துன்பங்களை அகற்றும் சாயா சோமேஸ்வரர்


துன்பங்களை அகற்றும் சாயா சோமேஸ்வரர்
x
தினத்தந்தி 9 May 2019 11:00 PM GMT (Updated: 9 May 2019 11:11 AM GMT)

பகல் நேரம் முழுவதும் தூணின் நிழல் சிவபெருமான் மீது விழும் அதிசயக் கோவில்.

சூரியனின் மனைவி சாயா வழிபடும் இறைவன், சிவன் - விஷ்ணு - சூரியன் ஆகிய மூவருக்கும் முக்கோண அமைப்பில் அமைந்த ஆலயம், கருங்கல்லால் ஆன பிரமிடு வடிவ கருவறைக் கோபுரங்கள் கொண்ட கோவில், ராமாயணம், மகாபாரதக் காட்சிகள் தூணில் சிற்பங்களாக அமைந்துள்ள திருத்தலம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, தெலுங்கானா மாநிலம் நல்கொண்டாவில் உள்ள சாயா சோமேஸ்வரர் திருக்கோவில்.

புராண வரலாறு

இக்கோவிலை சூரியனின் மனைவியான சாயாதேவி வழிபடுவதாக தல வரலாறு சொல்கிறது. ‘சாயா’ என்பதற்கு ‘நிழல்’ என்று பொருள். அதன் படியே சுவாமி சன்னிதியின் எதிரே சூரியன் பயணம் செய்ய, ஏழு குதிரைகளுடன் கூடிய பீடம் மட்டுமே அமைந்துள்ளது. சிலை வடிவம் இல்லை. இந்த ஐதீகத்தில் குண்டூர் சோழர்கள் ஆட்சியில் எழுப்பப்பட்டதுதான் இந்த பனகல் சாயா சோமேஸ்வரர் திருக்கோவில் ஆகும்.

கி.பி. 1040 முதல் 1290-ம் ஆண்டுகளில் இந்தப் பகுதியில் ஆட்சி செய்த குண்டூர் சோழர்கள் காலத்தில், இங்கு எண்ணற்ற ஆலயங்கள் எழுப்பப்பட்டன. அதில் பனகலில் மட்டும் இரண்டு சிவாலயங்கள் கட்டப்பட்டன. அதில் ஒன்று சாயா சோமேஸ்வரர் திருக்கோவில். இது முக்கோண வடிவிலும், மூன்று கருவறை விமானங்கள், மூன்று பிரமிடு வடிவிலும் கருங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.

களப்பிரர்கள் காலத்தில் தமிழகத்தில் இருந்து தெலுங்கு தேசத்திற்குச் சென்றவர்கள் சோடர்கள் எனும் தெலுங்குச் சோழர்கள். சிற்றரசர் களான இவர்கள் பொத்தப்பி, வெலநாண்டு, நெல்லூர் முதலிய இடங்களில் ஆட்சி செய்தனர்.

இரண்டாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் தெலுங்கு சிற்றரசர்களான இவர்களில் ஒருவரே குண்டூர் மாவட்டத்தில் ஆட்சி செய்த மகாமண்டலீசுவர பல்லய சோட மகாராஜா ஆவார். இவரின் வழிவந்தவர்களே குண்டூர் சோழர்கள் என கூறப் படுகிறது. இவர்கள் பனகலைத் தலைநகராகக் கொண்டு, நல்கொண்டா, மெகபூப் நகர் மற்றும் கம்பம் மாவட்டங்களில் ஆட்சி செய்து வந்தனர்.

பனகலில் கலைநயம் கொண்ட சாயா சோமேஸ்வரர் மற்றும் பச்சலா சோமேஸ்வரர் திருக்கோவில்கள் எழுப்பப்பட்டன. அதேபோல, விவசாயத்திற்காக உதய சமுத்திரம் என்ற பிரமாண்ட ஏரியும் உருவாக்கப்பட்டது.

கி.பி. 1290-ல் ஆட்சிக்கு வந்த தெலுங்கு மன்னர் பரம்பரையைச் சார்ந்த காக்கத்தியர்கள் ஆட்சிக் காலத்தில், இக்கோவிலுக்கு சாசனங்கள் எழுதப்பட்டன. கோவில் திருப்பணிகளும் நடைபெற்றன. ஆலயத்தில் குண்டூர் சோழர்கள் மற்றும் காக்கத்தியர்கள் கால கலைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாலயத்தின் பெரும்பகுதி கலைச்சிற்பங்கள், டெல்லி சுல்தானின் காலத்தில் சிதைக்கப்பட்டுள்ளன.

ஆலய அமைப்பு

பனகல் என்ற ஊரின் தென்பகுதியில் சாயா சோமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் கிழக்கே, வற்றாத திருக்குளம் உள்ளது. இதற்கான நீர், ஸ்ரீசைலத்தில் இருந்து பனகல் உதய சமுத்திரம் ஏரிக்கு வந்து, அதிலிருந்து இத்திருக்குளத்திற்கு வந்து சேருகின்றது. கோவிலின் வாசல் மூன்று புறம் இருந்தாலும், தெற்கு வாசலை நோக்கியே ஆலய நுழைவு வாசல் அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு நோக்கியபடி, சாயா சோமேஸ்வரர் காட்சி தருகிறார். எதிரில் நந்தி, பலிபீடம் உள்ளது. ஆலயத்திற்கு வடக்கு நோக்கிய விஷ்ணு சன்னிதி, மேற்கு நோக்கிய சூரியன் சன்னிதி இருக்கின்றன. போரில் ஏற்பட்ட சிதைவால், அங்கு பீடங்கள் மட்டுமே காணப்படுகின்றன. கருவறை முன்புறம், விநாயகர், முருகன் பீடங்கள் அமைந்துள்ளன. கருவறையில் ஐந்து படிகள் கீழே, சாயா சோமேஸ்வரர் பூமியோடு தன்னைப் பிணைத்துக் கொண்டு, லிங்கத் திருமேனியில் நமக்கு காட்சியளிக்கிறார்.

சிவன், விஷ்ணு, சூரியன் சன்னிதிகளின் எதிரே மையமாக, நான்கு நாற்பட்டை வடிவத் தூண்கள் அமைந்துள்ளன. இந்தத் தூண்களின் கற்கள் அபூர்வமானதாக உள்ளன. இதில் மகாபாரதம், ராமாயணம் சிற்பங்கள் வெகு நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து வெளிப்படும் ஒளியே, கருவறையில் நிழலாக தோன்றுவதாக நம்பப்படுகிறது.

இவ்வாலயத்தில் அமைந்திருந்த விஷ்ணு, சூரியன், நந்திகள், அம்மன் சிலைகள் டெல்லி சுல்தானியர்களின் காலத்தில் நடைபெற்ற போரால் சிதைந்துள்ளன. அவற்றுக்கெல்லாம் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆலயத்தில் விநாயகர், குமாரசுவாமி, சாயா சோமேஸ்வரர், மகாவிஷ்ணு, சூரியன், யோகினி மாதா, நடராஜர், பைரவர், காளிக்கா மாதா ஆகிய சன்னிதிகள் அமைந்துள்ளன. ஆலய வளாகத்தில் தனியே சிறிய சிவாலயம் ஒன்றும் உள்ளது. தலமரமாக அவதம்பர் என்ற அபூர்வ மரம் உள்ளது. இதில் தத்தாத்ரேயர் தவமியற்றுவதாக நம்பப்படுகிறது. எதிரே திருக்குளம் பிரமாண்டமாக அமைந்துள்ளது.

இவ்வாலயம் தெலுங்கானா மாநில தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. காலை முதல் மாலை வரை இந்த ஆலயத்தை தரிசனம் செய்யலாம்.

அமைவிடம்

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில், நல்கொண்டாவை அடுத்து 4 கிலோமீட்டர் தொலைவில் பனகல் உள்ளது. ஐதராபாத் நகரில் இருந்து சுமார் 110 கி.மீ., வாரங்கல்லில் இருந்து 145 கி.மீ. தொலைவிலும் நல்கொண்டா இருக்கிறது. ஐதராபாத்தில் இருந்தும், வாரங்கல்லில் இருந்தும் நல்கொண்டா செல்ல அடிக்கடி பேருந்து வசதிகள் உள்ளன.

ஆலய நிழல் அதிசயம்

பகல் நேரம் முழுவதும் லிங்கத் திருமேனியின் மீதும், அதன் பின் புறம் சுவரிலும், ஒரு தூணின் நிழல் விழுகின்றது. அதுமட்டுமின்றி, பகல் முழுவதுமே இந்த தூணில் நிழல் ஒரே இடத்திலேயே இருப்பதுதான் பெரிய ஆச்சரியம். பவுர்ணமி நேரத்திலும் இந்த நிழல் விழுவதாக கோவில் பக்தர்கள் கூறுகின்றனர். கருவறைக்கு முன்புறம் நான்கு பட்டை வடிவ தூண்கள் உள்ளன. ஆனால் கருவறைக்குள் விழும் நிழல் எந்த தூணுக்கானது என்பதை கண்டறிய முடியவில்லை. மேலும், கருவறை வாசலில் நின்றால், நம்முடைய நிழல் இண்டாகவும், சுவாமி மீது விழும் நிழல் அதே நிலையிலும் இருப்பது உலக அதிசயம்தான்.


தூண் சிற்பங்கள்

மூன்று கருவறைக்கும் மையமாக உள்ள பகுதியில் சதுர வடிவ நான்கு தூண்கள் அமைந்துள்ளன. இவை நான்குமே சிற்பக்கலைகளின் சுரங்கமாக உள்ளன. சிறிய இடத்திற்குள் ராமாயணம், மகாபாரதம் இவற்றினை நம் கண்முன்னே கொண்டு வருகின்றன. அதில் மானாக உருவம் எடுத்த மாரீசனை ராமன் கொல்லுதல், மானின் தலை கீழே விழ, அதிலிருந்து மாரீசன் வெளிப்படுதல் போன்ற காட்சி அருமையாக வடிக்கப்பட்டுள்ளது. இதே போல, நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் விலங்குகளை, ஒரே கட்டத்தில் செதுக்கியிருப்பது, சுற்றுச்சூழல் அறிவியலில் நம்மவர்கள் நிபுணர்களாக இருந்துள்ளனர் என்பதை உறுதிசெய்யும் விதமாக இருக்கிறது.

உயிரோட்டமான நந்தி

ஆலய வளாகத்தில் 7 நந்திகள் தலை வெட்டப்பட்ட நிலையிலும் கம்பீரமான தோற்றத்துடன் காட்சியளிக்கின்றன. அதில் முதல் நந்தியை, கழுத்தில் கைகளால் தடவிப் பார்த்தால், உயிருள்ள நந்தியைத் தழுவுவது போன்று உணர்வு ஏற்படுகிறது. இது நம் முன்னோர்களின் கலைத் திறமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

பனையபுரம் அதியமான்

Next Story