இறைவன் ஏந்தி வந்த அணையா விளக்கு


இறைவன் ஏந்தி வந்த அணையா விளக்கு
x
தினத்தந்தி 6 Sep 2019 8:49 AM GMT (Updated: 6 Sep 2019 8:49 AM GMT)

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், ஏற்றுமானூர் என்ற இடத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் 450 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அணையா விளக்கு ஒன்று இருக்கிறது.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், ஏற்றுமானூர் என்ற இடத்தில் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் 450 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அணையா விளக்கு ஒன்று இருக்கிறது. இவ்விளக்கின் கீழ் படியும் எண்ணெய் மை, கண் சம்பந்தமான அத்தனைக் குறைபாடுகளையும் சரி செய்யும் தன்மை கொண்டது என்கின்றனர். இந்த ஆலயத்தைப் பற்றியும், அதன் சிறப்புகளைப் பற்றியும் இங்கே பார்க்கலாம்.

தல வரலாறு

கரன் என்ற அசுரன், சிவபெருமானின் தீவிர பக்தனாக இருந்தான். அவன் முக்தி வேண்டி ஈசனை நினைத்து கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவனிடம் மூன்று சிவலிங்கங்களைக் கொடுத்து, “இந்த லிங்கங்களை மூன்று இடங்களில் நிறுவி வழிபட்டால், முக்தி கிடைக்கும்” என்று சொல்லி அனுப்பினார். மகிழ்ச்சி அடைந்த கரன், ஒரு லிங்கத்தை வலது கையிலும், மற்றொரு லிங்கத்தை இடது கையிலும், மூன்றாவது லிங்கத்தை வாயில் வைத்தும் எடுத்துச் சென்றான்.

இந்த நிலையில் அசுரனை பின்தொடர்ந்து செல்லும்படி, புலிக்கால் முனிவரான வியாக்ரபாதருக்கு உத்தரவிட்டார், சிவபெருமான். வியாக்ரபாதரும் அசுரனைப் பின்தொடர்ந்து சென்றார். நெடுந்தூரம் நடந்து சென்ற அசுரன், பயணக் களைப்பினால் ஓரிடத்தில் ஓய்வெடுக்க நினைத்தான். தனது வலது கையில் இருந்த சிவலிங்கத்தை கீழே வைத்து விட்டு ஓய்வெடுத்தான். சிறிது நேரத்திற்குப் பின், கீழே வைத்த சிவலிங்கத்தை எடுக்க முயன்றபோது, அது வரவில்லை. எவ்வளவு முயன்றும், லிங்கத்தை அசைக்கக் கூட முடியவில்லை.

அப்போது அங்கு வந்த வியாக்ரபாதரிடம், தரையில் வைக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபடும்படி அசுரன் கேட்டுக் கொண்டான். அதனை ஏற்ற வியாக்ரபாதர், அவ்விடத்திலேயே தங்கி, சிவலிங்கத்திற்கு நீண்ட காலம் பூஜை செய்து வழிபட்டார். அந்த இடத்தில் அமைந்த ஆலயம்தான் ‘வைக்கம் மகாதேவர் கோவில்’ ஆகும்.

மீதம் இருந்த இரண்டு சிவலிங்கங்களுடன் அங்கிருந்து சென்ற அசுரன், இடது கையில் வைத்திருந்த சிவலிங்கத்தை ஏற்றுமானூர் என்ற இடத்தில் நிறுவினான். அந்தக் கோவில் ‘ஏற்றுமானூர் மகாதேவர் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சென்ற அசுரன், வாயில் வைத்திருந்த லிங்கத்தை மற்றொரு இடத்தில் நிறுவி வழிபட்டு முக்தியடைந்தான். அந்த ஆலயம் ‘கடுந்துருத்தி மகாதேவர் ஆலயம்’ என்று பெயர் பெற்றது. இந்தத் தகவல்கள் அனைத்தும் பார்க்கவ புராணத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.

அசுரன் இடது கையில் கொண்டு சென்ற சிவலிங்கத்தை நிறுவிய இடம் முன்பு வனப்பகுதியாக இருந்தது. அப்போது அந்த பகுதி, ‘ஹரிணபுரம்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. உயரமான அந்த வனப்பகுதியில் மான்கள் அதிகம் இருந்ததால், அப்பகுதியை மலையாளத்தில் ‘ஏற்றம் (உயரம்) மான் ஊர்’ என்று அழைத்தனர். அதுவே பின்னாளில் மருவி ‘ஏற்றுமானூர் என்று பெயர் பெற்றதாக சொல்கிறார்கள். அதே போல் இந்த மகாதேவர் ஆலயம் எட்டு மனைக்காரர்களுக்கு சொந்தமாக இருந்ததாகவும், அதனால் இந்த ஆலயம் ‘எட்டு மனைக்காரர்கள் கோவில்’ என்று அழைக்கப்பட்டதாகவும், அதுவே பின்னாளில் ‘எட்டு மானூர்’ என்றும், ‘ஏற்றுமானூர்’ என்று திரிந்து வந்ததாகவும் பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது.

ஆலய அமைப்பு

15-ம் நூற்றாண்டில் இக்கோவிலுக்கு வந்து வழிபட்ட சந்திர பாஸ்கரன் என்ற பாண்டிய மன்னன், தன் உடலில் இருந்த கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கியதை உணர்ந்தான். இதனால் இத்தல இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, இந்த ஆலயத்தை புதிதாக கட்டியதாக கூறப்படுகிறது. மேற்கு நோக்கிய நிலையில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் வட்ட வடிவக் கருவறையில் கரன் என்ற அசுரன் நிறுவிய சிவலிங்கம் இருக்கிறது. அகோரமூர்த்தியாகக் கருதப்படும் இவரை ‘ஏற்றுமானூரப்பன்’, ‘மகாதேவர்’ ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தில் அம்பாளுக்கு சன்னிதி இல்லை. இருப்பினும் இறைவனின் கருவறைக்குப் பின்புறம் பார்வதி சன்னிதியாகக் கருதப்படுகிறது.

முன் மண்டபத்தில் கல்லினால் ஆன நந்தி ஒன்றும், உலோகத்தால் ஆன நந்தி ஒன்றுமாக இரண்டு நந்திகள் இருக்கின்றன. ஆலய வளாகத்தில் கணபதி, சாஸ்தா, தட்சிணாமூர்த்தி, யட்சி ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கருவறையைச் சுற்றி வரும் பாதையில் ராமாயணம் மற்றும் பாகவத புராணங்களின் கதை, மரச்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன.

ஆலயத்தின் நுழைவு வாசலில் 450 ஆண்டுகளுக்கும் மேலாக, அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும் அணையா விளக்கு ஒன்று இருக்கிறது. இதனை மலையாள மொழியில் ‘வல்லிய விளக்கு’ என்கின்றனர். இந்த அணையா விளக்கு இங்கு அமைந்திருப்பதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது.

ஒரு பெரியவர், பெரிய தூக்கு விளக்குடன் இந்தக் கோவிலுக்கு வந்தார். “நான் பல நாட்களாகப் பட்டினியாக இருக்கிறேன். இந்த விளக்கை வைத்துக் கொண்டு, எனக்கு யாராவது பணம் கொடுங்கள்” என்று இறைஞ்சினார்.

அங்கிருந்த சிலர், “பணம் கொடுத்து விளக்கு வாங்கும் நிலை ஏற்றுமானூரப்பனுக்கு இல்லை” என்று கூறி அவரை கேலி செய்தனர். உடனே அந்தப் பெரியவர், ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனிடம் “இறைவா, என்னைக் காப்பாற்று” என்று கண்ணீர் மல்க வேண்டி நின்றார்.

இந்த நிலையில் அந்தப் பகுதியில் திடீரென்று சூறாவளிக் காற்றுடன் இடியும் சேர்ந்து மழை பெய்யத் தொடங்கியது. அப்போது அங்கு வந்த ஒருவர், அந்தப் பெரியவர் கொண்டு வந்த விளக்கைப் பலிக்கல் அருகேத் தூக்கிக் காட்டினார். உடனே சூறாவளியுடன் கூடிய இடி-மழை நின்று போனது. விளக்கை கையில் வைத்திருந்தவரும் திடீரென்று மறைந்து போனார். அப்போதுதான், பெரியவரை கேலி செய்தவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக இறைவனே விளக்கே ஏந்தி வந்தது தெரியவந்தது. இறைவனே கையில் ஏந்தி வந்ததால், இந்த விளக்கு இன்று வரை அணையாமல் எரிந்து கொண்டிருப்பதாக செவி வழிக்கதை சொல்லப்படுகிறது.

இறைவன் சிவபெருமான், பார்வதி தேவியை கயிலாயத்திலேயே விட்டு விட்டு ஏற்றுமானூர் சென்றுவிட்டார். இதனால் கவலை அடைந்த பார்வதி தேவி, பூதகணங்கள், கணபதி, சாஸ்தா உள்ளிட்ட சிலருடன் கயிலாயத்தில் இருந்து ஏற்றுமானூருக்கு புறப்பட்டாள். தான் இருக்கும் இடம் தேடி வந்த பார்வதியைக் கண்டு இறைவன் மகிழ்ச்சியடைந்தார். அவர்களை வரவேற்கும் விதமாக ஒரு விளக்கை ஏந்தி வரவேற்றார். இறைவனிடம் இருந்து அந்த விளக்கைப் பெற்ற பார்வதி, அதை தூண்டி விட்டு அதன் ஒளியை அதிகரித்தாள். மேலும் அந்த விளக்கில் படிந்திருந்த கருப்பு நிறச் சாம்பலை எடுத்து தனது இரு கண்களையும் அழகுபடுத்திக் கொண்டாள். அந்த விளக்கே இன்றளவும் அணையாமல் எரிந்து கொண்டிருப்பதாக மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது.

இந்த ஆலயத்தில் சிவபெருமானுக்குரிய பிரதோஷம் உள்ளிட்ட அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் மாசி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் ஆறாட்டு விழா நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், ‘ஏழரைப் பொன் ஆனா’ என்ற நிகழ்வு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தக் கோவிலில் வந்து வழிபடுபவர்களுக்கு, வயிறு மற்றும் தோல் தொடர்பான நோய்கள் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவை நீங்கும் என்பதும், உடலில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கும் என்பதும் பொதுவான பலனாக இருக்கிறது. இங்கு எரிந்து கொண்டிருக்கும் அணையா விளக்கின் கீழ் படியும் எண்ணெய் மை, கண் சம்பந்தமான அத்தனைக் குறைபாடுகளையும் சரி செய்யும் தன்மை கொண்டது என்கிறார்கள். இத்தல இறைவனை காலை வேளையில் வழிபட்டால் மன மகிழ்வும், மதிய வேளையில் வழிபாடு செய்தால் காரியங்களில் வெற்றியும், இரவு நேரத்தில் வழிபட்டால் தவறுகளுக்கு மன்னிப்பும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்தக் கோவில் தினமும் அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம் கோட்டயம் நகரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், வைக்கம் நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது, ஏற்றுமானூர் மகாதேவர் கோவில். கோட்டயம், வைக்கம் ஆகிய ஊர்களில் இருந்து அதிகமான பஸ் வசதிகள் உள்ளன.

-தேனி மு.சுப்பிரமணி

Next Story