மகாவிஷ்ணுவின் வித்தியாசமான விஸ்வரூபம்


மகாவிஷ்ணுவின் வித்தியாசமான விஸ்வரூபம்
x
தினத்தந்தி 25 Feb 2021 11:30 PM GMT (Updated: 24 Feb 2021 7:16 PM GMT)

கிருஷ்ண பகவான் மூன்று பேருக்கு தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தைக் காட்டி அருளினார்.

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் சிறப்புக்குரியதும், லீலைகள் பலவற்றால் பக்தர்களை கட்டிப்போடும் திறம்கொண்டதுமாக உள்ளது ‘கிருஷ்ணர்’ அவதாரம் ஆகும். இந்த அவதாரத்தின் போது, கிருஷ்ண பகவான் மூன்று பேருக்கு தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தைக் காட்டி அருளினார். ஒன்று அஸ்தினாபுரத்தில் உள்ள துரியோதனன் சபைக்கு சென்றபோது, கண் பார்வைற்ற திருதிராஷ்டிரனுக்கு ஒரு கணம் கண் பார்வையைக் கொடுத்து, தன்னுடைய விஸ்வரூப காட்சியை காட்டியருளினார். பின்னர் குருசேத்திர களத்தில் வைத்து, அர்ச்சுனனுக்கு கீதையை உபதேசம் செய்தபோது, தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தைக் காட்டினார். அதன் பிறகு, அம்புகள் தைக்கப்பட்ட நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கர்ணனுக்கு, தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை காட்டி அருளினார்.

ஆனால் உண்மையிலேயே இவர்கள் மூவர் கண்டதை விட மிகப்பெரிய விஸ்வரூப தரிசனத்தைப் பெற்றவர், யசோதைதான். அதுபற்றி அர்ச்சுனனிடம், கிருஷ்ணர் கூறியதை இங்கே பார்ப்போம்.

ஒரு முறை அர்ச்சுனனுக்கு கர்வம் உண்டானது. ‘மகா விஷ்ணுவின் விஸ்வரூப தரிசனத்தையே நாம் பார்த்துவிட்டோம். நம்மை விட பேறு பெற்றவர்கள் இந்த பூமியில் எவரும் இல்லை’ என்று நினைத்தான். இதனை அறிந்த கிருஷ்ணர், “அர்ச்சுனா.. நீ என்னுடைய விஸ்வரூபமாக தரிசித்த அளவு, மிகவும் சாதாரணமானதுதான். அதை எண்ணி பெருமைப்பட ஒன்றுமே இல்லை” என்றார்.

அதைக் கேட்ட அர்ச்சுனன் திகைத்துப் போனான். “என்ன சொல்கிறாய் கிருஷ்ணா. அப்படியானால் இதைவிட பெரிய விஸ்வரூப தரிசனத்தை நீ காட்டியிருக்கிறாயா? அதைக் கண்ட பாக்கியசாலி யார்?” என்று கேட்டான்.

உடனே கிருஷ்ணர், “என்னை பாசத்தோடு வளர்த்து வந்த யசோதைதான், அந்த பாக்கியசாலி. சிறு குழந்தையாக இருந்தபோது, ஒரு முறை நான் மண்ணைத் தின்றேன். அதுபற்றி என்னுடைய நண்பர்கள், தாயார் யசோதையிடம் கூறிவிட்டனர். கோபத்தோடு என்னிடம் வந்த அவர், என்னுடைய வாயைத் திறந்து காட்டும்படி கூறினார். நான் மறுக்க வேண்டும் என்று நினைத்தாலும், அந்த தாய் என் மீது கொண்ட அன்புக்கு நான் எப்போதும் கட்டுப்பட்டவன் என்பதால், என்னுடைய வாயைத் திறந்து காட்டினேன். அதில் இந்த பூமி, அதில் வசிக்கும் தாவரம், விலங்கு, மனிதர்கள், பூச்சிகள், அதைத் தாண்டி உள்ள அண்டசராசரங்கள், பரந்த வெளி உள்ளிட்ட அனைத்தும் தென்பட்டன. அவர் கண்ட காட்சி விரைவிலேயே அவர் நினைவை விட்டு மறந்துபோகும்படி நான் செய்துவிட்டாலும், அவர் கண்ட அந்த தரிசனத்தை இதுவரை எவரும் கண்டதில்லை.

நீ, என்னுடைய விஸ்வரூபமாகக் கண்டது, இந்த பூமியில் விண்ணுக்கும், மண்ணுக்குமாக அடங்கிப்போன ஒரு சாதாரண உருவத்தைத்தான். ஆனால் யசோதை கண்டதோ, நீ கண்ட சாதாரண உருவத்தையும் உள்ளடக்கிய இந்த பூமியையும், மற்றபிற அண்ட சராசரங்களையும் ஆகும். எனவே அவர் கண்டதே மிகப்பெரிய விஸ்வரூபம்” என்றார்.

உண்மையும் அதுதான். யசோதயை விடவும் மிகப்பெரிய பாக்கியசாலி யாரும் இருக்க முடியாது. ஒரு தாயாக, மகனை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நினைத்தாள் யசோதை. ஒரு மகனாக, அந்த தாய்க்கு கட்டுப்பட்டு நடப்பதாக நடித்தார் கிருஷ்ணர். இது எதுவுமே தெரியாமல் போனாலும் கூட யசோதை என்பவள், மகாபாரதத்தைப் பொறுத்தவரை பாக்கியம் செய்த ஒரு பெண்.

Next Story