனது மந்திரியுடனும், படைவீரர்களுடனும் தில்லை நோக்கிப் பயணமானான்.

 மன்னன் பல்லக்கிலும், மந்திரியும் மற்ற வீரர்களும் நடந்தும் பயணத்தைத் தொடர்ந்தனர். பகலிலும் இரவிலும் நடந்த அவர்கள் இரவில், காடா விளக்கின் துணையோடு காட்டுப்பகுதியைக் கடந்தனர்.

திருநின்றியூர் என்ற ஊரை அடைந்த போது நன்றாக இருட்டிவிட்டது. காடா விளக்குடன் அவர்கள் நடக்க முயன்ற போது, அந்த ஊரின் எல்லையைத் தொட்டதும் அனைத்து காடா விளக்குகளும் அணைந்தன. மீண்டும் ஏற்றிய போதும் அவை மறுபடியும் அணைந்தன.

விளக்கு அணைந்ததால், நல்ல கும்மிருட்டு. தட்டுத் தடுமாறி, ஊரின் எல்லையைக் கடந்த பின்னர், காடா விளக்கை ஏற்ற அது நன்றாக எரிந்தது.

மன்னருக்கும் உடன் வந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. தில்லை சென்று ஆடலரசனை தரிசனம் செய்துவிட்டு மன்னரும் மற்றவர்களும் திரும்பினர். வரும் வழியில் திருநின்றியூரில் மறுபடியும் காடா விளக்குகள் குறிப்பிட்ட அதே இடத்திற்கு வந்ததும் அணைந்தன. இதற்கு என்ன காரணம் என்று அறிந்து வர மந்திரியை பணித்தார் மன்னர்.

விடிந்தது.. மந்திரி யாரிடமாவது கேட்கலாம் என நினைத்து சுற்றிலும் பார்வையை படரவிட்டபோது, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் தென்பட்டான்.

அவனை அழைத்து இந்த ஊரில் ஏதாவது விசேஷம் உண்டா? எனக்கேட்டார் மந்திரி. ‘உண்டு’ என்ற அந்தச் சிறுவன்.. ‘தினம் இரவில் காமதேனு வானிலிருந்து இங்கே ஓரிடத்தில் வந்து இறங்கி, அங்கே பாலை சுரக்கிறது’ என்று ஓரிடத்தை சுட்டிக்காட்டினான். வியந்த மன்னரும், மந்திரியும் அவன் சுட்டிக் காட்டிய இடத்தை நோக்கி நடந்தனர். சிறிது தொலைவு சென்றதும் மன்னரின் கால் சேற்றில் மாட்டிக் கொண்டது. அதிலிருந்து விடுபட அவரால் இயலவில்லை.

மந்திரி பெரிய கல் போன்ற ஒரு இரும்பு குண்டைக் கொண்டு வந்தார். ‘மன்னா! இதை சேற்றில் ஊன்றி மேலே வாருங்கள்’ என்றார் மந்திரி.

அவர் சொன்னபடியே மன்னர் அந்த இரும்பு குண்டை வாங்கி தரையில் பலமாக ஊன்றினார். மறுகணம் தரையிலிருந்து ரத்தம் பீரிட்டது. பதறிப்போன மன்னன் அந்த இடத்தை தோண்டச் செய்ய அங்கே ஒரு சிவலிங்கம் இருக்கக்கண்டார். அனைவருக்கும் வியப்பு. மன்னன் கண்டெடுத்த அந்த சிவலிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து ஒரு ஆலயம் கட்டப்பட்டது. அந்த ஆலயமே திருநின்றியூரில் உள்ள ‘லட்சுமி புரீஸ்வரர்’ ஆலயம்.

கோவில் அமைப்பு

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் அகன்று விரிந்த பிரகாரம். நடுவே நந்தியும் பலிபீடமும் உள்ளன. தொடர்ந்து சிறப்பு மண்டபமும், இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் அருள்பாலிக்க இருபுறமும் துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர். அதை அடுத்து மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் உள்ளது. கருவறையில் இறைவன் சிவலிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.



மகாமண்டபத்தின் வலதுபுறம் இறைவி உலகநாயகி, நான்கு கரங்களுடன் தென் திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னையின் மேல் இரு கரங்களில் பத்மமும், அட்சயமாலையும் அலங்கரிக்க கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகின்றன.

இறைவனின் தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை திருமேனிகள் அருள்புரிகின்றன. திருச்சுற்றில் பிள்ளையார், பரிகேஸ்வரர், மகாவிஷ்ணு, பரசுராமர், சுப்ரமணியர், நால்வர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், சூரியன், பைரவர் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.

சுந்தரர், திருநாவுக்கரசர், சம்பந்தர் என மூவராலும் பாடப் பெற்ற தலம் இது. பல நூற்றாண்டுகளைக் கடந்த பழமையான இந்த ஆலயத்தில், திரிபுவன சக்கரவர்த்தி ராஜ ராஜ தேவனின் கல்வெட்டு ஒன்று சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவபெருமானை நினைத்து, மகாலட்சுமி வரம் வேண்டி தவம் இருந்த தலம் இது. அவளது தவத்தைக் கண்டு இரங்கிய சிவபெருமான், அவள் முன் தோன்றி ‘என்ன வரம் வேண்டும்?’ என வினவினார்.

மனம் மகிழ்ந்த மகாலட்சுமி, ‘தான் என்றும் விஷ்ணுவின் மார்பில் குடியிருக்க வேண்டும்’ என்று வேண்ட சிவபெருமானும் அப்படியே அருள்புரிந்தார் என்கிறது தல வரலாறு.

சிவபெருமான் லட்சுமிக்கு அருளியதால் இத்தலத்திற்கு லட்சுமிபுரம் என்ற பெயரும் உண்டு. அதனாலேயே இறைவன் லட்சுமிபுரீஸ்வரர் என்ற நாமகரணம் பூண்டார். அனுஷ நட்சத்திரக்காரர்கள் இந்த ஆலயத்தில் வழிபட்டால் அவர்களின் துன்பங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இத்தல இறைவிக்கு சந்தனக்காப்பிட்டு, அந்த சந்தனத்தை பிரசாதமாக தினமும் பயன்படுத்தினால், மகப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற சொல்படி தந்தை கட்டளையிட தன் தாயைக் கொன்றார் பரசுராமர். பிரம்மஹத்தி தோஷம் அவரைப் பற்றியது. தனது தோஷம் நீங்க இத்தல இறைவனை சரணடைந்து பாவவிமோசனம் பெற்றார் பரசுராமர். அவரது திருமேனி ஆலயத்தில் மேற்கு திருச் சுற்றில் தனி சன்னிதியில் உள்ளது.

ஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமியில் சிறப்பாக அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. பல நூறு பக்தர்கள் இறைவனை தரிசித்து அன்று பலன் பெறுகின்றனர்.

இந்தக் கோவிலில் தினசரி இரண்டு கால பூஜை நடக்கிறது. ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்


நாகை மாவட்டம் மயிலாடுதுறை - சீர்காழி பேருந்து தடத்தில் மயிலாடுதுறையில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது திருநின்றியூர். 

- செல்வி, திருச்சி

Next Story