கடன் பிரச்சினை தீர்க்கும் குலதெய்வ வழிபாடு


கடன் பிரச்சினை தீர்க்கும் குலதெய்வ வழிபாடு
x
தினத்தந்தி 28 May 2019 10:10 AM GMT (Updated: 28 May 2019 10:10 AM GMT)

முற்பிறவியில் நாம் செய்த வினை களின் காரணமாக, இந்தப் பிறவியில் பல தொல்லைகளை அனுபவிக்கிறோம். அதில் ஒன்றுதான் கடன் பிரச்சினை.

கடன் பிரச்சினை விரைவில் தீர, மூன்று பவுர்ணமி தினங்கள் குலதெய்வ கோவிலுக்குச் சென்று குலதெய்வத்தை மனமுருக வேண்டி, முறையாக வழிபட்டு வந்தால் கடன் தொல்லைகள் அனைத்தும் விலகும்.

ஒரு சிலருக்கு குலதெய்வம் இருக்கும் ஆலயம், வெகு தொலைவில் இருப்பதால் தொடர்ந்து மூன்று பவுர்ணமிகள் செல்ல இயலாத நிலை இருக்கும். அது போன்ற சமயங்களில் ஒரு சில பரிகாரங்களை வீட்டிலேயே செய்யலாம்.

வீட்டில் குலதெய்வ படம் வைத்துள்ளவர்கள், அதன் முன்பாக ஐந்துமுக விளக்கில் நெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும். அதன் பிறகு அவரவர் வழக்கப்படி குலதெய்வத்திற்கு படையல் இட்டு வழிபட்டு, கடன் பிரச்சினைகள் முழுவதுமாக நீங்க வேண்டும் என்று மனமுருகி குலதெய்வத்திடம் பிரார்த்தனை செய்யவேண்டும். இப்படி தொடர்ந்து ஒன்பது பவுர்ணமிகள் குலதெய்வத்திற்கு படையலிட்டு வழிபட்டு வந்தால், கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். குலதெய்வ படம் வீட்டில் இல்லாதவர்கள், குலதெய்வ கோவில் உள்ள திசை நோக்கி இந்த வழிபாட்டை செய்யலாம்.

* கடன் பிரச்சினை தீர இன்னும் சில பரிகாரங்களும் இருக்கின்றன. அதாவது ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலை குளித்து பூஜைகள் செய்து, அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று மகாலட்சுமியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மகாலட்சுமி வரவிற்கு குறைவே இருக்காது.

* வெள்ளிக்கிழமை காலை 5 வெற்றிலை, 5 கொட்டை பாக்கு, 5 ஒரு ரூபாய் நாணயம் ஆகியவற்றை பூஜையில் வைத்து லட்சுமி வழிபாடு செய்ய வேண்டும். பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் பொழுது மேற்கண்டதை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும்.

* வளர்பிறையில் வரக்கூடிய திருதியை அன்று அன்னதானம் செய்தாலும் கடன் பிரச்சினை மற்றும் பண பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இதை ஒவ்வொரு மாதமும் செய்யலாம்.

- பாலாஜி கணேஷ்

Next Story