புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை - பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்


புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை - பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்
x
தினத்தந்தி 4 Oct 2020 6:09 AM GMT (Updated: 4 Oct 2020 6:09 AM GMT)

புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமிதரிசனம் செய்தனர்.

துறையூர்,

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையை யொட்டி நேற்று காலை 5.30 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

இதுபோல் திருவெள்ளரை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் அருகே கோபுரப்பட்டியில் உள்ள அதிநாயக பெருமாள் கோவில் நேற்று காலை பெருமாளுக்கு திருமஞ்சனமும், தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி கருட மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 94 கரியமாணிக்கம் கிராமத்தில் ராமர் -சீதை திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

தா.பேட்டை அடுத்த நீலியாம்பட்டி தலைமலை அடிவாரத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில், பிள்ளாபாளையத்தில் நரசிங்கபெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அப்போது நரசிங்கபெருமாள் வெள்ளி கவசம் சாற்றப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். பின்னர் கோவில் வளாகத்தில் திருக்கோடி தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது.

இதுபோல் தா.பேட்டையில் வேணுகோபால சுவாமி, கொளுஞ்சிப்பட்டி கிராமத்தில் ராஜகோபாலசுவாமி உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இதுபோல் துறையூர் அருகே பெருமாள் மலையில் ஸ்ரீதேவி பூதேவி வெங்கடாசலபதி கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் வெள்ளிகவசம் சாற்றப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருச்சி தாராநல்லூர் ஸ்ரீசுப்பராயர் என்கின்ற சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி வேதநாராயண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். மேலும் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்றன. இதுபோல் கல்லக்குடி சந்தோஷ ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 1008 வடைமாலை சாற்றப்பட்டது.

Next Story