பாவங்களை அகற்றும் காவிரி கடை முழுக்கு


பாவங்களை அகற்றும் காவிரி கடை முழுக்கு
x
தினத்தந்தி 12 Nov 2019 3:32 PM GMT (Updated: 12 Nov 2019 3:32 PM GMT)

ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது சிறப்பான ஒன்றாக கருதுகிறார்கள்.

16-11-2019 காவிரி கடை முழுக்கு

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகளில் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக்கொள்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். அப்படி தங்கள் நீர்நிலைகளில் வந்து நீராடுபவர்களை புனிதப்படுத்தி விட்டு, அவர்களின் பாவங்களை ஏற்றுக் கொள்கின்றன. அப்படி பாவங்களால் மாசுபடும் இந்த நதிகள் ஒவ்வொரு ஆண்டு துலா மாதம் என்னும் ஐப்பசியில் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரியில் நீராடிதங்களிடம் உள்ள பாவங்களைப் போக்கிக் கொள்வதோடு, தங்களை மென்மேலும் புனிதப்படுத்திக் கொள்வதாக ஐதீகம்.

மூன்று நதிகள் தவிர, சப்த கன்னியரும் கூட ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் நீராடுவதாக சொல்லப்படுகிறது. எனவே ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவது சிறப்பான ஒன்றாக கருதுகிறார்கள். ஐப்பசி மாதம் முழுவதும் நீராட முடியாதவர்கள், ‘கடை முழுக்கு’ என்று சொல்லப்படும்,  ஐப்பசி மாத கடைசி நாள் அன்று மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நீராடி, மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத மயூரநாதர் மற்றும் அருகில் உள்ள கருங்குயில்நாதன் பேட்டை ஆனந்தவல்லி சமேத சக்தி புரீஸ்வரர் ஆகியோரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

ஐப்பசி மாதத்தில் தினமும் சூரிய உதயத்திற்கு முன் காவிரியில் நீராடி புனிதமாவதே, ‘துலா ஸ்நானம்’ வழிபாடாகும். சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் காவிரியில் நீராடுவதாக ‘துலாக் காவிரி புராணம்’ கூறுகிறது. முடவன் முழுக்கு அன்று மயூர நாதர் ஆலயத்தில் இருந்து அம்மையப்பனும் அலங்கார ரதத்தில் துலாக்கட்டத்தில் எழுந்தருள்வார். அப்போது காவிரியில் நந்திகேஸ்வரருக்கு அபிஷேகத்துடன் தீர்த்தவாரி நடைபெறும். அந்தச் சமயத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவர். இதனால் நம்முடைய தலைமுறை பாவங்களும், கர்ம வினைகளும், வம்ச சாபம், பெண் சாபம் யாவும் அகலும் என்கிறார்கள்.

திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களிலும், திருநாவுக்கரசர் ஒரு பதிகத்திலும் மயூரநாதரைப் போற்றிப் பாடியுள்ளனர். கோவிலின் முதற்சுற்றுப் பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் மயிலம்மன் சன்னிதி இருக்கிறது. இங்கு அம்மன் மயில் வடிவில் தாண்டவம் ஆடி ஈசனை வழிபட்டதால் ‘மயிலாடுதுறை’ என்ற பெயர் உண்டானது. ஐப்பசி திரு விழாவின் ஐந்தாம் நாளில் சிவ-பார்வதி இருவரும் ஆடிய மயூர தாண்டவத்தை இங்கு தரிசிக்கலாம். இங்கு நடராஜர் மயூரத் தாண்டவ திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். தினமும் மாலையில் இவருக்குத்தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. இவருக்கு நேரே மயிலம்மன் சன்னிதி இருக்கிறது.

கருவறையில் மூலவர் மயூரநாதர் கிழக்குநோக்கி சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கிறார். கருவறை கோஷ்டத்தில் ஆலிங்கன மூர்த்தி தரிசனம் அளிக்கிறார். இவரை வழிபட்டால் கருத்துவேறுபாடு நீங்கி தம்பதி ஒற்றுமை சிறக்கும் என்கிறார்கள். இத்தல அம்மனின் திருநாமம் ‘அபயாம்பிகை’ என்பதாகும்.

முன்னூறு வருடங்களுக்கு முன்பு மயிலாடுதுறை அருகிலுள்ள நல்லத்துக்குடி என்னும் திருத் தலத்தில், சிவபக்தி நிறைந்த குடும்பத்தில் கிருஷ்ணசாமி எனும் சிறுவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் உண்ண உணவில்லாமல் பசியில் தனித்திருந்தான். அவன் மனம் மயிலாடுதுறை அபயாம்பிகையை எண்ணித் துதித்தது. அப்போது சாதாரண பெண்வடிவில் வந்த அபயாம்பிகை அம்பாள், தங்கக் கிண்ணத்தில் தாம் கொண்டுவந்த அன்னத்தை எடுத்து கிருஷ்ண சாமிக்கு ஊட்டினாள். அப்போதே மிகுந்த ஞானமும், கல்வியும், கவி புனையும் ஆற்றலும் கைவரப்பெற்றான் அந்தச் சிறுவன். அதுமுதல் கிருஷ்ணசாமி தினமும் அதிகாலையில் நல்லத்துக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்து மயூரநாதர் ஆலயத்தில் தொண்டாற்றி, அர்த்தஜாம பூஜை முடிந்தபின்பு நல்லத்துக்குடிக்கு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ஒருநாள் அர்த்தஜாம பூஜை முடிந்து நல்லத்துக்குடிக்கு கிருஷ்ணசாமி திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது ஓரிடத்தில் இருளில் கால் இடறி விழுந்தார். ‘அபயாம்பிகை அம்மா! எனக்கு இந்த இருளில் ஒளி காட்டி அருளக் கூடாதா?” என அன்னையை அழைத்தார். என்ன ஆச்சரியம்! அன்னை அபயாம்பிகை திருக்கரத்தில் கைவிளக்கு ஏந்தி அவர்முன் தோன்றி ஒளிவீச வழிகாட்டினாள். கிருஷ்ணசாமி மெய்மறந்து அன்னையைத் துதித்தார். நல்லத்துக்குடி வரை அபயாம்பிகை அம்மன் கையில் விளக்குடன் வந்து வழிகாட்டி மறைந்தாள். அன்று முதல் அனுதினமும் அர்த்தஜாம பூஜை முடிந்து நல்லத்துக்குடிக்குச் செல்லும் கிருஷ்ணசாமியின் முன்பு கைவிளக்கு ஒன்று தோன்றி அவரது வீடுவரை ஒளிவீசி வழிகாட்டி வருமாம். அந்தரத்தில் மிதந்தபடி அருள்வழி காட்டி தினமும் கிருஷ்ணசாமியை அழைத்துச் செல்லும் விளக்கைக் கண்ட ஊரார் ஆச்சரியப்பட்டனர்.

ஒருநாள் அபயாம்பிகை அம்மன் முன்பு நின்று வழிபட்டுக்கொண்டிருந்த கிருஷ்ண சாமிக்கு, யாவரும் கேட்கும்வண்ணம் கருவறையில் இருந்து அசரீரி கேட்டது. “அன்பனே! சதகம் எனும் நூறுப் பாடல்களை செந்தமிழால் எம்மைப் புகழ்ந்து பாடுக. உன்னுடைய அந்தச் சதகப் பாடல்களின் மூலம் யார் என்னைத் துதித்து வழிபட்டாலும், அவரது குலம் சிறந்து விளங்க அருள்புரிவேன்” என்றது அந்தக் குரல்.

“அம்மா! கவி பாடும் அளவுக்கு எனக்குத் திறமை இல்லையே? நானெப்படி உன் மீது பாமாலை சூடுவேன்?” என்று கிருஷ்ணசாமி மனமுருக வேண்ட, “அதற்கு நானே அருள்புரிவேன்” என்று அவருக்கு கவிபாடும் திறனை அன்னை அருளினாள்.

திருக்கடையூர் அபிராமி அம்மன் மீது நூறு பாடல்களைக் கொண்ட ‘அபிராமி அந்தாதி’ பாடியதன் மூலம் சுப்பிரமணியன் ‘அபிராமி பட்டர்’ ஆனார். அதே போல மயிலாடுதுறை அபயாம்பிகை அம்மன் மீது நூறு பாடல்களைக் கொண்ட ‘அபயாம்பிகை சதகம்’ பாடியதன் மூலம் கிருஷ்ணசாமி ‘அபயாம்பிகை பட்டர்’ ஆனார். இந்த சதகத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால், வாழ்வில் எல்லா வளங்களையும் பெறலாம் என்பது நம்பிக்கை.

இத்தலத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமி நாளில் மயூரநாதருக்கு அன்னாபிஷேகமும், கார்த்திகை மாத அனைத்து திங்கட் கிழமைகளின் அந்திப்பொழுதில் 1008 சங்காபிஷேகமும் வெகுச்சிறப்பாக நடைபெறுகிறது.

அமைவிடம்

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.

சிவ.அ.விஜய் பெரியசுவாமி

Next Story