நதிகள் நீராடும் குளம்


நதிகள் நீராடும் குளம்
x
தினத்தந்தி 23 Feb 2021 12:08 PM GMT (Updated: 23 Feb 2021 12:08 PM GMT)

ஒரு பிரளய காலத்தின் போது, பிரம்மதேவன் மிதக்க விட்ட அமிர்தம் அடங்கிய குடத்தை, சிவபெருமான் அம்பு விட்டு உடைத்தார். இதையடுத்து அமிர்த குடம் உடைந்து, அதில் இருந்து அமிர்தம் சிதறியது.

ஒரு பிரளய காலத்தின் போது, பிரம்மதேவன் மிதக்க விட்ட அமிர்தம் அடங்கிய குடத்தை, சிவபெருமான் அம்பு விட்டு உடைத்தார். இதையடுத்து அமிர்த குடம் உடைந்து, அதில் இருந்து அமிர்தம் சிதறியது. குடம் உருண்டு ஓடியது. அந்த குடம் நிலைபெற்று நின்ற இடம்தான் ‘கும்பகோணம்.’ சிதறிய அமிர்தம் ஒன்று சேர்ந்த இடமே கும்பகோணத்தில் உள்ள ‘மகாமக குளம்’ என்கிறார்கள்.

ஒரு முறை புண்ணிய நதிகள் அனைத்தும், சிவபெருமானை சந்தித்தன. அந்த நதிகள் அனைத்தும் ஈசனிடம், “ஐயனே.. மக்கள் அனைவரும் எங்கள் நதிகளில் நீராடி அவர்களின் பாவங்களை எங்களிடமே விட்டுச் சென்று விடுகின்றனர். இதனால் எங்களுக்கு பாவங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. எங்களிடம் வந்துசேரும் அந்த பாவங்களை, நாங்கள் எப்படி தொலைப்பது?” என்று கேட்டனர்.

அதற்கு சிவபெருமான், “நதிதேவிகளே.. கும்பகோணத்தில் உள்ள மகாமக தீர்த்த குளத்தில், மாசி மகம் அன்று நீராடுங்கள். அதன் மூலம் உங்களை வந்தடைந்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்” என்றார். இதையடுத்து கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சரயு, வேகவதி, சிந்து, கோதாவரி, காவிரி, தபதி, பிரம்மபுத்திரா, தாமிரபரணி ஆகிய 12 நதிகள் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக்கொள்வதாக ஐதீகம். எனவே மாசிமகத்தன்று இங்கு வந்து நீராடுபவர்களுக்கும், அவர்களை சேர்ந்த குடும்பத்தாருக்கும் புண்ணியம் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. மகாமக குளத்தில் நீராடி எழுந்ததும் 9 பெண்களுக்கு தாம்பூலம், பழம், தட்சணை, தேங்காய், குங்குமம், ரவிக்கைத்துணி கொடுப்பது சிறப்பான பலனை தரும்.

Next Story