சிம்ம முகத்துடன் லட்சுமிதேவி


சிம்ம முகத்துடன் லட்சுமிதேவி
x
தினத்தந்தி 16 July 2019 9:58 AM GMT (Updated: 16 July 2019 9:58 AM GMT)

சின்னசேலம் அடுத்த ஆறகழூரில் உள்ள காமநாதேஸ்வரர் ஆலயத்தில், அஷ்ட பைரவர்களையும் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம்.

திருக்கள்ளில், சுருட்டப்பள்ளி ஆகிய தலங்களில், சக்தியோடு கூடிய தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்யலாம்.

காங்கேயம் முருகன் ஆலயத்தில், கால்நடைகள் நோய் நொடியின்றி வளமாக வாழ, ‘கதனை’ என்று கூறப்படும் அதிர்வெடி வழிபாடு நடைபெறுகிறது.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அழகிரிநாதசுவாமி ஆலயத்தில், சிம்ம முகத்துடன் அனுமனை தரிசிக்கலாம்.

வந்தவாசிக்கு அருகில் உள்ள மேலஆவணியாபுரத்தில் சிம்ம முகத்தோடு அருள்புரிகிறாள் மகாலட்சுமி தேவி. பக்தர்களைக் காக்க, யாகத் தீயால் எரிந்த, அடையாளம் காண முடியாத, முகமில்லாத நரசிம்மர் மடியில் இந்த தேவி அமர்ந்திருக்கிறாள். அந்த நரசிம்மரின் முகத்தை தேவியும் ஏற்றுக்கொண்டிருப்பதாக ஐதீகம்.

ஆந்திராவில் உள்ள மங்களகிரி பானக நரசிம்மருக்கு, நாம் எவ்வளவு பானகம் நிவேதனம் செய்தாலும், அந்தப் பானக அளவில் பாதியை விழுங்கி, மீதியை பிரசாதமாக நிறுத்திவிடுகிறார். இனிப்பான பானகம் எத்தனையோ லிட்டர் கொண்டு சேர்த்தாலும், அத்தலத்தில் ஈ, எறும்பு இல்லாதது இறைவனின் அற்புதம்தான்.

செங்கல்பட்டு அருகே உள்ள பொன்பதர்கூடத்தில் ராமபிரான் நான்கு கரங்களுடன் மூலவராகவும், கும்பகோணம் அருகே உள்ள புள்ளம்பூதங்குடியில் உற்சவராகவும் அருள்பாலிக்கிறார்.

கும்பகோணம் அடுத்த திருமீயச்சூர் அருகே உள்ள தலத்திலும், சிதம்பரம் தெற்கு வீதியில் மனித முகத்துடனான விநாயகரை தரிசனம் செய்யலாம்.

வேதாரண்யம் அருகில் உள்ள கோடிக்காட்டில் ஆறு கரங்களும் ஒரு முகமும் கொண்ட முருகப்பெருமான் அருள்கிறார்.

கும்பகோணம் அருகில், நாச்சியார்கோவில் கல் கருடன் வீதிஉலா வரும்போது, கருடனின் எடை கூடிக்கொண்டே செல்வதும், பின் ஆலயம் திரும்பும்போது குறைந்து கொண்டே வருவதுமான அற்புதம் நிகழ்கிறது.

Next Story