ஆலயங்களும்.. அதிசயங்களும்..


ஆலயங்களும்.. அதிசயங்களும்..
x
தினத்தந்தி 8 Jun 2021 4:40 PM GMT (Updated: 8 Jun 2021 4:40 PM GMT)

திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில், ராமானுஜரின் உடல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் கெடாமல் இருப்பது வியப்புக்குரியதாக இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கோட்டையூர். இங்கு ‘நூற்றி ஒன்று சாமி மலை’ இருக்கிறது. இங்குள்ள குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கு உள்ளது. இதில் இளநீர் விட்டு தீபம் ஏற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயத்தைக் காணலாம். திருப்பூர் அருகே உள்ள குண்டடம் என்ற இடத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான வடுகநாத பைரவர் கோவில் அமைந்திருக்கிறது. அறிவியல் வளர்ச்சி அடைவதற்கு முன்பாகவே தோன்றிய இந்த ஆலயத்தில், ஒரு தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தை, எந்த மாதத்தில் எந்த வடிவத்தில் எந்த நிலையில் இருக்கும் என்பதை கல்லில் சிற்பமாக செதுக்கி வைத்திருக்கிறார்கள்.

ராமாயணக் கதையில் சுக்ரீவனின் அண்ணனான வாலியை, மறைந்திருந்து அம்பெய்து வீழ்த்தினார் ராமன். இதை நினைவுகூரும் வகையில் சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவில் தூண்களில் சிற்பம் வரையப்பட்டுள்ளது. ராமர் சிற்பம் இருக்கும் தூணில் இருந்து பார்த்தால் வாலியின் சிற்பம் தெரியும். அதுவே வாலியின் சிற்பம் இருக்கும் தூண் அருகில் நின்று பார்த்தால் ராமரின் சிற்பம் தெரியாது. புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் உள்ளது, கடையநல்லூர். இந்த ஊரின் அருகே உள்ள சுந்தரேஸ்வரபுரத்தில், சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் 
பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டால், ஆலயத்தின் வெளியில் இருந்து வரும் ஒளி மூலவர் சிலை மீது விழுவதைக் காணலாம். திண்டுக்கல் அருகே திருமணக்கேணி என்ற இடத்தில் முருகன் கோவில் இருக்கிறது. இங்கு இரண்டு சுனைகள் காணப்படுகின்றன. அவை இரண்டும் ‘தெய்வானை சுனை’, ‘வள்ளி சுனை’ என்று அழைக்கப்படுகின்றன. இதில் தெய்வானை சுனையின் நீரானது எப்போதும் குளிர்ச்சியாகவும், வள்ளி சுனையின் நீரானது எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

முருகப்பெருமானின் பெருவிழாக்களின் ஒன்று கந்தசஷ்டி. இதன் ஒரு பகுதியாக நடைபெறும் சூரசம்ஹார விழா பிரசித்தி பெற்றது. சூரசம்ஹாரத்தோடு தொடர்புடைய ஆலயங்களில் மிகவும் முக்கியமானது, சிக்கல் சிங்காரவேலர் திருக்கோவில். இந்த ஆலயத்தில்தான், சூரனை சம்ஹாரம் செய்வதற்கான ஞானவேலை, அம்பாளிடம் இருந்து முருகப்பெருமான் பெற்றதாக புராணங்கள்  சொல்கின்றன. இன்றளவும் இந்த ஆலயத்தில் கந்தசஷ்டி விழாவின் போது, வேல் வாங்கும் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. அப்போது அம்பிகையிடம் வேல் வாங்கும் முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருக்கெடுக்கிறது. அர்ச்சகர் ஒருவர் பட்டுத்துணியால் அந்த வியர்வையை ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்திருப்பதை காண முடியும்.

சென்னை அருகே திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ளது, வேதகிரீஸ் வரர் திருக்கோவில். மலை மீது அமைந்த இந்த ஆலயத்தின் அடிவாரத்தில் சங்கு தீர்த்தக் குளம் இருக்கிறது. இந்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு தோன்றும் அதிசயம் நிகழ்கிறது. கன்னி ராசியில் குரு பகவான் பிரவேசிக்கும் வேளையில்தான் இந்த அதிசயம் நிகழ்கிறது. அதைக் காண நாம் இன்னும் 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

Next Story