பக்தர்களிடம் கனிவு காட்டும் காரப்பாக்கம் கற்பகேஸ்வரர்


பக்தர்களிடம் கனிவு காட்டும் காரப்பாக்கம் கற்பகேஸ்வரர்
x
தினத்தந்தி 15 March 2019 10:37 AM GMT (Updated: 15 March 2019 10:37 AM GMT)

17.3.2019 அன்று கோவில் கும்பாபிஷேகம்

கங்கை என்றதுமே அதன் நீர் வளமும், அது தரும் நில வளமுமே நம் நினைவுக்கு வரும். கங்கை தேவியானவள், தான் பாயும் வட இந்தியாவை வளப்படுத்துவது போல, தென் இந்தியாவையும் வளப்படுத்தும் விதமாக, இங்கே பல பகுதிகளில் ‘கங்கையம்மன்’ என்ற பெயரில் அம்மனாக இருந்து அருள்பாலித்து வருகிறாள். அதில் ஒரு திருத்தலம் தான் காரப்பாக்கம். இங்கு வீற்றிருந்து அருளும் கங்கையம்மன், தன்னை நம்பி வந்தவர்களை கைதூக்கி விடும் தேவியாக இருக்கிறாள்.

தன்னுடைய தலையில் இடம் அளித்த சிவபெருமானுக்கு, இத்தலத்தில் கங்கையம்மன் இடமளித்திருப்பது சிறப்புக்குரிய அம்சமாகும். ஆம்.. கங்கையம்மன் ஆலயத்திற்குள், தனி ஆலயமாக சிவாலயம் ஒன்றும் இருக்கிறது. கற்பகேஸ்வரர் ஆலயம் என்று அது அழைக்கப்படுகிறது.

தல வரலாறு

மன்னர் காலத்தில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து, குலோத்துங்க வள நாட்டிற்குள் அமைந்திருந்த ஊர் காரப்பாக்கம் ஆகும். இங்கிருக்கும் கங்கையம்மன் ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இங்குள்ள குளக்கரை மரத்தடியில் சுயம்புவாக தோன்றியவள் இந்த அம்மன். இந்தப் பகுதி வாழ் மக்கள், விவசாயத்தின் விதை விதைப்பிற்கும், அறுவடைக்கும் அன்னையின் உத்தரவு பெற்றே செய்து வந்துள்ளனர். அறுவடைக்குப் பின், அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஆடி மாதத்தில் கூழ் ஊற்றி, கும்பம் எடுத்தும், ஊரணிப் பொங்கல் வைத்தும் வழிபட்டுள்ளனர். மகாபலிபுரத்தில் இருந்து சென்னைக்கு மாட்டு வண்டி மூலம் செல்லும் யாத்திரிகர்கள், இத்தலத்து அன்னையை வழிபட்டு, இளைப்பாறிய பின்பே பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் அம்மனின் அருள் பார்வையால், மழை அதிகரித்து குளத்தில் வெள்ளம் வந்தது. இதனால் அம்மன் இருக்கும் இடத்திற்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது. எனவே சிவனடியார் ஒருவரின் முயற்சியால் தற்போதைய ஆலயம் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் பிரமாண்டமாக எழுந்து நிற்கிறது.

இந்த கங்கையம்மன் ஆலயத்தின் பின்புறத்தில் தான், கற்பகாம்பாள் சமேத கற்பகேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது.

ஆலய அமைப்பு

கங்கையம்மனுக்கு வடக்கு முகமாக ஐந்து நிலை ராஜகோபுரம் எழிலாக அமைந்திருக்க, எதிரே சதுர வடிவத் திருக்குளம் நீர் நிறைந்து ஆலயத்திற்கு அழகு சேர்க்கிறது. ராஜகோபுரத்திற்குள் நுழைந்ததுமே பெரிய துவாரபாலகிகள் இருவர் வண்ணக் கோலத்தில் காவல் நிற்க, கருவறைக்குள் சுமார் ஆறடி உயரத்தில் கங்கையம்மன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள். திருவடிசூலம் மலையில் இருந்த கல்லில் உருவானவள் இந்த அன்னை. புதியதாக வடிக்கப்பட்ட இந்த அன்னையின் கீழே, சுயம்புவான பழைய அம்மனின் உருவமும் எழிலாக அமைந்திருக்கிறது.

ஆலயத்தில் இடமிருந்து வலமாக முதலில் துர்க்கை, வலம்புரி விநாயகர், நெய் அபிஷேகப் பிரியன், ஸ்ரீதேவி - பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான், மேற்கு முக சன்னிதியில் 11 அடி உயரமுள்ள பக்த ஆஞ்சநேயர், ராமர், லட்சுமணர், சீதா சன்னிதிகள், கபிலமுனி, பகீரதன் சுதைச் சிற்பங்களும் காணப்படுகின்றன. இதனை அடுத்து நவக்கிரகங்கள், சனீஸ்வரர், கால பைரவர், வீர ஆஞ்சநேயர் சன்னிதிகளும் ஒருங்கே அமைந்துள்ளன.

இந்தக் கோவிலில் கங்கையம்மனுக்கு ஆடித் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். ஆடி மாதம் நான்காவது செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். விழாவின் ஒரு பகுதியாக கும்பம் வைத்தல், கூழ்வார்த்தல், ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்வு போன்றவை நடைபெறும். அந்த நேரங்களில் இந்தப் பகுதி முழுவதும் பக்தர்கள் கூட்டத்தில் களை கட்டியிருக்கும்.

கற்பகேஸ்வரர் ஆலயம்

கற்பகாம்பாள் சமேத கற்பகேஸ்வரர் திருக்கோவில், கங்கையம்மன் சன்னிதியின் பின் புறம் இருக்கிறது. கொடிமரம், பலிபீடம், நந்திதேவரைக் கடந்து முன்மண்டபம் சென்றதும், இறைவனின் கருவறை நம்மை வரவேற்கிறது. கருவறைக்குள் அடியார்களைக் கவர்ந்து இழுக்கும் கற்பகேஸ்வரர் வட்ட வடிவ ஆவுடையாரைக் கொண்டு அழகிய திருமேனியில் ஜொலிக்கிறார். பக்தர்கள் வேண்டும் வரத்தை அளிக்கும் வல்லமை படைத்தவராக இந்த இறைவன் இருக்கிறார்.

இவரது சன்னிதியை அடுத்ததாக எளிய வடிவில் அன்னை கற்பகாம்பாள் அருளாசி வழங்குகிறாள். கொடிமரத்தின் அருகே தென்புறத்தில் நாகலிங்க மரத்தடியில் ஆதி கற்பகேஸ்வரர், நாகராஜன், நாகராணி சிலை வடிவங்கள் உள்ளன.

இந்த ஆலயத்தில் மாதந்தோறும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் காலை முதல் மாலை வரை அடியார்கள் திருக்கூட்டத்தால், திருவாசக முற்றோதல் மற்றும் தேவாரப்பாடல்கள் பாடும் நிகழ்வு நடைபெறுவது வழக்கமான ஒன்று. கங்கையம்மன் ஆலயம் முழுமையும், அழகிய சுதை தூண்கள், கலைநயம் மிக்க சுதைச் சிற்பங்கள் என அனைத்துமே கலைநயத்தை பறைசாற்றுவதாக அமைந்திருக்கின்றன. பூமிக்குள் புதைந்தது போல் காணப்பட்ட இந்த ஆலயத்தை, தற்போது உயர்த்தி நிறுத்தி, திருப்பணிகள் செய்து முடித்திருக்கிறார்கள். இதன் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இத்தலத்தில் உள்ள கற்பகேஸ்வரருக்கு பிரதோஷம், அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம், திருக்குளத்தில் தெப்பத்திருவிழா என அனைத்தும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

பல நூற்றாண்டுகளைக் கண்ட காரப்பாக்கம் கங்கையம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ள கற்பகேஸ்வரர் திருக்கோவிலுக்கு, இரண்டாவது முறையாக கும்பாபிஷேகத் திருவிழா நடைபெற உள்ளது. தென்சென்னைப் பகுதியில் அடியார்களுக்கு அருள் வழங்கி ஆதரவு அளித்து வரும் காரப்பாக்கம் கற்பகேஸ்வரரை வழிபட்டுப் பேறுபெறுங்கள்.

அமைவிடம்

சென்னையில் இருந்து ஓ.எம்.ஆர். என்னும் பழைய மகாபலிபுரம் சாலையில் சோழிங்கநல்லூருக்கு முன்பாகவும், சென்னையில் இருந்து தெற்கே 23 கி.மீ. தொலைவிலும் காரப்பாக்கம் திருத்தலம் இருக்கிறது. காரப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தை ஒட்டியே ஆலயம் அமைந்திருப்பது சிறப்பு. காரப்பாக்கம் செல்வதற்கு ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன.

அம்மன் ஆலயம் நிறைந்த பகுதி

காரப்பாக்கத்தில் கங்கையம்மன் ஆலயம் தவிர, ஏராளமான அம்மன் ஆலயங்கள் இருக்கின்றன. அவற்றில் பழமையான வேண்டவராசி அம்மன், காளியம்மன், திரவு பதியம்மன், பெரியபாளையத்தம்மன், அங்காளம்மன், நாகாத்தம்மன் போன்ற ஆலயங்கள் அமைந்துள்ளன. இது தவிர பெருமாளுக்கான பஜனைக் கோவில் ஒன்றும் இந்தப் பகுதியில் இருக்கிறது.

- பனையபுரம் அதியமான்

Next Story