லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க எளிய வழிமுறை


லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க எளிய வழிமுறை
x
தினத்தந்தி 15 Oct 2019 9:43 AM GMT (Updated: 15 Oct 2019 9:43 AM GMT)

ஒவ்வொருவரும் நம் வீட்டில் லட்சுமி குடியிருந்து, எப்போதும் பண வரவு திருப்திகரமாக இருக்க வேண்டும் என நினைப்பது இயல்பான ஒன்றாகும்.

வ்வொருவரும் நம் வீட்டில் லட்சுமி குடியிருந்து, எப்போதும் பண வரவு திருப்திகரமாக இருக்க வேண்டும் என நினைப்பது இயல்பான ஒன்றாகும். லட்சுமி கடாட்சம் என்றும் நம் வீட்டில் நிலைத்து இருக்க நம் முன்னோர்கள் கூறிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

ஒரு சிறிய மண்கலசம் (மூடியுடன்) எடுத்து அதில் சிறிது உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி, பருப்பு, நவ தானியம், புனுகு, குங்குமப்பூ, கஸ்தூரி, ஜவ்வாது, ஐம்பொன் (சிறிய அளவு), சிறிய வலம்புரி சங்கு, வெற்றிலை - பாக்கு போன்றவற்றை வியாழக்கிழமையே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் கலசத்தில் இட்டு, மண் கலசத்திற்கு விபூதியிட்டு சந்தனம், குங்குமம் வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். பின்னர் மகாலட்சுமியை மனதாற வேண்டி ‘தாயே நீ என்றும் என்குடும்பத்தில் இருந்து அருளவேண்டும்’ என பிரார்த்தனை செய்து விட்டு தூப, தீபம் காட்டி ‘ஓம் தன தான்ய லட்சுமியை வசி வசி வசியை நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை கூறி, பின் கலசத்தை மூடி பூஜையறையில் வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

நம் வீடுகளுக்குள் லட்சுமியை அழைத்து வரு வதற்கான சில எளிய வழிமுறைகள்:

* எந்த வீட்டில் பெண்கள் கவுரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.

* வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி சகல சவுபாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.

* இல்லம் தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ர நாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

* சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லட்சுமிக்கு மிகவும் பிடித்தவை.

* ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.

* எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ, அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும். (ஊறுகாய் குபேரனுக்கு மிகவும் பிடித்த உணவு)

* வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் நெல்லி மரம் திகழ்கிறது. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகாது.

* சர்ச்சை செய்யாத, சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இரக்க குணம் உடையவர்களுக்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்களுக்கு உலகம் தலை வணங்கும்.

* செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோமியம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

* காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் எப்போதும் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்.

பொ.பாலாஜி கணேஷ்

Next Story