உறையூர் குங்குமவல்லி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் வளையல் காப்பு திருவிழா தொடங்கியது திரளான பெண் பக்தர்கள் தரிசனம்


உறையூர் குங்குமவல்லி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் வளையல் காப்பு திருவிழா தொடங்கியது திரளான பெண் பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 1 Feb 2019 11:35 PM GMT (Updated: 1 Feb 2019 11:35 PM GMT)

உறையூர் குங்குமவல்லி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் வளையல் காப்பு திருவிழா தொடங்கியது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

திருச்சி,

திருச்சி உறையூர் குங்குமவல்லி தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் வளையல் காப்பு திருவிழா நடைபெறுவது சிறப்பாகும். இந்த ஆண்டுக்கான வளையல் காப்பு திருவிழா நேற்று தொடங்கியது. காலை 7.30 மணிக்கு கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெற வேண்டி அம்பிகையிடம் பிரார்த்தனை செய்து ஹோம பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 1 மணிக்கு வளைகாப்பு சம்பிரதாய பூஜைகள் நடந்தது.

குங்குமவல்லி அம்மனுக்கு வளையல்கள் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான கர்ப்பிணிகளும், பெண் பக்தர்களும் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். பூஜை முடிந்ததும் 48 நாள் அர்ச்சிக்கப்பட்ட வளையல், குங்குமம், அம்பாள் படம் பிரசாதமாக வழங்கப்பட்டன.

தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு குழந்தை பாக்கியம் வேண்டி ஹோமம் நடைபெற உள்ளது. மேலும் பகல் 12 மணிக்கு 48 நாள் அர்ச்சிக்கப்பட்ட வளையல், குங்குமம், அம்பாள் படம் பிரசாதமாக வழங்கப்படும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை திருமணம் வேண்டி ஆண், பெண் இருபாலருக்கும், மாங்கல்ய பாக்கியம் வேண்டி, சுமங்கலிகளுக்கும் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

நாளை பகல் 1 மணிக்கு திருமண தடை நீங்கி விவாகம் நடக்கவும், மாங்கல்ய பாக்கியத்துடன் வாழ வேண்டி சிறப்பு பூஜையும் நடைபெறும். நாளை பகல் 2 மணிக்கு பூஜைக்கு பின் 48 நாள் அர்ச்சிக்கப்பட்ட வளையல், குங்குமம், அம்பாள் படம் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் கருணாமூர்த்தி, கோவில் ஸ்தானிகர் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story