கர்ப்பிணிக்கு அடைக்கலம் கொடுத்த அய்யனார்


கர்ப்பிணிக்கு அடைக்கலம் கொடுத்த அய்யனார்
x
தினத்தந்தி 19 March 2019 9:48 AM GMT (Updated: 19 March 2019 9:48 AM GMT)

திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் சூழ்ந்த இடம், ராமநதி அணை பகுதி. இந்த அணைக்கு மேற்கே மலையில் ராமநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது தலைமலை அய்யனார் கோவில். இவரை அந்த பகுதி மக்கள் ‘தலைமலை அய்யன்' என்றும் அழைப்பார்கள். இந்த கோவிலின் வரலாற்றை பார்ப்போம்.

இந்தியாவில் பல மலைகள் இருந்தாலும் இமய மலையும், பொதிகை மலையும் தான் தலைசிறந்த, புகழ்பெற்ற மலைகளாகும். சிவன் - பார்வதி திருமணத்திற்கு அனைத்து முனிவர்களும், ஞானிகளும் இமயமலைக்கு வந்ததால், வடக்கே தாழ்ந்து தெற்கே உயர்ந்தது. இதை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு செல்லுமாறு சிவபெருமான் கூறினார். இதை ஏற்று பொதிகை மலைக்கு வந்த அகத்தியர், இங்கு தலைமலை அய்யனாரையும், ஆதிசங்கரியான அம்பாளையும், பிரம்ம சக்தியையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அவருடன் தேரையர் சித்தர், கோரக்கர், மச்சமுனி, கலைக்கோட்டு மாமுனி ஆகியோரும் அங்கு தங்கி இருந்து தலைமலை அய்யனாரை வழிபட்டு வந்தனர்.

இந்த நிலையில் சீதையை ராவணன் தூக்கிச் சென்றதை அடுத்த, காட்டு வழியே வந்த ராமனும், லட்சுமணனும் அகத்தியரை சந்தித்தனர். அப்போது அகத்தியர், இத்தல அய்யனாரை ராமர் வழிபடும் முன், அவர் குளிப்பதற்காக ஒரு நதியை உருவாக்கினார். அந்த நதி தான் ராமநதியாகும். அந்த ராமநதியில் குளித்து விட்டு ராமரும், லட்சுமணரும் தலைமலை அய்யானாரை வழிபட்டனர். அப்போது அகத்தியர், அம்பாளின் சக்தியை திரட்டி, ராவணனை வெல்வதற்காக ஒரு அம்பு தயாரித்து கொடுத்து, “இலங்கைக்கு சென்று ராவணனை வென்று சீதையை மீட்டு வருவாய்” என்று ஆசீர்வாதம் செய்தார்.

ராமநதியில் புனிதநீராடி தலைமலை அய்யனாரை மனதார வேண்டினால், அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தலைமலை அய்யனார் கோவில் அமைந்த வனப் பகுதிக்கு, ஒரு நிறைமாத கர்ப்பிணி விறகு பொறுக்க வந்தாள். அப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. உடனே அந்தப் பெண், தலைமலை அய்யனார் கோவில் கருவறைக்குள் மழைக்காக ஒதுங்கினாள். அதே நேரம் அவளுக்கு பிரசவ வலியும் ஏற்பட்டுவிட்டது. ஒரு ஆண் கருவறைக்குள் இருப்பது, கர்ப்பிணிக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும் என்று எண்ணிய அய்யனார், கருவறையை விட்டு வெளியேறினார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு, ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்ற பெண்ணின் ரத்தவாடைக்கு, காட்டில் இருந்த கடுவாய் புலி அங்கு வந்தது. தாயையும், குழந்தையையும் அடித்து தின்ன முற்பட்டது. அப்போது அந்தப் பெண், ‘அய்யனாரே’ என்று சத்தம் போட்டாள். உடனே அய்யனார், கடுவாய் புலியை கல்லாக மாறும்படி சபித்தார். அந்த புலியின் கற்சிலையை இன்றும் ஆலயத்தில் காணலாம்.

அதே போல் கர்ப்பிணிக்கு இடம் கொடுத்த தலைமலை அய்யனார், கோவில் கருவறைக்கு வெளியே வெட்டவெளியில் தான் உள்ளார். அவர் லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். அய்யனாருக்கும், ஆதி சிவசங்கரிக்கும், பிரம்ம சக்திக்கும் வெட்டவெளியில்தான் பூஜை நடக்கிறது. ராமநதி அணைப்பகுதியில் மழை பெய்யவில்லை என்றால், அந்த பகுதி மக்கள் தலைமலை அய்யனார் கோவிலுக்கு சென்று வருண ஜெபம் செய்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வார்கள். இதனால் உடனடியாக மழை பெய்யும் என்பது அவர்களின் நம்பிக்கை.

தலைமலை சாஸ்தா அருகில் வனபேச்சி அம்மனுக்கும், கருப்பசாமிக்கும் தனியாக கோவில் உள்ளது. ராமநதியில் குளித்துவிட்டு இங்குள்ள கருப்பசாமியை 9 கடைசி வெள்ளிக்கிழமை விளக்கு ஏற்றி வழிபட்டால், நினைத்தது நிறைவேறும். இந்த அய்யனாரை வழிபட்டு வேண்டுதல் நிறைவேறிய பின்னர், பக்தர்கள் அவருக்கு மணி செய்து கட்டுகிறார்கள். இதனால் கோவில் மரம், மண்டபம் முழுவதும் மணிகளாகவே காட்சி அளிக்கிறது. இந்த கோவில் அருகில் தோரணமலை முருகன் கோவில், சூட்சமுடையார் சாஸ்தா கோவில், வில்வவனநாத சுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களும் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா கடையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் ராமநதி அணை உள்ளது. அணை வரை கார், வேன், ஆட்டோ செல்லும். அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து தான் கோவிலுக்கு செல்லவேண்டும். பாவூர்சத்திரத்தில் இருந்து தோரணமலைக்கும், ராமநதி அணைக்கும் மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன.

புலவனூரான்

Next Story