நவ குஞ்சரம்


நவ குஞ்சரம்
x
தினத்தந்தி 13 April 2021 10:30 AM GMT (Updated: 13 April 2021 10:30 AM GMT)

மகாபாரதம் என்னும் மிகப்பெரிய இதிகாசத்தில், ஓரிடத்தில் ‘நவ குஞ்சரம்’ என்னும் விசித்திரமான பறவைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஒடிய மொழி கவிஞரான சரளதாசர் என்பவர் எழுதிய மகாபாரதக் கதையில்தான், இந்த நவ குஞ்சரம் பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது.

மகாபாரதம் என்னும் மிகப்பெரிய இதிகாசத்தில், ஓரிடத்தில் ‘நவ குஞ்சரம்’ என்னும் விசித்திரமான பறவைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. ஒடிய மொழி கவிஞரான சரளதாசர் என்பவர் எழுதிய மகாபாரதக் கதையில்தான், இந்த நவ குஞ்சரம் பற்றி சித்தரிக்கப்பட்டுள்ளது.

‘நவ’ என்பது ‘ஒன்பது’ என்ற எண்ணைக் குறிக்கும். ‘நவ குஞ்சரம்’ என்பது, வெவ்வேறு விலங்கு களின் உடலுறுப்புகள் இணைந்த, ஒரு அபூர்வ உயிரினத்தைக் குறிப்பதாகும். சேவலின் தலை, மயில் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால், யானை, புலி மற்றும் மானின் கால்கள், மனிதனுடைய கை ஆகியவை இணைந்த உயிரினமே ‘நவ குஞ்சரம்.’

ஒரு முறை வனத்திற்குச் சென்ற அர்ச்சுனன், அங்கு மலை மீது அமர்ந்து கடுமையான தவம் புரிந்தான். அப்போது கிருஷ்ணர், நவ குஞ்சர உருவம் கொண்டு, அர்ச்சுனனின் முன்பாக வந்து நின்றார்.

ஏதோ ஒரு அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்த அர்ச்சுனன், தன் அருகில் இருந்த வில்லை எடுத்து, அதில் அம்பைப் பொருத்திய பின்னர், தன்னுடைய கண்களைத் திறந்து பார்த்தான். அப்போது தன் எதிரில் நின்ற அதிசய உயிரினத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். திகைக்கவும் செய்தான்.

அந்த உயிரினத்தின் மனித கையில் ஒரு தாமரைப்பூ இருந்தது. அதைப் பார்த்த அர்ச்சுனனுக்கு, ஒரு முறை கிருஷ்ணர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது. ‘மனிதர்களின் எண்ணங்கள், ஒரு வரையறைக்கு உட்பட்டவை. ஆனால் உலகமோ எல்லையற்றது’ என்ற அந்த வார்த்தையின் உண்மையை, அர்ச்சுனன் உணர்ந்தான்.

ஆம்.. இந்த உலகத்தில் நாம் கண்டது மட்டுதான் இருப்பதாக எவரும் நினைக்கக்கூடாது. இதுவரை பார்த்திராத ஓர் உயிரினம், இன்னும் கூட இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கலாம் என்று அர்ச்சுனன் புரிந்துகொண்டான். தன்னை சோதிப்பதற்காக கிருஷ்ணரே இந்த உருவத்தில் வந்ததாக உணர்ந்த அர்ச்சுனன், தன் கையில் இருந்த வில்லை கீழே போட்டு விட்டு, நவ குஞ்சரத்தை வணங்கினான் என்கிறது, அந்த மகாபாரதக் கதை.

ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய ஓவிய பாணியான, ‘படா சித்ரா’ ஓவியத்தில் நவ குஞ்சரம் பல வகைகளிலும் வரையப்படுகிறது. பூரி ஜெகன்நாதர் கோவிலின் வடக்குபுரத்தில், நவகுஞ்சரத்தின் உருவம் செதுக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

Next Story