நோய் தீர்க்கும் ‘நூபுர கங்கை’


நோய் தீர்க்கும் ‘நூபுர கங்கை’
x
தினத்தந்தி 7 Dec 2020 11:15 PM GMT (Updated: 7 Dec 2020 6:12 PM GMT)

பழமுதிர்சோலை முருகன் கோவிலில் இருந்து சிறிது தூரம் மேல் ஏறிச் சென்றால், வேடுவர்களின் குலதெய்வமான ராக்காயி கோவில் உள்ளது. இங்கு நூபுர கங்கை தீர்த்தம் காணப்படுகிறது.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இந்த தீர்த்தம் அறியப்படுகிறது. இந்த தீர்த்தம் உற்பத்தியாகும் இடம் பல ஆராய்ச்சிகளுக்கு இடையிலும் கூட இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள்.

யானையின் துதிக்கைப் போல, பருமனாக அமைந்த கோமுகியின் வழியாக மாதவி மண்டபத்தில் வந்து விழுகின்றது, இந்த நூபுர கங்கை தீர்த்தம். இந்தத் தீர்த்தத்தில் இரும்பு சத்தும், தாமிர சத்தும் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது. நோய்கள் தீர்க்கும் சக்திக் கொண்டதாக இத்தீர்த்தம் விளங்குகிறது. இத்தீர்த்தம் தெற்கு நோக்கி பாயும்போது ‘சிலம்பாறு’ என்றும் அழைக்கப்படுகிறது. சோலைமலை யின் கீழ் வீற்றிருக்கும் அழகரின் அடிகளை வருடிக்கொண்டு கடைசி யாக ஏரிகளில் கலந்து வயல்களில் பாய்கிறது. ஆற்று நீரின் ருசியும், ஆற்று நீரால் விளையும் தானியங் களின் ருசியும் மிகுந்திருப்பதால் இதற்கு ‘தேனாறு’ என்றும் பெயர். இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற அழகர்கோவில் பிரசாதமான ‘சம்பா தோசை’ தயார் செய்யப்படுகிறது.

இங்கிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது, அனுமன் தீர்த்தம். இங்கு ஒரு அனுமன் ஆலயமும் உள்ளது. இதற்குச் சற்று மேல் பகுதியில் கருட தீர்த்தம், கருடர் கோவில் இரண்டும் இருக்கின்றன. அதன் பக்கத்தில் பாண்டவ தீர்த்தமும், கோவிலும் காணப்படுகிறது. மலையின் வடக்கு பக்கத்து சரிவில், பார்த்த உடனேயே பாவத்தை போக்கக் கூடிய ‘பெரிய அருவி தீர்த்தம்’ இருக்கிறது. அழகர் கோவிலுக்குச் சிறிது வடக்கே போனால், ‘உத்தர நாராயண வாவி’ என்னும் தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தத்தைக் கொண்டுதான் அழகர் கோவிலின் பரிவார தேவதைகளுக்கு அபிஷேகமும், சமையலும் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

அழகருடைய திருமஞ்சனத்துக்கு மட்டும் தினந்தோறும், 2 மைல் தூரத்தில் உள்ள நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது. சைத்ரோற்சவ காலத்தில் அழகர் மதுரைக்கும், வண்டியூருக்கும் போய்த் தங்கி இருப்பார். அப்போதும் கூட நூபுர கங்கை தீர்த்தம் கொண்டு வந்துதான் அவருக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. வேறு தீர்த்தத்தில் அழகரை நீராட்டினால், அவர் உருவம் கருத்து விடுகிறது என்பதாலேயே இப்படி செய்யப்படுவதாக கூறுகிறார்கள்.

Next Story