மன அமைதி தரும் மணப்புள்ளி பகவதி


மன அமைதி தரும் மணப்புள்ளி பகவதி
x
தினத்தந்தி 18 April 2019 11:00 PM GMT (Updated: 18 April 2019 10:48 AM GMT)

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், யாக்கரை என்ற இடத்தில் அமைந்திருக்கிறது, மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில். இந்த அம்மனுக்குக் கருப்பு சாந்து அபிஷேகம் செய்து வழிபட்டால், மனப் போராட்டங்கள், மன நோய்கள் அகன்று மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதோடு நோயற்ற வாழ்வு, கல்வியில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு கிடைத்தல் போன்ற சிறப்புப் பலன்களும், இந்த அன்னையின் கடைக்கண் பார்வையால் நமக்கு கிடைக்கும்.

தல வரலாறு

பூமியில் வாழ்ந்த வந்த மக்களையும் முனிவர்களையும் நீலன் என்னும் அசுரன் துன்புறுத்தி வந்தான். அவனது கொடுமையான செயல்களால் மிகவும் பாதிக்கப்பட்ட முனிவர்கள், சிவபெருமானை சந்தித்தனர். அவரிடம், தங்களை அசுரனிடம் இருந்து காப்பாற்றி அருளும்படி வேண்டினர்.

தட்சனின் வேள்வியை நிறுத்துவதற்காக, சிவபெருமானின் சடைமுடியில் இருந்து தோன்றியவள் பத்ரகாளி. அவளை மீண்டும் அழைத்த சிவபெருமான், நீலன் அசுரனை அழித்து, முனிவர்களையும், பூலோக மக்களையும் காத்தருளும்படி கூறினார். சிவபெருமானின் கட்டளையை ஏற்றுக்கொண்ட பத்ரகாளி, அங்கிருந்து பூலோகம் சென்று நீலனையும், அவனுக்கு துணையாக இருந்த அசுரப் படைகளையும் அழித்தாள்.

பின்னர் மன அமைதியை விரும்பிய பத்ரகாளி, ஓரிடத்தில் அழகிய வயல்வெளி களாக இருந்த ஊரின் நடுவில் அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினாள். ஆனால் அறுவடைக் காலங்களில், அந்த இடத்தில் அரிசி குத்தும் சத்தம் அதிகமாக கேட்கத் தொடங்கியது. அந்தச் சத்தம் அவளுடைய தவத்திற்கு இடையூறாக இருந்த காரணத்தால், பத்ரகாளி அங்கிருந்து கிழக்குப் பக்கமாக சென்று, ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்தாள்.

அன்னை அங்கு குடியிருப்பதை அறிந்து கொண்ட பக்தர்கள், அவளுக்கு ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்தனர். அதன்படி ஒரு நம்பூதிரியை அழைத்து, அம்மனுக்கு கோவில் கட்ட சரியான இடத்தை தேர்வு செய்து தரும்படி வேண்டினர். அந்த நம்பூதிரியும், பிரசன்னம் என்னும் ஜோதிட ரீதியான வழிமுறையை பின்பற்றி, அம்மனுக்கு கோவில் அமைப்பதற்கு சரியான இடம் எது என்று தேடினார். அந்த தேடுதலின் முடிவில், ஆலமரத்தின் அடியிலேயே அம்மனுக்கு கோவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதுவே அம்மனுக்கு சிறந்த இடம் என்று நம்பூதிரி கூறினார். அதன்படி அந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டது என்று இந்த ஆலயத்தின் வரலாறு சொல்லப்படுகிறது.

இந்தப் பகுதியில் வசித்து வந்த வேதியர்கள் பலர், சோகனாசினி (பாரதப்புழா) ஆற்றின் கரையில் அதிக அளவில் யாகங்களை செய்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்தப் பகுதிக்கு ‘யாகக் கரை’ என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அதுவே நாளடைவில் மருவி, தற்போது ‘யாக்கரை’ என்று மாற்றம் அடைந்திருப்பதாக சொல்கிறார்கள். இங்கு வசித்த வேதியர்கள், ஆற்றின் கிழக்கு பகுதியில் உள்ள கரையை, மந்திரங்கள் சொல்லும் இடமாகவும், சமையல் செய்யக்கூடிய மடப்பள்ளியாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதனால் ‘மடப்பள்ளி’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் பகுதி, தற்போது பேச்சு வழக்கில் ‘மணப்புள்ளி’ என்று மாறிவிட்டதாக ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர்.

அம்மன் முதலில் இருந்த இடம் ‘படிஞ்சாரை யாக்கரை’ என்றும், பின்னர் கோவில் கொண்ட இடம் ‘கிழக்கு யாக்கரை’ என்றும் அழைக்கப்படுகிறது. மணப்புள்ளி பகவதி கோவில், மாட்டப்பிள்ளி பத்ரகாளி மணா என்னும் கேரள அந்தணக் குடும்பத்தினருக்குச் சொந்தமானதாக இருந்திருக்கிறது. பின்னர் இக்கோவிலின் நிர்வாகம் மலபார் கோவில்கள் வாரியத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.

ஆலய அமைப்பு

இக்கோவிலின் கருவறையில் உள்ள பகவதியம்மன், கருப்பு நிறத் தோற்றத்தில் காணப்படுகிறாள். மூன்று கண்கள், நான்கு கோரைப்பற்கள் கொண்டு அருளும் இந்த அன்னை, தன்னுடைய நான்கு கரங்களில், சூலம், கபாலம், வாள், கேடயம் போன்றவற்றைத் தாங்கி, வடக்கு திசையை பார்த்தபடி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இந்தக் கோவில் வளாகத்தில் கணபதி, கால பைரவர் மற்றும் சாஸ்தா ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த ஆலயத்தின் தெற்குப் பகுதியில் அழகிய குளம் ஒன்று இருக்கிறது. இந்தக் குளத்தில் அசுரர்களை அழிப்பதற்காக, பகவதியம்மன் பயன்படுத்திய வாள் ஒன்று இருப்பதாக ஐதீகம் உள்ளது. இந்தக் குளத்தில் நீராடி அம்மனை வழிபட்டால் எதிரிகள் பயம் விலகும் என்கிறார்கள்.

இந்தத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அம்மனுக்கு, சிறப்பு நாட்களில் அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. சித்திரை மாதம் முதல் நாளில் நடைபெறும் விசுத் திருநாள், ஆவணி மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளில் நடைபெறும் ஓணம் திருநாள் போன்ற சிறப்பு நாட்களில், இந்த அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பெறுகின்றன.

இங்கிருக்கும் அம்மனுக்குச் சிவபெரு மானைப் போல் மூன்றாவது கண் இருப்பதால், துன்பங்களால் துவண்டு போய் இருப்பவர்களும், பிறரால் துன்பங்களை சந்திப்பவர்களும் இங்கு வந்து வழிபட்டால், அந்த குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். நன்மைகள் பலவும் நடைபெறும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

குருவாயூரில் கிருஷ்ணருக்கு செய்யப்படும் சந்தன அபிஷேகம், சபரிமலையில் ஐயப்பனுக்கு செய்யப்படும் நெய் அபிஷேகம் போன்றவை சிறப்புக்குரியவை. அதே போல மணப்புள்ளி பகவதியம்மனுக்கு கருப்பு சாந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. இது இங்கு மிகவும் விசேஷமான அபிஷேகமாகும். கருப்பு சாந்து அபிஷேகம் செய்து வழிபட்டால், மனப்போராட்டங்கள், மன நோய்கள் போன்றவை நீங்கி மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த அபிஷேகத்தைச் செய்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலயமானது காலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம், பாலக்காடு நகரில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது யாக்கரை. பாலக்காடு நகரில் இருந்து யாக்கரை செல்வதற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

-தேனி மு.சுப்பிரமணி

வேலைத் திருவிழா

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும், மாசி மாதம் வரும் முதல் வெள்ளிக்கிழமையில், ‘கன்யர்’ என்னும் கொடியேற்றத்துடன், ஆண்டுத் திருவிழா தொடங்குகிறது. விழாவின் 14-வது நாளில் நடைபெறும் ‘வேலைத் திருவிழா’ என்பது இந்த ஆலயத்தின் சிறப்பு நிகழ்வாக கருதப்படுகிறது.

இந்த வேலைத் திருவிழாவின் போது, அம்மன் பக்தர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். அவர் ஆலயத்தின் பின்புறம் உள்ள குளத்தில் இறங்கி, அசுரனை அம்மன் அழிக்க பயன்படுத்திய வாளை எடுத்து வந்து, கோவிலில் வைத்து வழிபாடு செய்வார். இந்த வாள் எடுத்து வரும் நிகழ்வை ‘வெளிச்சப்பாடு திருவிழா’ என்கிறார்கள்.

வேலைத் திருவிழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிகழ்வை “வேல ஊட்டு” என்கின்றனர். விழாவில் 15 யானைகள் அணி வகுத்து நிற்கின்றன. பாண்டி, பஞ்சாரி மேளம், பஞ்சவாத்தியம் போன்ற இசைக்கருவிகள் வாசிக்கப்படுகின்றன.

அசுரனை அழித்து விட்டு, கோபத் தோற்றத்தில் இருக்கும் அம்மனை, அமைதிப்படுத்தும் விதமாக, அம்மனுக்கு முழுமையாகக் கருப்பு சாந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. இப்படிச் செய்வதால் அம்மன் மனம் குளிர்ந்து, பக்தர்களுக்குப் பல்வேறு நற்பலன்களை வழங்குவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இவ் வேளையில், அம்மனுக்கு “கடும் மதுரா பாயாசம்” படைக்கப் பெற்று பக்தர் களுக்கு வழங்கப்படுகிறது.

Next Story