எந்த நிலையிலும் இறைவனை மறக்க வேண்டாம்


எந்த நிலையிலும் இறைவனை மறக்க வேண்டாம்
x
தினத்தந்தி 12 Sep 2018 10:44 AM GMT (Updated: 12 Sep 2018 10:44 AM GMT)

“இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்” என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி; தவிர, (இதை) நீர் மறந்து விடுங்கால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக;

இன்னும், “என்னுடைய இறைவன், நேர் வழியில் இதை விட இன்னும் நெருங்கிய (விஷயத்)தை எனக்கு அறிவிக்கக்கூடும்” என்றும் கூறுவீராக. (திருக்குர்ஆன் 18:24)

அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் ‘ஹிஜ்ரத்’ செய்து மக்காவில் இருந்து மதீனாவை சென்றடைந்து ஏகத்துவ பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். ‘இறைவன் ஒருவனே, அவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை’ என்ற நபிகளாரின் பிரச்சாரத்தில் இருந்த உண்மையும், சத்தியமும் உலக மக்களை வெகுவாக கவர்ந்தது.

சத்தியமும், உண்மையும் நிறைந்த திருக்குர்ஆன் வசனங்கள் மக்கள் சிந்தனையை தூண்டியது. இஸ்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் வேரூன்ற ஆரம்பித்தது. பகுத்தறிவின் பாதையில் மக்களின் சிந்தனையை கிளரச்செய்த எம் பெருமானாரை பின்தொடர்ந்து மக்கள் சாரைசாரையாக இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இஸ்லாமின் இந்த அசுர வளர்ச்சியை, யூதர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. யூதர்களின் ‘தவ்ராத்’ வேதத்தில், முஹம்மது நபி அவர்களின் வருகை பற்றியும், அவரது அங்க அடையாளம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி முஹம்மது நபி அவர்கள் தான் தங்கள் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘அஹ்மத்’ என்ற முஹம்மது என்பதை தவ்ராத் வேதத்தை நன்றாக கற்று அறிந்த யூத அறிஞர்கள் உணர்ந்திருந்தனர். இருந்தாலும் நபிகளாரை சோதிக்கவே அவர்கள் விரும்பினார்கள். மேலும், அவர் உண்மையான நபி அல்ல என்று விஷமப்பிரச்சாரம் செய்யவே அவர்கள் திட்டமிட்டனர்.

இதையடுத்து நயீர் இப்னு ஹாரிஸ், அஜபா இப்னு முஇயீத் என்பவர்கள் நபிகளாரை அணுகி கீழ்க்கண்ட மூன்று கேள்விகள் கேட்டனர். ‘தவ்ராத் வேதத்தில் உள்ள இந்த மூன்று கேள்விகளுக்கும் நீங்கள் சரியான பதிலை சொல்லிவிட்டால் நீங்கள் தான் உண்மையான இறைத்தூதர் என்று நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். சரியான பதிலைக்கூறவில்லை என்றால் உங்கள் ஏகத்துவப்பிரச்சாரத்தை உடனே நிறுத்த வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

அவர்கள் கேட்ட அந்த கேள்விள் இதுதான்..

1) ‘ரூஹ்’ என்றால் என்ன?

2) குகைவாசிகள் யார்? அவர்கள் செய்தி என்ன?

3) உலகம் முழுவதும் சுற்றிவந்த துல்கர்னைன் என்பவர் யார்?

நபிகளார் இந்த சவாலை ஏற்றுக்கொண்டார்கள். வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அடிக்கடி அண்ணலாரிடம் வந்து இறைவசனங்களை தெரிவித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. எனவே அவர்களிடம் கேட்டு இதற்குண்டான பதிலை சொல்லி விடலாம் என்று எண்ணிய நபிகளார் சற்றும் சிந்திக்காமல், ‘நாளை வாருங்கள், இதற்கான பதிலைச் சொல்கிறேன்’ என்பதாக கூறினார்கள்.

எந்த ஒரு செயலும் இறைவன் விரும்பினால், அவனது அருள் இருந்தால் தான் நடைபெறும் என்ற நம்பிக்கை இஸ்லாத்தில் உள்ளது. எனவே எந்த ஒரு செயல் பற்றி குறிப்பிடும் போது ‘இறைவன் நாடினால்’ என்ற பொருள் தரும் ‘இன்ஷா அல்லாஹ்’ என்ற சொல்லைச்சேர்த்தே குறிப்பிட வேண்டும். ஆனால் இதை நபிகளார் மறந்துவிட்டார்கள். இதையடுத்து இறைவனின் சோதனை இறங்கியது.

நபிகளார் எதிர்பார்த்தபடி அடுத்த நாள் வந்தது, ஆனால் ஜிப்ரீல் (அலை) வரவில்லை. இவ்வாறு பதினைந்து நாட்கள் கடந்தன, ஆனால் இறைச்செய்தி வந்தபாடில்லை.

யூதர்களும் மற்றவர்களும் இதை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்திக்கொண்டார்கள். நபிகளாருக்கு எதிராக தங்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார்கள். ‘முஹம்மது பொய்யர். அவர் இறைத்தூதர் இல்லை. எங்களின் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அவர் உண்மையாளராய் இருந்தால் தவ்ராத்தில் குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்க வேண்டுமே?’, என்று கேள்வி எழுப்பினார்கள்.

ஒவ்வொரு நாளும், ‘முஹம்மது இன்று பதில் சொல்லி விட்டாரா?’ என்று மக்களும் ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

பதினைந்து நாட்கள் கடந்த பின்னர் வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ‘வஹி’யோடு இறங்கினார்கள். “அண்ணலே! இனி எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் ‘இன்ஷா அல்லாஹ்’ என்று சொல்லியே தொடங்குங்கள்” என்ற அறிவுரையோடு, சூரா கஹ்ஃபு (குகை) என்ற பகுதியில் உள்ள வசனங்களை கூறினார்கள்.

“நபியே! அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்னும் குகைவாசிகளைப் பற்றி யூதர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். எந்த குகையுடையவர்களும், சாசனத்தையுடையவர்களும் நிச்சயமாக நம்முடைய அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்களாக இருந்தனர் என்று எண்ணுகிறீர்களோ! அவர்களின் சரித்திரத்தை உங்களுக்கு நாம் கூறுகிறோம்’’ (திருக்குர்ஆன் 18:9)

இந்த குகைவாசிகள் குறித்து திருக்குர்ஆன் வசனம் தெரிவிக்கும் கருத்துக்கள் இதோ...

மேற்காசியாவில் உள்ள நகரம் இபிஸியஸ். கி.பி. 249 - கி.பி. 251 வரை அந்த நகரை டிஷியஸ் என்ற மன்னன் ஆட்சி செய்துவந்தான். இவன் சிலை வணக்கம் செய்பவனாக இருந்தான். அப்போது சில இளைஞர்கள் சிலை வணக்கத்தை எதிர்த்தனர். அவர்கள் ஏக இறைவனை வணங்கினார்கள். (அந்த வாலிபர்களின் எண்ணிக்கை 3, 5 மற்றும் 7 என்று பலவிதமாக கூறப்படு கிறது).

இதை அறிந்த மன்னன் அந்த வாலிபர்களை கண்டித்தான், தண்டித்தான். அரசனின் தொல்லைகள் அளவுக்கு மீறிச் செல்லவே வாலிபர்கள் அந்நகரைவிட்டு வெளியேறினார்கள். அருகில் உள்ள மலையில் சென்று அங்குள்ள குகை ஒன்றில் வசித்து அங்கு தங்களின் இறைவழிபாட்டை தொடங்கினார்கள். “எங்கள் இறைவனே! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக. நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக’’ என்று பிராத்தித்தார்கள்.

இறைவன் அவர்களின் துஆவை ஏற்றுக்கொண்டு அவர்களை அப்படியே ஆழ்ந்த நித்திரையில் ஆழ்த்தினான். அல்லாஹ் கூறுகிறான், “அக்குகையில் உள்ளவர்கள் நித்திரை செய்த போதிலும் அவர்களை காணும் நீங்கள் அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாகவே எண்ணுவீர்கள். ஏனென்றால் அவர்களை நாம் வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் மாற்றி மாற்றி திருப்பிக் கொண்டேயிருந்தோம்.” (திருக்குர்ஆன் 18:8)

இவ்வாறு நித்திரை செய்யும் அவர்களை அல்லாஹ் எழுப்பினான். எவ்வளவு காலம் நாம் உறக்கத்தில் இருந்தோம் என்பதை அவர்கள் எண்ணியபோது ஒரு நாளின் ஒரு சிறுபகுதி அல்லது ஒரு நாள் நித்திரை செய்திருப்போம் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

அவர்களுக்குப் பசி எடுத்தது. எனவே அவர்களில் ஒருவரிடம் தங்களிடமிருந்த வெள்ளிக்காசுகளில் சிலவற்றைக் கொடுத்து அருகில் உள்ள ஊருக்குச்சென்று உணவு பொருட்களை வாங்கி வருமாறு அனுப்பினார்கள். கடையில் சென்று உணவினை வாங்கிய போது கடைக்காரர் வந்த வாலிபரின் தோற்றத்தையும் அவர் கொடுத்த அந்த வெள்ளிக் காசுகளையும் நோட்டமிட்டவராக, ‘இது மாபெரும் விசித்திரமாக இருக்கிறதே. இந்த வெள்ளிக்காசு எல்லாம் 300 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் புழக்கத்தில் இருந்த காசுகள் அல்லவா?’ என்று ஆச்சரியப்பட்டு அவரிடம் விசாரித்தார். இதையடுத்து அந்த வாலிபர் மீண்டும் குகைக்கு திரும்பினார். அப்போது தான் தாங்கள் முன்னூறு ஆண்டுகாலங் களுக்கும் மேலாக நித்திரையிலேயே மூழ்கி விட்டோம் என்ற உண்மையை அந்த வாலிபர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

இந்த அதிசய சம்பவம் அப்போது ஆட்சி பொறுப்பில் இருந்த தியோஷியஸ் என்ற அரசருக்கு தெரிவிக்கப்பட்டது. அவரும் அந்த வாலிபர் களைத் தேடி குகைக்கு வந்த போது அந்த குகைவாசல் மூடப்பட்டு கிடந்தது.

எனவே அவர்கள் பற்றி முழு விவரங்கள் கிடைக்கப் பெறாதவர்களாக தங்களுக்குள் தர்க்கித்து கொண்டு, ‘இவர்களை இறைவன் தான் நன்கறிவான். இவர்கள் இருந்த இடத்தில் ஞாபகர்த்தமாக ஒரு மினராவை எழுப்புங்கள்’ என்றார்கள்.

இந்த சரித்திரத்திலிருந்து இரண்டு விஷயங்கள் நம் அறிவிற்கு தெள்ளத் தெளிவாகப் புலப்படுகிறது. ஒன்று இறைவன் தான் படைப்பினங்களைப் படைப்பவன். அவன் நாடினால் அதனை மரணிக்கச் செய்து மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவான். காலங்கள் பல கடந்தாலும் அதே வாலிபர்களாக எழுப்ப இறைவனால் மட்டுமே முடியும். வாலிபமும், முதுமையும் கூட இறைவனின் ஆளுமையில் தான் இருக்கிறது என்பதும் தெள்ளத்தெளிவாகப் புலப்படுகிறது.

அண்ணல் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த தகவல்கள் அனைத்தையும் யூதர்களிடம் கூறி அவர்கள் கேட்ட 3 கேள்வி களுக்கும் பதில் அளித்தார்கள். இந்த செய்தி அரேபியா முழுவதும் பரவியது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) என்பது நிரு பணம் ஆனது. அண்ணலார் தான் உண்மையான நபி என்பதும் உறுதியானது. மக்கள் முன்பைவிட அதிகமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார்கள்.

(தொடரும்) 

Next Story