தீமையை எரிக்கும் ஹோலி


தீமையை எரிக்கும் ஹோலி
x
தினத்தந்தி 19 March 2019 9:43 AM GMT (Updated: 19 March 2019 9:43 AM GMT)

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வரும் பவுர்ணமி தினத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தென்னிந்தியாவில் இப்பண்டிகையின் கோலாகலம் குறைவு என்றாலும், வட இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரத்தில் வியக்கத்தக்க வகையில் மிகவும் உற்சாகமாக இந்த பண்டிகையை கொண்டாடி மகிழ்கின்றனர். ஹோலி பண்டிகைக்கு ஒருமாதம் முன்பாகவே கலர் பொடிகளை தயார் செய்யும் பணி தொடங்கி விடுகிறது. ஹோலி பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து விழா வாழ்த்துக்களை தெரிவித்து, கலர் பொடிகளைத் தூவியும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அப்போது ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு மறைந்து, அனைவரும் ஒன்று என எண்ணும் மகத்துவம் ஓங்கி நிற்பது இவ்விழாவின் சிறப்பாகும்.

பிரகலாதனையும், அவனது தந்தை இரண்யகசிபுவையும் அனைவரும் அறிந்தே இருப்பார்கள். தன் பெயரை உச்சரிக்காமல், ஹரியின் நாமத்தை உச்சரிக்கும் மகனின் மீது கோபம் கொண்டான் இரண்யகசிபு. பலமுறை எடுத்துக் கூறியும் பிரகலாதன் ஹரி நாமம் உச்சரிப்பதை நிறுத்தாததால், பல வழிகளிலும் அவனை சித்திரவதை செய்ய உத்தரவிட்டான். அதன்படி இரண்யகசிபுவின் அரண்மனை காவலர்கள், பிரகலாதனை விஷம் கொண்ட பாம்புகளின் அறைக்குள் விட்டனர்; தொடர்ந்து மதம் கொண்ட யானையால் மிதிக்கச் செய்தனர். மலையில் இருந்து உருட்டி விட்டனர்.

ஆனால் எப்போதும் ஸ்ரீமன் நாராயணரின் நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருந்த பிரகலாதனை இந்த துன்பங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதனைக் கண்ட இரண்யகசிபு சற்று யோசித்தான். அவனுக்கு ஒரு அற்புதமான யோசனை தோன்றியது. இரண்யகசிபுவுக்கு ஹோலிகா என்ற சகோதரி இருந்தாள். அவள் தீயால் தீண்டப்படாத வரம் பெற்றிருந்தாள். அதாவது அக்னி தேவன் அவளை எரித்தாலும் கூட அவளுக்கு ஒன்றும் நேராது. இப்படிப்பட்ட வரத்தைப் பெற்ற ஹோலிகாவை, தன்னுடைய மகனை துன்பப்படுத்தும் முயற்சிக்கு பயன்படுத்தினான்.

மீண்டும் ஒரு முறை பிரகலாதனிடம், தன்னுடைய நாமத்தையே உச்சரிக்க வேண்டும் என்று கூறினான் இரண்யகசிபு. ஆனால் ‘நாராயணரே முதல் கடவுள். அவரது நாமத்தையே உச்சரிப்பேன்’ என்று பிடிவாதமாக இருந்தான் பிரகலாதன். அதனால் தன் சகோதரி ஹோலிகாவை அழைத்து, தீயின் நடுவில் அமர்ந்து பிரகலாதனையும் அவளுடன் மடியில் அனைத்து வைத்துக் கொள்ளும்படி உத்தரவிட்டான். சகோதரனின் வார்த்தைக்கு கட்டுப்பட்ட ஹோலிகா, பிரகலாதனை அனைத்தபடி தன் மடியில் வைத்துக் கொண்டு மரக்கட்டைகளின் மேல் அமர்ந்தாள். அந்த மரக்கட்டைகளுக்கு தீ மூட்டப்பட்டது.

அக்னி ஜூவாலைகள் கொழுந்து விட்டு எரிந்தன. அப்போதும் நாராயணரின் நாமத்தை உச்சரிப்பதை பிரகலாதன் நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் படர்ந்து எரிந்த தீயில் ஹோலிகா சாம்பலானாள். பிரகலாதன் சிரித்த முகத்துடன் அக்னியில் இருந்து வெளிப்பட்டான். ஹோலிகா பஸ்பமான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலேயே, ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஹோலிக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல் பல மரக்கட்டைகளை வைத்து எரியூட்டி, அக்னி தேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படுகிறது. அப்போது ஹோலிகா தகனமானதை ஒட்டியும், பக்த பிரகலாதன் உயிர்பெற்றெழுந்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ‘ஹோலி, ஹோலி’ என்று உற்சாக குரல் எழுப்புவார்கள். தேங்காயுடன் பூஜை செய்த இனிப்புகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள் மக்கள் ஒருவருக்கு ஒருவர் கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.

பிருந்தாவனத்தில் இந்த விழா வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது. அங்கு கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து அமர்ந்திருப்பார்கள். அப்போது மனைவி துணியால் தனது கணவனை அடித்துக் கொண்டே இருப்பார். எவ்வளவு அதிகமாக அடி வாங்கிக்கொள்கிறார்களோ, அவ்வளவு அன்பு நிறைந்தவன் என்று கருதுகின்றனர்.

Next Story