இனிமையான வாழ்வை வழங்கும் ‘சித்திரை’


இனிமையான வாழ்வை வழங்கும் ‘சித்திரை’
x
தினத்தந்தி 12 April 2021 9:14 PM GMT (Updated: 12 April 2021 9:15 PM GMT)

நவக்கிரகங்கள், உலக இயக்கத்திற்கு அடிகோலுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. அந்த நவக்கிரகங்களில் தலைமை கிரகமாக இருப்பவர், சூரியன். இவரைச் சுற்றிதான் மற்ற கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்றன.

சூரியன், ஒரு மாதத்திற்கு ஒரு ராசி என்று, 12 மாதங்களும் 12 ராசிகளில் சஞ்சாரம் செய்கிறது. அதன்படி சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கு முதல் நாளே சித்திரை மாத பிறப்பாக உள்ளது. ராசிகளில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் சஞ்சரிக்கும் சித்திரையை முதன்மை படுத்தியே, தமிழ் வருடப் பிறப்பு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகையாகவும் இது இருக்கிறது.

சித்திரை மாதம் தொடங்கும் முதல் நாளை, ‘சித்திரை விஷூ’ என்றும் அழைப்பார்கள். ‘விஷூ’ என்பதற்கு ‘இரவும் பகலும் சமமானது’ என்று பொருள். சித்திரை மாதத்தில்தான் முக்கனிகளில் ஒன்றான மாமரத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கும். அதே போல் இறைசக்தி கொண்டதாக கருதப்படும் வேப்ப மரத்திலும் பூக்கள் பூக்கத் தொடங்கும். இப்படி இனிப்பும், கசப்பும் கொண்ட மரங்களில் ஒரே நேரத்தில் பூக்கள் பூப்பது போலவே, மனித வாழ்விலும் இன்பமும், துன்பமும் இரண்டற கலந்துதான் வரும். அதை சந்தித்து சமாளிப்பதற்குத்தான் இறைவழிபாடு நமக்கு உதவி செய்கிறது. சித்திரை வருடப்பிறப்பு நாளில், இறைவனை நம் மனதாலும், மெய்யாலும் வணங்கி துதித்தால், அந்த ஆண்டு முழுவதும் நமக்கு நன்மைகள் வந்து சேரும் என்பது நம்பிக்கை. மேலும் அந்த வருடத்தில் நாம் முன்னெடுக்கும் அனைத்து காரியங்களும், தங்கு தடையின்றி நிறைவேறும். அதோடு லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பிறவி துன்பம் நீங்கும்.

சித்திரை மாதம் முதல் நாளில், பலவகை மலர்கள், இலைகள், அருகு, மஞ்சள், பால் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட ‘மருந்து நீர்’ கொண்டு நீராடுவார்கள். பின்னர் ஆலயத்திற்குச் சென்று இறைவனை மனதார வணங்க வேண்டும். அதோடு ஆதரவற்றவர்களுக்கும், ஏழை-எளிய மக்களுக்கும், இயலாதவர்களுக்கும் தான தர்மங்களைச் செய்து, பெரியவர்களின் ஆசியைப் பெற வேண்டும். இவ்வாறு செய்வதால், நம் சந்ததியினர் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. மங்கலப் பொருட்கள் அணிந்து, இல்லங்களில் பொங்கல் வைத்து இறைவனுக்கு படைத்து, சூரிய நமஸ்காரம் செய்யலாம். இது நமக்கு பிரகாசம் நிறைந்த வாழ்வை அருளும்.

சித்திரை விஷூவை வரவேற்பவர்கள், முன்தினம் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். பிறகு பூஜை அறையில் உள்ள தெய்வ உருவங்கள் கொண்ட படங்களுக்கு கீழ், தட்டில் பழங்களை அடுக்கி வைத்து விட்டு உறங்கச் செல்ல வேண்டும். பின்னர் அதிகாலையில் அந்த பழங்களில் கண் விழிக்க வேண்டும். கனியில் கண்விழிப்பதன் காரணமாக, எப்போதும் கனியின் சுவை போன்று இனிப்பான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கையாகும்.

பெரும்பாலான ஆலயங்களில், சித்திரை மாதத்தில்தான் ‘சித்திரைப் பெருவிழா’ என்ற பெயரில் திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

Next Story