சன்னகேஸ்வரர் கோவில்


சன்னகேஸ்வரர் கோவில்
x
தினத்தந்தி 8 Jun 2021 1:17 PM GMT (Updated: 8 Jun 2021 1:17 PM GMT)

கார்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் பேளூர் தாலுகாவில் உள்ள ஹலேபீடு, ஒய்சாலா மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது.

இங்குள்ள ஒய்சாலேசுவரர் கோவிலின் வெளிசுவர்களில் வரிசையாக யானைகள், யாளிகள், அன்னங்கள், எண்ணற்ற தெய்வங்கள் காணப்படுகின்றன. கோவிலின் தென்புறத்தில் நர்த்தக விநாயகர் பெரிய வடிவிலும், உட்புறத்தில் இரணியன் உடலை கிழிக்கும் நரசிம்மர் சிலையும் உள்ளது. இதேபோல் கோவர்த்தன மலையை குடையாக பிடித்து ஆயரை காக்கும் கண்ணன், துவாரக பாலகர், நர்த்தன சரஸ்வதி ஆகியோரின் சிற்பங்களும் இங்கு உள்ளன.

இதேபோல் கோவிலின் சுவர்களில் ராமாயணம், மகாபாரத கதைகளை சித்தரிக்கும் ஓவியங்கள், சுவரின் மேல் பகுதியில் துவாரமிட்ட கல்திரைகள் மற்றும் சிவபெருமான், விஷ்ணு உருவங்கள் உள்ளன. இந்து கோவில்களை தவிர இங்கு சமண கோவில்களும் உள்ளன. இங்குள்ள ஆதிநாத ஈஸ்வரர், சாந்தேசஸ்வர், பர்சுவணதேஸ்வரர் கோவில்கள் உள்பட பல கோவில்கள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. இவற்றின் தூண்கள் கண்ணாடி போல பளபளவென்று மின்னும்படி வடிவமைக்கப்பட்டு உள்ளன. ஒய்சாலர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சன்னகேஸ்வரா கோவில் 
உள்ளது. இந்த கோவில் கி.பி.1116-ம் ஆண்டு சோழர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதன் நினைவாக ஒய்சாலா மன்னர் விஷ்ணவர்தனா கட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் சாமி தரிசனம் செய்யலாம். கொரோனா நோய் பரவல் நீங்கியதும், இந்த ஆலயத்தை 
தரிசினம் செய்து வாருங்கள். பெங்களூருவில் இருந்து 221 கிலோ மீட்டர் தொலைவிலும், ஹாசனில் இருந்து 38 கிலோமீட்டர் தூரத்திலும் இக்கோவில் அமைந்துள்ளது.

Next Story