அடியார் இடர்நீக்கும் அரத்துறைநாதர்


அடியார் இடர்நீக்கும் அரத்துறைநாதர்
x
தினத்தந்தி 20 Jun 2018 8:10 AM GMT (Updated: 20 Jun 2018 8:10 AM GMT)

பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, திருநெல்வாயில் அரத்துறை எனும் திருவட்டத்துறை திருத்தலம்.

திருஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துச்சிவிகை, முத்துக்குடை, பொற்சின்னங்கள் அருளிய தலம், மூவரால் பாடல் பெற்ற நடுநாட்டின் முதலாவது திருத்தலம், மகாவிஷ்ணு, ஆதிசேஷன், வான்மீகி முனிவர், செவ்வாய், சனி பகவான், ஜனக மன்னர் முதலானவர்கள் வழிபட்டுப் பேறு பெற்ற கோவில், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பெயரில் லிங்க மூர்த்தங்கள் அமைந்த தலம், நீவா நதிக்கரையோரம் அமைந்த தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, திருநெல்வாயில் அரத்துறை எனும் திருவட்டத்துறை திருத்தலம்.

புராண வரலாறு

ஆற்றங்கரையோரம் அமைந்த தலம் என்பதாலும், அரம் எனும் நாகம் வழிபட்டதாலும், அரத்துறை என வழங்கப்படுகிறது. இத்திருக்கோவிலின் அருகே ஓடும் வெள்ளாறு நதியில், பிரளய காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது இறைவனின் ஆணைக்கிணங்க, நந்திதேவர் ஆற்றினை திரும்பிப் பார்க்க, வெள்ளத்தின் வேகம் கட்டுப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் ஐதீகமாகவே இந்த ஆலயத்தில் அமைந்திருக்கும் நந்தி சிலை, ஆற்றின் திசைநோக்கி பார்க்கும் விதமாக அமைந்துள்ளது.

இதேபோல், இப்பகுதியில் சப்தரிஷிகள் ஏழு துறைகளில் தவம் இயற்றினர். அவை ஆதித்துறை, திருவாலந்துறை, திருமாந்துறை, திருஆடுதுறை, திருவதிட்டத்துறை, திருநெல்வாயில் அரத்துறை என்னும் திருவட்டத்துறை, திருச்சந்துறை. இந்த ஏழு துறைகளில் அரத்துறைநாதர் ஆலயம் ஆறாவது துறையாக அமைந்துள்ளது.

திட்டக்குடியில் ஓடிய வெள்ளாற்றை, திருஞானசம்பந்தர் இத்தலம் நோக்கி ‘நீ வா’ என்று அழைக்க, வெள்ளாறு, திட்டக்குடியில் இருந்து அருகில் வந்ததாக தல வரலாறு சொல்கிறது. இதனால் இந்நதி ‘நீவா நதி’ என்று பெயர் பெற்றது.

இத்தலத்தை, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என மூவரும் பாடி மகிழ்ந்துள்ளனர். இது தவிர, சேக்கிழாரின் பெரியபுராணம், வள்ளலாரின் திருவருட்பாவிலும் இத்தலம் குறித்த பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

தீர்த்தபுரீஸ்வரர்


மூலவர் திருப்பெயர் தீர்த்தபுரீஸ்வரர். இவரே ஆனந்தீஸ்வரர், அரத்துறைநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவன் கிழக்கு முகமாய் வட்ட வடிவ ஆவுடையாரில் ஒளிவீசும் திருமுகத்துடன் காட்சி அளிக்கின்றார். திருவட்டத்துறை உடைய மகாதேவர், திருவட்டத்துறை மகாவேதர், திருவட்டத்துறை உடைய நாயணார் என கல்வெட்டுகளில் இறைவனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்னை திரிபுரசுந்தரிக்கு, ஆனந்தநாயகி, அரத்துறை நாயகி என்ற திருப்பெயரும் உண்டு. அன்னை அரத்துறை நாயகி, மேல் இரு கரங்களில் பாசம், அங்குசம் தாங்கியும், கீழ் இரு கரங்களில், அபய வரத முத்திரை தாங்கியும் காட்சியளிக்கிறாள்.

விழாக்கள்

மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் உள்ளிட்ட விழாக்கள் எளிமையாக நடத்தப்படுகின்றன. பிற சிவாலய விழாக்களும் எளிய முறையில் நடைபெறுகின்றது.

நீவா நதியின் கரையோரம், கிழக்கு முகமாய் ஐந்துநிலை ராஜகோபுரத்தைக் கொண்டு ஆலயம் அமைந்துள்ளது. எதிரே, தலமரமான ஆலமரம், பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும், விநாயகர், சமயக்குரவர்கள், வான்மீகி முனிவர், சப்தமாதர்கள், லிங்கத் திருமேனிகள், மகாவிஷ்ணு, ஜோதிர்லிங்கம் உள்ளிட்ட சன்னிதிகள் அமைந்துள்ளன.

இதனையடுத்து, அண்ணாமலையார், ஆதிசேஷன், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், தண்டாயுதபாணி சுவாமி சன்னிதி, சரஸ்வதி, சேரலிங்கம், சோழலிங்கம், பாண்டியலிங்கம் என மூவேந்தர்களுக்கும் லிங்கத் திருமேனிகள் அமைந்துள்ளன. காசி விஸ்வநாதர், விசாலாட்சி, கஜலட்சுமி, சந்தானக் குரவர்கள், பைரவர், சூரியன், சந்திரன் சன்னிதிகள் அமைந்துள்ளன.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

அமைவிடம்

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில், கடலூர்- திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலையில், கடலூருக்கு மேற்கே 90 கி.மீ., திட்டக்குடிக்கு கிழக்கே 5 கி.மீ., தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. ஆவினன்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, தென்கிழக்கே 2 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. திருநெல்வாயில் அரத்துறை என்ற பெயர் இன்று, திருவட்டத்துறை என வழக்கில் உள்ளது.

- பனையபுரம் அதியமான்

மகம் வாசல்

இக்கோவிலில் கருவறைக்கு இடதுபுறம் மகம் வாசல் அமைந்துள்ளது. கணவனை இழந்த பெண்கள், ஓராண்டு முடிந்த பிறகு, இத்தல ஆற்றிற்கு சென்று குளித்து விட்டு, மகம் வாசல் வழியே ஆலயத்திற்குள் சென்று இறைவனை தரிசிப்பார்கள். பின்னர் அந்த வாசல் வழியாகவே மீண்டும் வெளியில் செல்வது ஐதீகமாக உள்ளது. இப்படிச் செய்வதால், இறந்த தன்னுடைய கணவர் நற்கதி பெறுவார் என்று அவர்கள் நம்புவதாக கூறப்படுகிறது.

கல்வெட்டுகள்

இவ்வாலயத்தில் கி.பி. 1949-50 இந்தியத் தொல்லியல் ஆய்வறிக்கை 22 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. முதலாம் ராஜராஜன் (கி.பி. 985), வீரராஜேந்திர தேவன் (கி.பி 1067), முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1107), விக்கிரம சோழதேவன் (கி.பி. 1120), இரண்டாம் ராஜாதிராஜன் (கி.பி.1168), மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1190) மூன்றாம் ராஜராஜன் (கி.பி. 1226) ராஜகேசரிவர்மன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. விருதராஜ பயங்கர வளநாட்டு, மேற்கால நாட்டு, முடிகொண்ட சோழ சதுர்வேதி மங்கலம் என, இன்றைய திருவட்டத்துறை நெல்வாயில் அழைக்கப்பட்டுள்ளது.

நிலக்கொடை, பசுதானம், பொற்காசு வழங்கியது போன்ற பல்வேறு விதமான கொடைகள் குறித்த விவரங்கள் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது. பக்தர்கள், சிவ பிராமணர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்கள் மூலம் பூஜைகள் நடத்தப்பட்ட விவரங்களும் இதில் கூறப்பட்டுள்ளன.


Next Story