தித்திக்கும் வாழ்வருளும் திருமோகூர் காளமேகப்பெருமாள்


தித்திக்கும் வாழ்வருளும் திருமோகூர் காளமேகப்பெருமாள்
x
தினத்தந்தி 17 Sep 2019 10:33 AM GMT (Updated: 17 Sep 2019 10:33 AM GMT)

அமிர்தத்தை தேவர்களுக்கு அளிக்க மோகினி அவதாரம் எடுத்த தலம், சக்கரத்தாழ்வார் பரிபூரண சக்தியோடு அமர்ந்திருக்கும் தலம் என பல்வேறு சிறப்புக்கள் கொண்டதாக திருமோகூர் திருத்தலம் விளங்குகிறது.

அமிர்தத்தை தேவர்களுக்கு அளிக்க மோகினி அவதாரம் எடுத்த தலம், புராண கால வரலாறு கொண்ட கோவில், விஸ்வகர்மா எழுப்பிய கோவில், சங்க காலத்திலும், பாண்டிய மன்னர்கள் காலத்திலும் சிறப்புற்று விளங்கிய தலம், நம்மாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம், நின்ற, கிடந்த கோலம் கொண்ட திருக்கோவில், சக்கரத்தாழ்வார் பரிபூரண சக்தியோடு அமர்ந்திருக்கும் தலம், பிரம்மன் வழிபட்டு தீர்த்தம் உண்டாக்கிய பூமி என பல்வேறு சிறப்புக்கள் கொண்டதாக, மதுரை மாவட்டத்தில் உள்ள திருமோகூர் திருத்தலம் விளங்குகிறது.

புராண வரலாறு

கிருத யுகத்தில் துர்வாசரை மதிக்காத குற்றத்திற்காக சாபம்பெற்ற இந்திரன், விமோசனம் பெற்ற தலம், திருமோகூர் திருத்தலம் ஆகும். திருப்பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட அமிர்தத்தைப் பருக அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. அதைத் தடுக்க விரும்பிய திருமால், மோகினி வடிவம் எடுத்து, அசுரர்களை திசை திருப்பி, தேவர்கள் அமிர்தம் பருக வழிவகுத்தார். இறைவன் மோகினி வடிவம் எடுத்த தலம் இது என்பதால், ‘மோகினியூர், மோகியூர், மோகன சேத்திரம்’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், தற்போது மோகூர் என்று வழங்கப்படுகிறது.

துவாபர யுகத்தின்போது, இந்தத் தலத்தில் புலஸ்தியருக்கு மோகினி வடிவில் இறைவன் காட்சி தந்து அருளியதாக புராண வரலாறு சொல்கிறது. இங்கு பிரம்மதேவன் தவம் இயற்றியதை பிரமாண்ட புராணத்தில் அறியமுடிகிறது. சங்க காலத்திலேயே இத்தலம் பழையன் என்ற சிற்றரசனின் ஊராகத் திகழ்ந்திருக்கிறது. மோரியர் படை மோகூரைத் தாக்கிய போது, பழையனுக்குத் துணையாக கோசர்கள் நின்று வெற்றி தேடித் தந்தனர். கி.பி. 8, 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் பாடிப் பரவிய தலம் இது.

ஆலய அமைப்பு

கிழக்கு நோக்கிய பிரமாண்ட திருக்கோவில் ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. இடது புறம் மிகப்பெரிய திருப்பாற்கடல் தீர்த்தம். அதன் எதிரே, பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில் அமைந்துள்ளது.

இந்த ஆலயம் ஸ்ரீதேவி - பூதேவி சமேத காளமேகப்பெருமாள், மோகனவல்லித் தாயார், பள்ளிகொண்ட பெருமாள், ஆண்டாள், கருடாழ்வார், அனுமன், நவநீத கிருஷ்ணர் ஆகிய சன்னிதிகளைக் கொண்டுள்ளது. மூலவர் காளமேகப் பெருமாள் கருவறையைச் சுற்றி இரண்டு திருச்சுற்று மதில்கள் உள்ளன. 108 திவ்ய தேசங்களில் இது 46-வது தலமாக விளங்குகிறது. பாண்டியர்கள், விஜயநகர மன்னர், நாயக்கர்கள், மருதுபாண்டியர்கள் என பல்வேறு மன்னர்கள், இந்த ஆலயத்திற்கு திருப்பணி செய்ததை வரலாறு கூறுகின்றது. பாண்டிய வளநாட்டில் தென்பகுதியில் அமைந்த ஊராக திருமோகூர் விளங்குகின்றது.

நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்து மகிழ்ந்த தலம் இது. காளமேகப்புலவர் தனிப்பாடலில் புகழ்ந்துள்ளார். அஷ்ட பிரபந்தம் எனும் சிற்றிலக்கியம், அழகிய மணவாள தாசர் எனும் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார், வடமொழிப் புராணங்கள், பெரும் புலவர்கள் பாடல்கள் என இத்தலத்திற்கு எண்ணற்ற பக்தி இலக்கியங்கள் நிறைந்துள்ளன. இதுதவிர, திருமோகூர் புராணமும் இத்தலத்தைப் புகழ்கின்றது.

கருவறையில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக உயர்ந்த பீடத்தில் உயரமான வடிவில் காட்சியருள்கிறார், காளமேகப்பெருமாள். ரதி, மன்மதன், வில்லேந்திய ராமன், சீதை, லட்சுமணன் ஆகியோரது சிலை வடிவங்கள் கருவறையைச் சுற்றி அமைந்துள்ளன. இங்குள்ள கருடன் பெரிய வடிவில் எழிலான தோற்றத்தில் காட்சி தருகிறார்.

இவ்வாலயத்திற்கு மன்னர்கள் திருப்பணி செய்த விவரங்களைக் கூறும் கல்வெட்டு நிறைய உள்ளன. பிற்கால பாண்டிய ராஜசடையவர்மன் சுந்தர பாண்டியர் காலத்துக் கல்வெட்டு (கி.பி.1251 - 1271), முதலாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் (கி.பி.1268 - 1311) ஆகியோரது கல்வெட்டுகளில் காளமேகப்பெருமாள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த விஜயநகர மன்னனான வீரப்பிரதாப சதாசிவநாயனார் கல்வெட்டுகள், அவர் பல கொடைகள் வழங்கிய செய்தியை சொல்கின்றன. இந்த ஆலயத்தின் தல மரம் வில்வம். தல தீர்த்தம் திருப்பாற்கடல்.

இந்தக் கோவிலில் தமிழ் வருடப் பிறப்பு, நம்மாழ்வார் தோன்றிய வைகாசி விசாகம், பத்துநாள் பிரம்மோற்சவம், ஆனியில் முப்பழ உற்சவம், புரட்டாசி நவராத்திரி, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, மாசியில் கஜேந்திர மோட்சம், பங்குனி உத்திரம் என ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நிறைந்துள்ளன.

இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

ஆலய சிறப்பு

* இத்தலத்து தாயார் மோகனவல்லி, விழாக் காலங்களில் கூட வீதி உலா வருவதில்லை. எனவே இந்த தாயாரை ‘படி தாண்டாப் பத்தினி’ என்றும் பக்தர்கள் அழைக்கிறார்கள்.

* பொதுவாக, பள்ளிகொண்ட பெருமாள் சன்னிதியில் திருமாலின் பாதத்தில் கைகளால் வருடும் நிலையில் திருமகள் காட்சியளிப்பார். ஆனால் இங்கு திருமகளும், பூமகளும் திருமாலின் பாதங்களுக்கு அருகே சிறு குழந்தைகள் அமர்ந்திருப்பது போல் காலை முன்புறமாக நீட்டி அமர்ந்திருப்பது அரிய கோலமாகும்.

* வேண்டிய வரம் அருளும் நாதனாக, இத்தலத்தில் காளமேகப்பெருமாள் வீற்றிருக்கிறார். இருப்பினும் இங்குள்ள சக்கரத்தாழ்வாரே பக்தர்களின் நம்பிக்கை பெற்றவராக இருக்கிறார். இவருக்கு பின்புறம் யோக நரசிம்மர் வீற்றிருக்கிறார். நோய்கள், ஏவல், பில்லி, சூனியம், எதிரிகள் தொல்லை என அனைத்து இடர்களும் நீங்கும் என்பதால், இந்த சக்கரத்தாழ்வாரை வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அமைவிடம்

மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு வட்டத்தில், மதுரை - மேலூர் சாலையில் ஒத்தக்கரையின் அருகே 1 கிலோமீட்டர் தொலைவில் திருமோகூர் உள்ளது. மதுரைக்கு வடகிழக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. 


- பனையபுரம் அதியமான்

Next Story