அஷ்ட நரசிம்மர் தலங்கள் - நாமக்கல் - பூவரசங்குப்பம்


அஷ்ட நரசிம்மர் தலங்கள் - நாமக்கல் - பூவரசங்குப்பம்
x
தினத்தந்தி 22 May 2021 11:15 PM GMT (Updated: 18 May 2021 1:26 AM GMT)

தன் கணவரான மகாவிஷ்ணு எடுத்த நரசிம்மர் அவதாரத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் மகாலட்சுமிக்கு உண்டானது.

இதையடுத்து அவர் தவம் இருந்து நரசிம்ம அவதாரக் காட்சியைக் கண்ட தலம் இதுவாகும். நரசிம்மரை காண வேண்டி இத்தலத்தில் திருமகள் தவம் செய்து கொண்டிருந்தாள். அப்போது ஆஞ்சநேயர், கண்டகி நதியில் இருந்து திருமாலின் அனுக்கிரகம் பெற்ற சாளக்கிராம கல்லை எடுத்துக்கொண்டு வான்வழியே பறந்து சென்றார். இந்த தலத்தின் அருகே வந்தபோது, இங்குள்ள தீர்த்தத்தில் நீராட விரும்பினார். சாளக்கிராம கல்லை கீழே வைக்கக்கூடாது என்று யோசித்த ஆஞ்சநேயர், அங்கு தவம் செய்து கொண்டிருந்த திருமகளிடம் அந்த கல்லைக் கொடுத்து விட்டு நீராடச் சென்றார். ஆஞ்சநேயர் குறிப்பிட்ட நேரத்திற்குள் வராததால், சாளக்கிராமக் கல்லை கீழே வைத்தாள் திருமகள். அந்த கல்லே, மிகப்பெரிய மலையாக உருவானதாகவும், மலை மீது நரசிம்மர் தோன்றி திருமகளுக்கும், ஆஞ்சநேயருக்கும் காட்சி அளித்ததாகவும் தல வரலாறு சொல்கிறது. சாளக்கிராமத்தைக் கொண்டுவந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில், கையில் ஜெபமாலை, இடுப்பில் கத்தியுடன், நரசிம்மர் ஆலயத்துக்கு எதிரில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். நாமக்கல்லில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

பூவரசங்குப்பம்

இரண்யகசிபுவை வதம் செய்த பிறகும் கோபம் தணியாத நரசிம்மர், காடுகளிலும், மலைகளிலும் சுற்றித் திரிந்தார். அப்போது இரண்யகசிபுக்கு பயந்து காடுகளில் ஒளிந்தபடி தன்னை வழிபட்ட முனிவர்களுக்கு அவர் காட்சியளித்தார். அந்தத் தலமே இதுவாகும். ‘தட்சிண அகோபிலம்’ என்ற புராணப்பெயரைக் கொண்டது.

தூணில் இருந்து நரசிம்மர் வெளிப்பட்ட வரலாற்றின் அடிப்படையில், ஒரு தூணையே நரசிம்மராகக் கருதி இங்கு வழிபட்டு வந்துள்ளனர். பிற்காலத்தில் பல்லவ மன்னர்கள் இங்கு ஆலயம் எழுப்பி, சிலையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். மூலவராக லட்சுமிநரசிம்மர், உற்சவராக பிரகலாதவரதன் அருள்பாலிக்கிறார்கள். தாயாரின் திருநாமம் அமிர்தவல்லி என்பதாகும். பொதுவாக நரசிம்மருக்கான ஆலயங்களில் அவர் உருவம் பெரியதாகவும், தாயாரின் உருவம் சிறியதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்தக் கோவிலில் ஆணுக்குப் பெண் சமம் என்பதை உணர்த்தும் விதமாக, தாயாரின் திருஉருவமும் நரசிம்மரின் உருவத்திற்கு நிகராக அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் அஷ்ட நரசிம்ம தலங்களில் நடுநாயகமாக அமைந்துள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ளது, சின்னக்கள்ளிப்பட்டு. இங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரம் சென்றால் பூவரசங்குப்பத்தை அடையலாம். அதே போல் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ள சிறுவந்தாடு சென்று, அங்கிருந்து 2 கிலோமீட்டர் சென்றாலும், இந்த ஆலயத்தை தரிசிக்க முடியும்.

Next Story