பேச்சு குறைபாட்டை நீக்கும் ராஜமாதங்கீஸ்வரி


பேச்சு குறைபாட்டை நீக்கும் ராஜமாதங்கீஸ்வரி
x
தினத்தந்தி 10 Oct 2018 6:42 AM GMT (Updated: 10 Oct 2018 6:42 AM GMT)

நாகை மாவட்டத்தில் 11 வைணவ திருப்பதிகளையும் ஒரே இடத்தில் தரிசிக்கக்கூடிய தலம் திருநாங்கூர்.

திருநாங்கூரில் ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுதினம், 11 பெருமாளும் திருமங்கை ஆழ்வாருக்கு காட்சி தருவார்கள். இதுவே ‘கருடசேவை’ ஆகும். இந்த உற்சவம் இன்றும் தொடர்ந்து வைணவ பக்தர்களால் பற்பல சிறப்புகளோடு நடை பெற்று வருவது இத்தலத் தின் சிறப்பம்சமாகும்.

இந்த ஊரைச் சுற்றி 11 சிவதலங்களும் உள்ளன. அந்த 11 ஆலயங்களில் ஒன்று தான் மதங்கீஸ்வர சுவாமி ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் மதங்கீஸ்வரர். இறைவி பெயர் ராஜமாதங் கீஸ்வரி. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முன் முகப்பை தாண்டியதும் விஸ்தாரமான பிரகாரம். வலது புறம் இறைவியின் தனி ஆலயம்.

இறைவிக்கு மேலும் 15 பெயர்கள் உண்டு. அவை அஞ்சனாட்சி, சங்கீத யோகி, சியாமா, சியாமளா, மந்த்ர நாயகி, மந்த்ரிணி, சசிவேசான், ப்ரதானேசி, சுகப்ரியா, வீணாவதி, வைணிகி, முத்ரிணீ, ப்ரயகப்ரியா, நீபப்ரியா, கதம்பவன வாசினி என்பன. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் பத்மத்தையும், சக்கரத்தையும் சுமந்து காட்சி தரும் அன்னை, கீழ் இரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகிறாள்.

பேச்சு வராத குழந்தைகளை அன்னையின் சன்னிதி முன் அமரச் செய்து, அவர்கள் நாக்கில் தேனைத்தடவி மூல மந்திரத்தை எழுத, அவர்கள் மெல்ல மெல்ல பேசத் தொடங்குவது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.

திருமணம் நடைபெறாமல் தாமதமாகும் ஆணோ, பெண்ணோ அன்னையின் சன்னிதிக்கு, அஷ்டமி அன்று வருகின்றனர். மட்டை உரிக்காத முழு தேங்காயை அர்ச்சனை பொருட்களுடன் தட்டில் வைத்து அன்னைக்கு அர்ச்சனை செய்கின்றனர். பின் அந்த தேங்காயை அர்ச்சகர் வேண்டுதலை வைப்பவரிடமே தந்து விடுகிறார். 11 மாதங்கள் அந்த தேங்காயை வீட்டில் வைத்து, மாதந்தோறும் அஷ்டமி அன்று பூஜை செய்து வர வேண்டும். அதற்குள் அவர்கள் திருமணம் நடைபெறுவது உறுதியாம்.

பின் மணமான தம்பதிகள் ஆலயம் வந்து, அன்னைக்கு அபிஷேகம் செய்து, புத்தாடை உடுத்தச் செய்து சன்னிதியை 11 முறை வலம் வருவார்கள். பிறகு அந்த தேங்காயை அம்மன் சன்னிதிலேயே கட்டிச் செல்வது வழக்கமாக உள்ளது. இங்கு அன்னைக்கு பாலாபிஷேகம் செய்யும் போது, அன்னையின் மேனியில் வழியும் பால் பச்சை நிறமாக காட்சி தருவது பக்தர்களை சிலிர்க்க வைக்கும் காட்சியாகும்.

இந்த ஆலயம் சுமார் 1100 ஆண்டுகள் பழமையானது. ஆலயத்தின் தலவிருட்சம் வன்னி, புரசம், வில்வம் என மூன்று விருட்சங்களாகும். இவை தெற்கு பிரகாரத்தில் உள்ளன.

மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக் கின்றனர். எதிரே அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் மதங்கீஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

தல வரலாறு

பிரளய காலத்தில் உலகமெங்கும் தண்ணீர் மயமாய் காட்சி தந்தது. அந்த சமயம் பிரபஞ்ச சிருஷ்டிக்காக பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் மூவரும் சிவபெருமானை நோக்கி தவம் செய்தனர். அதில் பிரம்மா, சிவனை மதங்க ரூபமாய் (யானை வடிவில்) தியானம் செய்தார். அதே நேரத்தில் பிரம்மாவின் மானஸ புத்திரரான மதங்க முனிவர் பிரம்மதேவனின் ஆணையால், சிவபெருமான் குறித்து தவம் செய்ய பூலோகம் நோக்கி புறப்பட்டார்.

உலகம் தண்ணீர் மயமாக இருந்ததால் பூமி தென்படவில்லை. எனவே ஆகாயத்திலேயே சஞ்சரித்துக் கொண்டிருந்த மதங்க முனிவர், நாரதரிடம் தவம் செய்வதற்கு உரிய இடத்தைக் காட்டுமாறு வேண்டினார்.

நாரதர் மதங்கரைப் பார்த்து ‘பூமியில் சுவேதவனம் (திருவெண்காடு) என்று ஒரு இடம் உள்ளது. அங்கு பிரம்மதேவர் மகா பிரளய காலத்தில் ஐக்கியமாகி விடுவார். அத்தலம் சிவ சூலத்தால் தாங்கப் பெற்றிருப்பதால் அது அழியாமல் இருக்கும். அங்கு புரச மரங்கள் அடர்ந்து இருக்கும். எனவே அப்பகுதியை ‘பலாச வனம்’ என்பர். அதன் அருகே சென்று தவம் செய்து சித்தி பெறுங்கள்’ என்றார்.

மதங்க முனிவர் நாரதர் சொன்னபடியே அங்கு வந்து தவம் செய்யத் தொடங்கி னார். அவர் தவத்திற்கு இடையூறு விளைவிக்க, மன் மதனும், மோகினி உருவில் மகாவிஷ்ணுவும் அங்கு வந்தனர். தனது தவத்திற்கு இடையூறு செய்ய வந்த மன் மதனை ‘சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் நீ அழிவாய்’ எனச் சபித்தார் முனிவர்.

பதறிப்போன மன்மதன், சாப விமோசனம் வேண்ட ‘நீ கிருஷ்ண பரமாத்மாவின் புதல்வனாய் பிறந்து சரீரம் பெறுவாய்’ என அருளினார்.

மோகினியை முனிவர் சபிக்க முற்பட்டபோது, பகவான் மகாவிஷ்ணு தரிசனம் அளித்தார்.

‘மதங்கரே! உன் தவத்தை சோதனை செய்து பின், உமக்கு யோக சாஸ்திரம் அருளவே இங்கு வந்தேன். என்ன வரம் வேண்டும் கேள்?’ என்றார் மகாவிஷ்ணு.

அதற்கு முனிவர் ‘தாங்கள் மோகினியாகவே தரிசனம் தந்து கொண்டு எப்போதும் இவ்விடத்திலேயே தங்கியருள வேண்டும்’ என வேண்டினார். மகா விஷ்ணுவும் அவ்வாறே அருளினார்.

மதங்க முனிவர் தியானத்தில் இருந்தபோது பரமசிவன் அவருக்கு காட்சி தந்து ‘என்ன வரம் வேண்டும்?’ என கேட்டார்.

மதங்கர், ‘நான் தவம் செய்த இந்த இடத்தில், யார் ஒருவர் பிறந்தாலும், இறந்தாலும், வசித்தாலும், பூஜித்தாலும் அவர்கள் எல்லா நலன்களையும் பெற்று வாழ வேண்டும். நீங்கள் ‘மதங்கேசர்’ என்ற பெயர் கொண்டு லிங்க மூர்த்தியாய் இங்கு காட்சி தர வேண்டும்’ என வேண்டிக் கொண்டார்.

மதங்க முனிவர் தவம் செய்த இடம், திருவெண்காட்டிலிருந்து வடமேற்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநாங்கூரின் ஒரு பகுதியாகும். மதங்க முனிவர் வேண்டியபடி சிவபெருமான் மதங்கேஸ்வரர் என்ற திருநாமத்தில், மாதங்கீஸ்வரி என்ற திருநாமம் கொண்ட தேவியுடனும் மதங்கருக்கு காட்சி தந்தார்.

ஆலயத்தின் தெற்கு பிரகாரத்தில் ஆனந்த மகா காளி தனிக்கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். காளி முகத்தில் அமைதியும் சாந்தமும் தவழ அருள்பாலிக்கும் அழகே அழகு. இந்த காளி ஒரு தாரு விக்ரகம். இந்த அன்னை பீடத்தில் அமராமல் ஊஞ்சலில் அமர்ந்துள்ளாள். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்த காளிக்கு குடமுழுக்கு திருவிழா நடைபெறுவதுடன், அன்று மூலவர் காளி வீதியுலா வருவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். சர்ப்பதோஷம், செவ்வாய் தோஷம் விலக்கும் தேவியாகவும் இந்த காளி விளங்குகிறாள். பவுர்ணமி அன்று 7 மாவிளக்கு தீபமிட்டு, 27 நெய்விளக்கு ஏற்றி, கற்கண்டு பொங்கல் நைவேத்தியம் செய்து தோஷம் உள்ளவர்கள் பெயரில் அர்ச்சனை செய்ய தோஷம் விலகும் என்கின்றனர் பக்தர்கள்.

காளியின் ஆலயத்தை அடுத்து மதங்க மகரிஷியின் சன்னிதி உள்ளது. மேற்கு பிரகாரத்தில் வலஞ்சுழி மதங்க விநாயகர், பிரசன்ன சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை, ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி சன்னிதிகள் உள்ளன. வடக்கு பிரகாரத்தில் மோகினி உருவில் (பெண் உருவில்) நாராயணப் பெருமாள் நாராயணி என்ற பெயரில் அருள்பாலிக்கும் சன்னிதி உள்ளது.

இங்குள்ள முப்பெரும் தேவிகளுக்கு குங்கும அர்ச் சனை செய்து சிவப்பு நிறத் தில் ஆடை சாத்தினால் பிரம் மஹத்தி தோஷம் நீங்கும்.

தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத் பவர், பிரம்மா, விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்க வடக்கு பிரகாரத்தில் சண்டீ ஸ்வரர் சன்னிதி உள்ளது.

தினசரி 2 கால ஆராதனைகள் நடைபெறும். இந்த ஆலயத்தை சுற்றிலும் அழகிய உயர்ந்த திருமதில் சுவர்கள் உள்ளன. இந்து அறநிலையத்துறை நிர்வாகத் தின் கீழ் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

சகல கலைகளுக்கும் அதிபதியாக விளங்குபவள் அன்னை மாதங்கீஸ்வரி. சரஸ்வதி தேவிக்கு வித்யாபியாசம் செய்ததால், இந்த அன்னையை தரிசிப்ப வருக்கு கலை, கல்வி, தேர்வில் தேர்ச்சி, உயர் பதவி, தொழில் மேன்மை, பேச்சு வன்மை அனைத்தும் கிடைக்கப்பெறும் என்பது நிதர்சனமான உண்மையே.

இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும், சீர் காழியில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது திருநாங்கூர் தலம்.

- ஜெயவண்ணன்

இரட்டை நந்திகள்



வழக்கமாக சிவாலயங்களில் இறைவனின் கருவறைக்கு எதிரே ஒரு நந்தி தான் இருக்கும். ஆனால் இங்கு கிழக்கும் மேற்கும் நோக்கிய இரண்டு நந்திகள் இருப்பது எங்கும் காணாத சிறப்பம்சமாகும். இதில் கிழக்கு நோக்கி உள்ள நந்தி ‘சுவேத நந்தி’ எனவும், மேற்கு நோக்கி உள்ள நந்தி ‘மதங்க நந்தி’ எனவும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு நந்தி களையும் பிரதோஷ நாட்களில் தரிசனம் செய்தால், 108 சிவாலயங்கள் சென்று பிரதோஷ தரிசனம் செய்த பலன் கிட்டும் என்கின்றனர். இந்த இரட்டை நந்திகளை ‘மாப்பிள்ளை நந்தி’ எனவும், ‘மாமனார் நந்தி’ எனவும் அழைக்கின்றனர்.

Next Story