எளியவர் நிழலில் மனம் மகிழும் இறைவன்


எளியவர் நிழலில் மனம் மகிழும் இறைவன்
x
தினத்தந்தி 27 Nov 2018 12:08 PM GMT (Updated: 27 Nov 2018 12:08 PM GMT)

தஞ்சை பெருவுடையார் கோவில் அல்லது தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் என அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோவில், தமிழரின் பாரம்பரிய சின்னமாக மதிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் மண்ணின் பெருமையை பறைசாற்றியபடி உயர்ந்து நின்றுகொண்டுள்ளது.

கி.பி. 10-ம் நூற்றாண்டில் சோழ பேரரசு புகழ் பெற்ற நிலையிலிருந்த போது, ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது இந்த ஆலயம். ஆரம்பத்தில் ‘ராஜராஜேஸ்வரம்’ என்றும், பின்நாட்களில் தஞ்சையை நாயக்கர்கள் ஆண்ட காலத்தில் ‘தஞ்சை பெருவுடையார் கோவில்’ என்றும் அழைக்கப்பட்டது. கி.பி. 17 மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது ‘பிரகதீஸ்வரம்’ என்று சொல்லப்பட்டது.

இந்த பிரம்மாண்டமான கோவிலை கட்டி முடிக்க, சுமார் 7 ஆண்டுகள் ஆனதாக சொல்லப்படுகிறது. இரண்டு அல்லது மூன்று தளங்கள் மட்டும் உள்ள கோவில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளி பகுதியில், 15 தளங்களுடன் சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோவில் அமைக்கப்பட்டது பெரும் சாதனையாகும். அதுமட்டுமல்லாமல் கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்பு திருமேனிகள் என்று பல்வேறு புதிய அம்சங்களையும் கோவிலில் அமைத்து பல புதுமைகள் செய்யப்பட்டது.

இந்த கோவிலைப் பற்றி உணர்வுப்பூர்வமான, பல்வேறு வகையான நிஜம் சார்ந்த கதைகள் உலவி வருகின்றன. அவற்றில் ஒன்றை இங்கே காணலாம்.

பெரிய கோவிலை நிர்மாணிக்க ராஜராஜன் முடிவு செய்து, அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. பல்வேறு ஸ்தபதிகள் தலைமையில், நூற்றுக்கணக்கான சிற்பிகள் உள்ளிட்ட பணியாளர்கள் கோவில் கட்டும் பணியில் உழைத்துக் கொண்டிருந்தார்கள். அது தவிர பொதுமக்களும் அவர்கள் பங்கிற்கு பொன்னும், பொருளும் கோவில் திருப்பணிக்கு கொடுத்து உதவினார்கள்.

சரித்திர புகழ் பெறும் வகையில் கட்டப்பட வேண்டும் என்ற லட்சிய நோக்கில், அதனை கட்டமைக்க துல்லியமாக திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வந்தன.

அந்த ஊரில் துணைக்கு யாரும் இல்லாத ‘அழகி’ என்ற பெயர் கொண்ட பாட்டி ஒருத்தியும் இருந்தாள். அவளுக்கும் கோவில் பணியில் பங்கு கொள்ள ஆவல். சிவாலய திருப்பணிக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்று மிகவும் விரும்பினாள்.

பொருள் ஏதும் அவளிடம் இல்லாததால், ‘என்ன செய்யலாம்?’ என்று தீவிரமாக சிந்தனை செய்தவளின் மனதில் ஒரு யோசனை உதித்தது. கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சிவ கைங்கரியமாக நீர் மோர் கொடுக்க முடிவு செய்தாள். ஆலயம் கட்டும் பணியில் இருப்பவர்களின் தாகம் தீர்ப்பதும் ஒரு வகையான சிவ தொண்டு என முடிவு செய்து, பானையில் மோர் எடுத்துக்கொண்டு கோவில் பணியில் இருக்கும் சிற்பிகளுக்கு தினமும் கொடுத்து வந்தாள்.

வெயில் சமயத்தில் கருவேப்பிலை, இஞ்சி கலந்த நீர் மோர் பருகும் சிற்பிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தினமும் அவளது வருகையை எதிர்நோக்கி இருக்கும்படி அவளது உதவி அமைந்துவிட்டது. அவளும் அவர்கள் மத்தியில் பழக்கமான ஒரு நபராக ஆகிவிட்டாள்.

காலப்போக்கில் கோவில் கட்டும் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், கோபுர விதானத்தில் கருவறைக்கு மேல் கல் பதிக்க வேண்டிய பணி மீதம் இருந்தது. சரியான ஒரு கல்லைத் தேடி பல நாட்கள் அலைந்தார் தலைமை சிற்பி. நல்ல நீரோட்டம் உள்ள ஒற்றை கல்லாக இருக்க வேண்டும் என்ற நிலையில் தேடும் பணிகள் வேகமாக நடந்தன.

ஒரு நாள் வழக்கப்படி மோர் கொடுக்க வந்த பாட்டியின் முகத்தில் உள்ள கவலையை கவனித்த தலைமை சிற்பி, அது பற்றி அவளிடம் விசாரித்தார். கோவில் பணிகள் முடிவடைய உள்ள நிலையில் அவளால் எதுவும் தர இயலாத நிலையை எண்ணி வருத்தம் அடைவதாக பாட்டி கூறினாள்.

சிற்பியும் அவளைத் தேற்றுவதுபோல பேசியது கேட்டு, பாட்டி ஒரு வேண்டுகோளை அவருக்கு வைத்தாள். அதாவது அவளது வீட்டுக்கு முன்புறமாக கிடக்கும் ஒரு பெரிய பாறையை பயன்படுத்திக்கொள்ள தலைமை சிற்பியை கேட்டுக்கொண்டாள்.

வயதில் பெரியவள் என்ற கருத்தில் சிற்பி அழகி பாட்டி வீட்டுக்குச் சென்று அந்த பாறையை பார்த்தார். கோபுர விதானத்தின் மீது அமைக்க பொருத்தமான கல் போன்றே அவருக்குத் தோன்றியது. சோதனை செய்ததில் அந்த பாறை பொருத்தமானது என்று அறிந்து கச்சிதமாக அதை செதுக்கி கோபுர விதானத்தில் அமைத்து விட்டார். பாட்டி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

கும்பாபிஷேக நாள் நெருங்கிய நிலையில், ராஜராஜன் தனது பரிவாரங்களுடன் வந்து கோவிலைச் சுற்றி பார்த்தான். இத்தனை சிறப்பம்சங்களுடன் சிவபெருமானுக்கு கோவில்கள் இருக்க வாய்ப்பு இல்லை என்ற பெருமையில் பூரிப்படைந்தான்.

அன்று இரவு உறக்கத்தில் இருந்த ராஜராஜன் கனவில் சிவபெருமான் தோன்றி, “பெரிய கோவிலில் ‘அழகி’ என்கிற மூதாட்டி தயவில் அமைந்த நிழலில் தங்குவது எமக்கு மிக்க மகிழ்ச்சி” என்று கூறினார்.

திடுக்கிட்டு எழுந்த மன்னன், ‘பிரம்மாண்டமான பெரிய கோவிலை கட்டிய என்னிடம் அழகி என்கிற பாட்டியில் நிழலில் தங்குவதில் இறைவனுக்கு மகிழ்ச்சி என்று சொல்லியதன் பின்னணி என்ன?’ என்ற குழப்பத்தில் தவித்தான்.

மறுநாள் மந்திரியை அனுப்பி, அழகி என்ற பாட்டி பற்றி விசாரித்து வரச் சொன்னான். மந்திரியும் விசாரித்து தகவல் தந்ததும் அவளைத் தேடி குடிசைக்கே ராஜராஜன் சென்றான்.

“அம்மா! சிவபெருமானுக்கு நீங்கள் எப்படிப்பட்ட தொண்டு செய்தீர்கள் என்பதை நான் அறியேன். ஆனால் நீங்கள் தந்த நிழலில் மகிழ்ச்சியாக இருப்பதாக இறைவன் என் கனவில் தெரிவித்தார். நீங்கள் என்ன செய்தீர்கள் என அறியலாமா?” என்று கேட்டான்.

தினமும் கோவில் திருப்பணி புரியும் சிற்பிகளுக்கு நீர் மோர் கொடுத்து வந்ததையும், கோபுர விதானத்தில் பதிக்க கல் ஒன்றை கொடுத்ததையும் கூறினாள். ராஜராஜ சோழன் அந்த பாட்டியை விடவும் மகிழ்ச்சி அடைந்தான். இறைவன் எளியவர்களுக்கெல்லாம் எளியவன் என்பதையும், அன்பால் மட்டுமே அவனை கட்டுப்படுத்த முடியும் என்பதையும் உணர்ந்து அந்த பாட்டியை வணங்கினான்.

இந்த சம்பவம் தஞ்சை பெரிய கோவில் கட்டுமான பணிகளின்போது நடந்த நிகழ்வாக சொல்லப்படுகிறது. இன்று தஞ்சை நகராட்சி அலுவலகம் உள்ள பகுதியில் ‘அழகி’ பாட்டி வசித்த குடிசை அமைந்திருந்ததாக சொல்லப்படுகிறது. ‘அழகிக்குளம்’ என்கிற ஒரு இடமும் தஞ்சாவூரில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆச்சரியப்படத்தக்க பிரம்மாண்டமான வரலாற்று அடையாளங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும், மேற்கண்ட நிகழ்வு போன்ற உணர்வு ரீதியான தியாக வரலாறு ஏதாவது ஒன்று வெளியில் தெரியாமல் இருக்கிறது.

Next Story