தீர்த்தங்கள் பொங்கிய திருப்பூந்துருத்தி


தீர்த்தங்கள் பொங்கிய திருப்பூந்துருத்தி
x
தினத்தந்தி 7 Aug 2018 7:24 AM GMT (Updated: 7 Aug 2018 7:24 AM GMT)

ஆடி அமாவாசை நன்னாளில், பதிமூன்று கங்கைகள் பொங்கிய கிணறு இத்தலத்தின் தீர்த்தமாக இருப்பது விசேஷமான ஒன்றாகும்.

திருவையாறில் திருக்கயிலைக் காட்சி கண்ட திருநாவுக்கரசர், அங்கிருந்து புறப்பட்டு திருநெய்த்தானம், திருமழப்பாடி முதலிய தலங்களை தரிசித்தார். பின்னர் திருப்பூந்துருத்தியை அடைந்தார். அங்கே திருமடம் அமைத்து தங்கியிருந்து ஆலயத்தில் உழவாரப்பணிகள் செய்து தேவாரப்பதிகங்கள் பாடி பணிந்து நின்றார்.

இங்கு வந்த திருஞானசம்பந்தர், ‘திருநாவுக்கரசர் உழவாரப் பணி செய்த திருத்தலமாயிற்றே’ என்று கோவிலுக்குள் கால் பதிக்க அஞ்சி, வெளியில் இருந்தே ஈசனை வழிபட்டாராம். இதனைக்கண்ட ஈசன், சம்பந்தர் தம்மை தரிசிக்கும் பொருட்டு, இத்தல நந்தியை சற்று விலகி இருக்கச் சொன்னாராம். அதனால்தான் இத்தலத்தில் நந்தி விலகி உள்ளது என்கிறது ஆலய தலபுராணம்.

இத்தலத்தில் திருக்கயிலை நாதனே, ‘பொய்யிலியப்பர்’ என்னும் புஷ்பவனேஸ்வரராய் எழுந்தருளி இருப்பதாக சொல் கிறார்கள். அதற்கேற்ப இங்கும் திருவையாறு ஐயாறப்பர் கோவிலைப்போலவே, பிரகாரத்தில் வட கயிலை, தென் கயிலை என தனித்தனி கோவில்கள் உள்ளன. இத்தல அம்பாளின் திருநாமம் சவுந்திரநாயகி என்பதாகும். அன்னை தெற்கு நோக்கிய திசையில் எழுந்தருளியிருக்கிறார்.

ஆடி அமாவாசை நன்னாளில், பதிமூன்று கங்கைகள் பொங்கிய கிணறு இத்தலத்தின் தீர்த்தமாக இருப்பது விசேஷமான ஒன்றாகும். ஒரேக் கிணற்றில் ஒரே நாளில் பதிமூன்று கங்கைகள் (தீர்த்தங்கள்) எப்படி சாத்தியம்?.

ஒரு முறை முனிவர்கள் பலர் ஒன்று கூடி பேசிக் கொண்டிருந்தனர். ‘ஆடி அமாவாசை தினத்தில் வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்கமுகம், திருவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிரபரணி, ராமேஸ்வரம் ஆகிய பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்கும். பித்ரு சாபங்கள் விலகும். எனவே இந்த 13 புனித தீர்த்தங்களிலும் ஆடி அமாவாசை தினத்தில் நீராடி ஈசனை வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். ஆனால் யாரால் இது சாத்தியமாகும்?' என ஏக்கத்தில் பரிதவித்தபடி பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த காசிப முனிவர், ‘ஏன் முடியாது? நான் ஆடி அமாவாசை அன்று இந்த பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பிதுர் தர்ப்பணம் முடித்துக் காட்டுகிறேன்' என்றார்.

பின்னர் அவர், ஈசனை வேண்டி தவம் இயற்றி பல சிவத்தலங் களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூந்துருத்தி வந்தடைந்தார். அங்கும் ஈசனை வேண்டி தவம் இருந்தார். அவரது தவத்தை மெச்சிய இறைவன், ஆடி அமாவாசை அன்று காசிபருக்கு திருக்காட்சி கொடுத்தார். மேலும் 13 புனித தீர்த்தங்களையும், ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செய்தார். அந்தத் தீர்த்தம் தற்போது, காசிப தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. காசிபர் அந்த புனித நீரில் நீராடி, ஈசனையும், அம்பாளையும் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன்காரணமாக அவருக்கு ஈசனுடன் ஐக்கியமாகும் முக்திநிலை கிடைத்ததாக தலபுராணம் கூறுகிறது.

இத்தலத்தில் சோமாஸ்கந்த மண்டபத்தை அடுத்துள்ள பகுதியில், தென்கிழக்கு மூலையில் கிணறு வடிவில் உள்ளது காசிப தீர்த்தம். இத்தீர்த்தத்தின் அருகில் ஆதி விநாயகர், சம்பந்தர், அப்பர், பரவை மற்றும் சங்கிலி நாச்சியாருடன் சுந்தரர் ஆகியோர் உள்ளனர். ஆடி அமாவாசை நாளில் இத்தலத்தை கிரிவலம் வந்தால், பித்ரு சாபங்கள் நீங்கும்; செல்வ வளம் பெருகும்; தடைகள் அகலும்; தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம்.

ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று, இவ்வாலயத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. அன்றைய தினம் இத்தல காசிப தீர்த்தத்தில் நீராடினால் 13 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய முழுப் பலனும் கிடைக்கும். மேலும் இத்தலத்தை ஆடி அமாவாசை அன்று 18 முறை கிரிவலமாக வந்து ஈசனையும், உமையாளையும் வழிபட்டால், பித்ரு சாபங்கள் தீர்வதுடன், குல தெய்வத்தின் அருளும் பரிபூரணமாய் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

தஞ்சாவூரில் இருந்து திருக்கண்டியூர் வழியாக 13 கிலோ மீட்டர் தூரத்திலும், திருவையாறில் இருந்து திருக்கண்டியூர் வழியாக 7 கிலோமீட்டர் தூரத்திலும் திருப்பூந்துருத்தி அமைந்து உள்ளது. அருகிலேயே திருவாலம்பொழில் சிவாலயமும் உள்ளது. 

-சிவ.அ.விஜய்பெரியசாமி

Next Story