ஆயுளைக் கூட்டும் ஆலய வழிபாடு


ஆயுளைக் கூட்டும் ஆலய வழிபாடு
x
தினத்தந்தி 15 March 2019 12:08 PM GMT (Updated: 15 March 2019 12:08 PM GMT)

திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவில், கோவில்பாளையம் கால காலேஸ்வரர் ஆலயம், காஞ்சீபுரம் சித்திரகுப்தர் கோவில், ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் ஆலயம், திருப்பைஞ்ஞீலி திருத்தலத்தில் உள்ள ஞலிவனேஸ்வரர் கோவில்.

இவை அனைத்தும் ஆயுள் நீட்டிக்க வரம் அளிக்கும் திருத்தலங்கள் ஆகும். ஆயுள்காரகன் சனி, சுய ஜாதகத்தில் வீற்றிருக்கும் பாதசாரம் அறிந்து, அதற்கேற்ற நாளில் மேற்கண்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் ஆரோக்கியத் தொல்லை அகலும். நோய்வாய்ப்பட்டு அவதிப்படுபவர்களுக்கு, வழிபாட்டிற்கு பிறகான மருத்துவமும் கைகொடுக்கும்.

ஆலயங்களின் அற்புதங்கள்

பழங்காலத்து ஆலயங்களில் ஒவ்வொரு சிறப்புகள் அடங்கியிருப்பதை நாம் காண முடியும். திருவாரூரில் தேர் சிறப்பு அம்சம் கொண்டது என்பது போல, இன்னும் சில கோவில்களில் சில விஷயங்கள் சிறப்பு அம்சம் கொண்டவையாக இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

தஞ்சாவூர் - கோபுரம்

திருவலஞ்சுழி - பலகணி

திருவீழிமிழலை - வவ்வால் நத்தி மண்டபம்

ஆவுடையார் கோவில் - கொடுங்கை

கடாரம் கொண்டான் - மதில்சுவர்

திருப்புமுனை தரும் வயது

ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும், அவர்களது வாழ்க்கையில் சில குறிப்பிட்ட வயது வரும் காலங்களில், நல்ல திருப்பங்கள் ஏற்படும். அந்த காலங்களில் அவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். எந்த காரியத்தை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். மகிழ்ச்சி தரும் விஷயங்கள் உங்களுக்கு நடைபெறும்.

குறிப்பாக மேஷ ராசிக்காரர்களுக்கு 18, 27, 36, 45, 54, 63, 72 ஆகிய வயது காலங்களில் ஏமாற்றங்கள் அகன்று எதிர்பார்த்த மாற்றங்கள் வரும். சிம்ம ராசிக்காரர்களுக்கு 19, 28, 37, 46, 55, 64, 73 ஆகிய வயது காலங்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு 26, 35, 44, 53, 62, 71, 80 ஆகிய வயது காலங்களில் புகழ் ஏணியின் உச்சிக்கு செல்லும் வாய்ப்பும், புதிய வாய்ப்புகள் வந்து வாசல் கதவைத் தட்டும் சூழ்நிலையும் உருவாகும்.

13-ம் எண் யாருக்கு யோகம்?

சிலருக்கு சில எண்களைக் கண்டாலே பயம் வரும். அப்படி சிலருக்கு பயம் தரும் எண் ‘13’ ஆகும். தாக்கத்திற்கும், தேக்கத்திற்கும் உரிய எண் என்று இதைச் சொல்வார்கள். வெளிநாட்டில் உள்ள பெரிய ஓட்டல்களில் அறை எண் 12-க்கு அடுத்ததாக, 13 என்று எழுதாமல் ‘13A’ என்று எழுதி வைத்திருப்பார்கள். ஆனால் 13-ம் எண் அப்படி ஒன்றும் பயப்படத்தக்க எண் கிடையாது. ஒருவர் தனுசு, மீன ராசியில் பிறந்து, அவரது சுய ஜாதகத்தில் குருவும், சூரியனும் இணைந்திருந்தால், அவருக்கு 13 என்ற எண் யோக எண்ணாக அமையும். குரு வீட்டில் சூரியன் அமைந்த ஜாதகருக்கும் அந்த எண் யோகத்தை வழங்கும். அவர்களுக்கென்று வாழ்க்கை வளம்பெற சில பரிகார தலங்கள் இருக்கிறது. இல்லத்தில் வழிபடுபவர்கள், ‘ஸ்ரீராம்.. ஜெயராம்.. ஜெய ஜெய ராம்’ என்ற 13 எழுத்து கொண்ட ராம நாமத்தை உச்சரித்தாலே நல்ல பலன் கிடைக்கும்.

கடினமான நட்சத்திரங்கள்

‘ஆதிரை, பரணி, கார்த்திகை
ஆயில்யம், முப்பூரம், கேட்டை
தீதரு விசாகம் ஜோதி
சித்திரை மகம் எராரும்
மாதனம் கொண்டார் தாரார்
வழிநடைப் பட்டார் மீளார்
பாய்தனில் படுத்தோர் தேரார்
பாம்பின் வாய் தேரைதானே’ என்பது ஒரு பழம் பாடல்.

மேற்கண்ட நட்சத்திரங்களில் பணம் கொடுத்தால் திரும்பக் கிடைப்பது அரிது. பயணம் செய்தால் பிரச்சினைகள் உருவாகும். வியாதியின் காரணமாக படுக்கையில் படுத்தவர்கள் உடல் நலம் பெறுவது கடினம் என்பதாக அந்த பாடல் அமைந்திருக்கிறது.

- தொகுப்பு: சிவல்புரி சிங்காரம்

Next Story