தீபாவளி பண்டிகைக்காக திறக்கப்படும் ஹாசனாம்பா கோவில்


தீபாவளி பண்டிகைக்காக திறக்கப்படும் ஹாசனாம்பா கோவில்
x
தினத்தந்தி 1 Nov 2018 10:00 PM GMT (Updated: 1 Nov 2018 10:05 AM GMT)

கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஹாசனாம்பாதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அம்மன் இங்கு மண்புற்று வடிவில் வீற்றிருக்கிறார். தொடக்கத்தில் ஹாசனுக்கு சிம்ஹாசனபுரி என்று பெயர் இருந்தது.

சிம்ஹாசனபுரி என்பது அர்ச்சுனனின் பேரன் ஜனமேஜய மகாராஜனின் இடம் என்றும் கூறுவர். இங்கு ஹாசனாம்பா தேவி நிலைத்த பிறகு ஹாசனா என பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது.

கல்லாய் நிலைத்த திருடர்கள்

இந்த கோவிலின் கொடி மரத்தைத் தாண்டியவுடன் சித்தேஸ்வரர் என்ற திருநாமத்துடன், சிவபெருமான் அருள்பாலிக்கிறார். இங்கு சிவன் லிங்கவடிவில் காட்சி தருகிறார். அத்துடன் அவருடன் பாசுபதாஸ்திரம் பெற்றுக்கொள்ளும் நிலையில் அர்ச்சுனன் காணப்படுகிறார்.

உற்சவ மூர்த்தியான சிவனின் நெற்றியில் ஒளி வீசும். இதை நாம் ஆண்டுதோறும் கோவில் நடை திறக்கப்படும் வேளைகளில் கண்டு ரசிக்கலாம்.

அதுபோல் கோவிலில் கல்லப்பா குடி என்ற சன்னிதி உள்ளது. இந்த சன்னிதியில் 4 கல் சிலைகள் உள்ளன. இதற்கு ஒரு வரலாறு உண்டு. அதாவது கோவிலுக்குள் புகுந்த 4 திருடர்கள் தேவியின் கழுத்தில் கிடந்த ஆபரணங்களை திருட முயற்சித்துள்ளனர். இதனால் கடும் கோபமடைந்த தேவி, 4 பேரும் கல்லாய் போகட்டும் என்று சாபமிட்டதாகவும், அதனால் அந்த 4 பேரும் கல்லாய் நிலைத்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. 4 பேரும் நிலைகொண்ட இடம் ‘கல்லப்பா குடி’ என அழைக்கப்படுகிறது.

12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம்

இந்த ஆலயம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் போல அம்மனை முன்னிறுத்தி பூஜைகள் நடத்தப்படும் ஆலயமாகும். இத்தகைய புகழ்பெற்ற ஹாசனாம்பாவுக்கு சுமார் 12-ம் ஆண்டு நூற்றாண்டில் கிருஷ்ணப்பா நாயக்க பாளையக்காரரின் காலத்தில் கோவில் எழுப்பப்பட்டது.

தலபுராணம்

இந்த கோவிலுக்கு தலப்புராணம் உள்ளது. அதாவது, சப்த கன்னியர்களான பிரம்ஹிதேவி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோர் வாரணாசியில் இருந்து தெற்கு பகுதிக்கு புத்துணர்வுக்காக வலம் வந்தார்கள் என்றும், அந்த சப்த கன்னியர்களில் வைஷ்ணவி, கவுமாரி, மகேஸ்வரி அம்மன்கள் ஹாசனாம்பா கோவிலில் மண்புற்றின் வடிவத்தில் நிலைத்தார்கள் என்றும், பிரம்ஹிதேவி கெஞ்சம்மனின் புதுக்கோட்டையில் நிலைக்கொண்டிருக்கிறார் என்றும், சாமுண்டி, வராகி, இந்திராணி ஹாசன் நகரில் உள்ள தேவி கெரேயில் நிலைகொண்டு இருப்பதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

ஆண்டுக்கு ஒரு முறை நடை திறப்பு

இந்த கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை, அதாவது 10 நாட்கள் மட்டுமே நடை திறந்து பூஜை நடத்தப்படும் என்பது சிறப்பம்சமாகும். அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புரட்டாசி மாதம் இறுதி முதல் ஐப்பசி மாதம் முதல் வாரத்திற்குள் வரும் பவுர்ணமிக்கு அடுத்த வியாழக்கிழமை கோவில் நடை திறக்கப்பட்டு, அமாவாசைக்கு அடுத்த 3-வது நாள் கோவில் நடை சாத்தப்படுவது வழக்கமாக உள்ளது. அதாவது 10 நாட்களும் இரவு முழுவதும் நடைசாத்தப்படாமல் திறந்தே இருக்கும்.

கோவில் நடை திறக்கப்படும் முதல் நாளில் ஹாசன் மாவட்டம் மட்டும் இன்றி மாநிலம் முழுவதில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். தலவார் குடும்பத்தினர் கர்ப்பகிரகத்துக்கு எதிரே வாழைத் தண்டுகளை நட்டுவைத்து, ஹாசனாம்பாவை பயபக்தியுடன் பஜனைகள் பாடுவார்கள். பின்னர் அந்த வாழைத்தண்டுகளை வெட்டியதும், கோவில் நடை திறக்கப்படுவது இன்று வரை நடைமுறையில் இருக்கும் ஐதீகமாகும்.

கோவில் நடை திறந்திருக்கும் 10 நாட்களும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள். கோவிலிலுள்ள அம்மனை வழிபாடு செய்தால் வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

அதிசயிக்க வைக்கும் ஹாசனாம்பா தேவி கோவில் இந்த ஆண்டில் தீபாவளியை முன்னிட்டு 1-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை திறக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மாவட்ட அறநிலையத்துறையினர் செய்து வருகிறார்கள். பெங்களூருவில் இருந்து இந்த கோவில் 184 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பெங்களூருவில் இருந்து பஸ், கார்களில் 3.15 மணி நேரம் பயணித்தால் ஹாசனாம்பாதேவியை தரிசிக்கலாம். மேலும் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து ஹாசனுக்கு ரெயில்களும் இயக்கப்படுகிறது. அதிலும் பயணித்து ஹாசனாம்பா தேவி கோவிலை சென்றடையலாம்.

Next Story