விளக்கேற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்


விளக்கேற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்
x
தினத்தந்தி 10 July 2019 12:04 PM GMT (Updated: 10 July 2019 12:04 PM GMT)

நமது அன்றாட வாழ்வில் விளக்கு வழிபாடு, மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. விளக்கு வழிபாடு செய்வதால் நமது வீட்டுக்கு தெய்வீகப் பேரொளியும், லட்சுமி கடாட்சமும் வருவதாக ஐதீகம்.

விளக்கு வழிபாட்டை தினந்தோறும் கடைப்பிடிக்கும் இல்லங்களில், தெய்வபலம் பெருகுவதால், தீய சக்திகள், செய்வினைகள், திருஷ்டிகள் எதுவும் அண்டாது.

பெண்கள் காலையில் எழுந்ததும் விளக்கேற்றி இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, அதன் பிறகு அன்றைய நாளை தொடங்கும்போது மனதில் உற்சாகமும், செயலில் ஒரு உத்வேகமும் பிறக்கும். புராண - இதிகாச காலங்களில், மகரிஷிகள் யாகங்களையும், ஹோமங்களையும் செய்து இறைவனை வழிபட்டனர். இறைவனை ஜோதி வடிவில் வழிபாடு செய்வதால், மனித வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகுகின்றது. ‘காஸ்மிக் பவர்’ என்று சொல்லப்படும் பிரபஞ்ச சக்தியை நமக்குப் பெற்றுத் தருவதாக இந்த வழிபாடு இருக்கிறது.

விளக்கு வழிபாடு சுற்றுப்புற இருளைப் போக்குவதோடு, மனதின் இருளையும் அகற்றுகிறது. விளக்கின் சுடரொளியில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதியும் எழுந்தருளுவதாக ஐதீகம். இதனால்தான் விளக்கேற்றி இறைவழிபாடு செய்தால், முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒன்றாகப் பெறலாம்.

விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றுவது நல்லது. பசுநெய் தீபத்தில் அம்பாள் வாசம் செய்வதாக நம்பப்படுவதால், அதை ஏற்றும்போது சிவமாகிய ஜோதியுடன் இணைந்து சிவசக்தி சொரூபமாகிறது.

- பாலாஜி கணேஷ்

Next Story