தெய்வங்கள் தேர்வு செய்த இனிய தினம்


தெய்வங்கள் தேர்வு செய்த இனிய தினம்
x
தினத்தந்தி 23 March 2021 1:24 AM GMT (Updated: 23 March 2021 1:24 AM GMT)

ஒவ்வொரு மாதமும் உத்திரம் நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம் தான் சிறப்புக்குரியதாக இருக்கிறது.

ஒவ்வொரு மாதமும் உத்திரம் நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரம் நட்சத்திரம் தான் சிறப்புக்குரியதாக இருக்கிறது. இதற்கு இந்த நாள், தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற மாதமாகவும், இந்த நாளில் விரதம் இருந்தால் திருமணங்கள் விரைவில் கைகூடும் என்பதும் ஐதீகமாக உள்ளது.

ஒருவருக்கு திருமணம் நடைபெற, ஜாதகத்தில் குருவின் அருள் நிறைந்திருக்க வேண்டும். அப்படி பார்க்கும் போது, குருவின் பூரண ஆசி பெற்ற அவரது சொந்த வீடான மீன ராசியில், சூரியன் சஞ்சரிக்கும் சிறப்பு மிகு மாதமாக பங்குனி திகழ்வதால், இதில் வரும் பங்குனி உத்திரம் சிறப்பு பெறுகிறது. அதனால்தான் தெய்வங்களே, இந்த நாளை தங்களின் நல்வாழ்வுக்காக தேர்ந்தெடுத்து, மக்களுக்கும் வழிகாட்டி இருக்கிறார்கள்.

இந்த பங்குனி உத்திர நாளில்தான், முருகப்பெருமான் - தெய்வானையின் திருமணம் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. இமயவானின் மகளாக பிறந்த பார்வதியை, சிவபெருமான் மணம் முடிக்க தேர்ந்தெடுத்த நாள் இது. மதுரையில் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருமணம் நடைபெற்றதும் இந்த நாளில்தான். ராமாயணத்தில் ராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்ணன் - ச்ருதகீர்த்தி ஆகியோரின் திருமணம் நடைபெற்றதும் பங்குனி உத்திர தினத்தில்தான்.

அதே போல், மகாலட்சுமி விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் மார்பில் இடம் பிடித்ததும் இந்த நாள்தான். முருகனை காதல் மணம் முடித்த வள்ளி அவதரித்த நாளாகவும், பங்குனி உத்திரம் சொல்லப்படுகிறது. அதோடு படைப்புக் கடவுளான பிரம்மதேவன், வாக்குக்கு அதிபதியான சரஸ்வதியை தன்னுடைய நாவில் அமர்த்திக் கொள்ளும் வரத்தைப் பெற்றதும், இந்த இனிய நாளில் என்று புராணம் எடுத்துரைக்கிறது.

இந்திரன் தன்னைவிட்டு பிரிந்திருந்த மனைவி இந்திராணியை சேர்ந்தது, இதுபோன்ற ஒரு பங்குனி உத்திர நாளில்தான். சந்திரன், ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை தன்னுடைய மனைவியராக அடைந்த புண்ணிய தினமும் இதுவே. ஆண்டாள்- ரங்கமன்னார் திருமணம் நடந்ததும் இந்த நாளில்தான் என்று சொல்லப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் அவதரித்தது, அர்ச்சுனன் பிறந்தது, சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, மணக்கோலத்தில் சிவபெருமான் காட்சி தந்தது என்று பங்குனி உத்திர நாள், தெய்வங்களே தேர்வு செய்த தினம் என்பதால் அது சிறப்புக்குரியதாக மாறி நிற்கிறது.

Next Story