பறையொலி முழங்க வருகை தந்த பரம்பொருள்


பறையொலி முழங்க வருகை தந்த பரம்பொருள்
x
தினத்தந்தி 18 May 2021 9:40 AM GMT (Updated: 18 May 2021 9:40 AM GMT)

சோமாசிமாற நாயனார். இவர் 63 நாயன்மார்களில் ஒருவர். சிறந்த சிவபக்தரான இவர், வேள்விகள் பல செய்து அதன் மூலம் பல தான தர்மங்களை, சிவனடியார்களுக்கு வழங்கி வந்தார்.

ஒரு முறை ‘நாம் செய்யும் வேள்வியில் தியாகராஜ பெருமானும் வந்திருந்து அருள்புரிந்தால் எப்படி இருக்கும்?’ என்ற எண்ணம், சோமாசிமாற நாயனாருக்கு உதித்தது.அதை செயல்படுத்த என்ன செய்வது என்று யோசித்தார். இறைவனோடு தோழரைப் போல பழகும் சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தினார், சோமாசிமாற நாயனார். 

“சுந்தரமூர்த்தி பெருமானே.. நான் ஒரு வேள்வி செய்யப் போகிறேன். அதற்கு தியாகராஜப் பெருமானை தாங்கள் அழைத்து வர வேண்டும்” என்றார்.அதற்கு இசைவு தெரிவித்த சுந்தரர், சோமாசிமாறருடைய விருப்பம் பற்றி, தியாகராஜப் பெருமானிடம் எடுத்துரைத்தார். பக்தனின் கோரிக்கைக்கு செவிசாய்த்த தியாகராஜப் பெருமான், ஒரு நிபந்தனையையும் விதித்தார்.

“எனது பக்தனான மாறனின் வேள்விக்கு நான் நிச்சயமாக வருகிறேன். ஆனால் நான் எந்த உருவத்தில் வேண்டுமானாலும் வருவேன். அவன்தான் என்னை கண்டுகொள்ள வேண்டும்” என்றார். சுந்தரர் மனம் மகிழ்ந்து, தியாகராஜப் பெருமான் சொன்ன நிபந்தனையை அப்படியே சோமாசிமாறரிடம் கூறிவிட்டார்.சோமாசிமாறர் மனம் மகிழ்ந்தார். வேள்விக்கான நாள் வந்து விட்டது. ‘இதுவரை யாரும் இப்படியொரு வேள்வியை செய்ததில்லை’ என்று சொல்லும் விதமாக வேள்விக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார், சோமாசிமாறர். பல நாட்களாக அவருக்கு பசியே மறந்து போயிருந்தது. ‘இறைவன் தன் வேள்விக்கு நேரில் வரப்போகிறார். அவர் எப்படி வரப்போகிறார்?’ என்ற ஆவல் அவரை வேறு எதையும் சிந்திக்க விடாமல் செய்திருந்தது.மிகப்பெரிய யாகசாலை அமைக்கப்பட்டு, பல நூறு வேதவல்லுனர்கள் வந்தமர்ந்து மந்திரம் சொல்லி வேள்வியைத் தொடங்கினர். ‘இறைவன் எப்போது வேண்டுமானாலும் வருவார்’ என்ற பேராவல் சோமாசிமாறரை ஓரிடத்தில் நிலைகுத்தி நிற்கவிடாமல் செய்தது. அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக வேள்விச்சாலையை நோக்கி ஒரு பெருங்கூட்டம் வந்தது.

பறை ஒலியும், எக்காளமும் முழங்க வந்த அந்தக்கூட்டத்தின் நடுவே, திடகாத்திரமான ஒரு இளைஞன் தென்பட்டான். வெட்டியான் கோலத்தில் இருந்த அந்த இளைஞன், தன்னுடைய தோளில் இறந்துபோன கன்றினை சுமந்திருந்தான். அவனது இடுப்பு பகுதியில் பறையும், ஒரு கரத்தில் குச்சியும், மறு கரத்தில் கயிற்றினால் கட்டப்பட்ட 4 நாய்களையும் பிடித்தவாறு இருந்தான். அவன் அருகில் இருந்த பெண், கள் பானையை தலையில் சுமந்திருந்தாள். காதைப் பிளக்கும் பறை ஒலியோடு வந்த அந்தப் பெருக்கூட்டத்தைப் பார்த்து, யாகசாலையில் இருந்த அனைவரும் சிதறி ஓடினர். சோமாசி மாறர் கூட, ‘இந்தக்கூட்டத்தால் யாகம் தடைபட்டு விடுமோ’ என்று அஞ்சினார். எந்த தடையும் இன்றி யாகம் நடைபெற வேண்டும் என்று அங்கிருந்த விநாயகரை வேண்டினார்.அப்போது விநாயகர், ‘இவர்தான் பரம்பொருள்’ என்பதுபோல் செய்கை செய்தார்.அப்போதுதான் சோமாசிமாறருக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. ‘நான் எந்த உருவத்திலும் வருவேன்’ என்று சொன்ன இறைவன், இந்த உருவத்தில்தான் வந்திருக்கிறான் என்பதை உணர்ந்ததும், ஓடிச் சென்று வெட்டியான் உருவத்தில் இருந்த சிவபெருமானின் காலில்போய் விழுந்தார். பின்னர் இறைவனுக்கு வேள்விக்கான அவிர்பாகத்தை வழங்கி ஆசிபெற்றார். வெட்டியான் உருவத்தில் இருந்த தியாகராஜப் பெருமான், தம்பதி சமேதராக சோமாசிமாறருக்கு காட்சி தந்து மறைந்தார்.

Next Story