எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள்


எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள்
x
தினத்தந்தி 6 July 2021 4:13 PM GMT (Updated: 6 July 2021 4:13 PM GMT)

இயேசுவின் காலத்தில் யூதர்கள், மதத் தலைவர்கள், குருக்கள் ஆகியோரால் வெறுக்கப்பட்ட மக்களாக சமாரியர்கள் வாழ்ந்து வந்தனர்.

இயேசுவோ எல்லோரையும்போல் சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்த அவர்களை வெறுக்கவோ ஒதுக்கவோ கூடாது என்பதைத் தன் வாழ்வின் வழியே எடுத்துக்காட்டினார். அனைவரும் கடவுளின் குழந்தைகளே என்பதைச் சுட்டிக்காட்டினார்.

இயேசுவை மடக்க நினைத்து அவரை நெருங்கி வந்த திருச்சட்ட வல்லுநர் ஒருவர் இயேசுவைப் பார்த்து “போதகரே, முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? ” என்று கேட்டார். அதற்கு அவர், “திருச்சட்டத்தில் என்ன எழுதியிருக்கிறது, நீங்கள் என்ன வாசித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அப்போது திருச்சட்ட வல்லுநர், “‘உங்கள் கடவுளாகிய பரலோகத் தந்தையின் மேல் உங்கள் முழு மனதோடு அன்பு காட்ட வேண்டும்’ என்றும், ‘உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல சக மனிதர்கள் மீதும் அன்பு காட்ட வேண்டும்’ என்றும் எழுதியிருக்கிறது”என்றார். உடன் இயேசு, “சரியாகச் சொன்னீர்கள்; அப்படியே செய்துகொண்டிருங்கள்; அப்போது உங்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்”என்று சொன்னார்.

ஆனால் அந்தத் திருச்சட்ட வல்லுநர், தன்னை ஒரு நீதிமான் எனக் காட்டிக்கொள்வதற்காக, “ நான் அன்பு காட்ட வேண்டிய அந்த சக மனிதர்கள் உண்மையில் யார்?” என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு இயேசு ஒரு கதையைக் கூறினார்.

“ஒருவன் எருசலேம் நகரத்திலிருந்து கீழ்நோக்கி எரிக்கோ நகரத்துக்குப் போய்க்கொண்டிருந்தான். அப்போது, திருடர்களின் கையில் மாட்டிக்கொண்டான். அவர்கள் அவனிடமிருந்த எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு, அவனை பலமாகத் தாக்கி, கிட்டத்தட்டச் சாகும் நிலையில் குற்றுயிராக விட்டுவிட்டுப் போனார்கள். அந்தச் சமயத்தில் ஆலய குரு ஒருவர் தற்செயலாக அந்த வழியில் வந்துகொண்டிருந்தார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவனைப் பார்த்தபின், எதிர்ப்பக்கமாகப் போய்விட்டார். ஒரு லேவியர் அந்த வழியில் வந்தார். மதகுருவைப் போலவே அவரும் கண்டும் காணதவரைப்போல் நடந்துகொண்டார். ஆனால், அந்த வழியில் பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அவனைப் பார்த்தபோது மனம் உருகினார். அவன் பக்கத்தில் போய், அவனுடைய காயங்கள்மேல் எண்ணெய்யையும் திராட்சைரச மதுவையும் ஊற்றி, அவற்றுக்குக் கட்டுப்போட்டார். பின்பு, அவனைத் தன்னுடைய கழுதையின் மேல் ஏற்றி, ஒரு சத்திரத்துக்குக் கூட்டிக்கொண்டுபோய்க் கவனித்துக்கொண்டார்.

அடுத்த நாள் அங்கிருந்து புறப்படும்முன் இரண்டு தினாரியூ பணத்தை எடுத்து சத்திரக்காரரின் கையில் கொடுத்து, ‘இவனைக் கவனித்துக்கொள்ளுங்கள்; இதற்குமேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உங்களுக்குக் கொடுத்துவிடுகிறேன்’ என்று சொன்னார். அப்படியென்றால், இந்த மூன்று பேரில், திருடர்களின் கையில் மாட்டிக்கொண்டவனிடம் உண்மையிலேயே அன்பு காட்டியவர் யாரென்று நினைக்கிறீர்கள்?” என்று இயேசு கதையின் முடிவில் கேட்டார். அதற்குத் திருச்சட்ட வல்லுநர், “அவனிடம் இரக்கத்தோடு நடந்துகொண்டவர்தான்”என்று சொன்னார். அப்போது இயேசு, “நீங்களும் போய் அதேபோல் நடந்துகொள்ளுங்கள்” என்று சொன்னார்.

சக மனிதரிடம் பாரபட்சமும் வெறுப்பும் இல்லாமல் அன்பு காட்டுவதே சிறந்த வாழ்க்கை என்பதை விளக்கவே இயேசு இந்த உவமைக் கதையைப் பயன்படுத்தினார். கதை கூறியதோடு நின்றுவிடாமல் தாம் சொன்னதைச் செயலிலும் காட்டினார் இயேசு. தொழுநோயாளியாக இருந்த ஒரு சமாரியனைக் குணப்படுத்தினார். தன்னை நோக்கி ஆர்வத்துடன் நாடிவந்த சமாரியர்களுக்கு அவர் போதித்தார். ஒரு சமாரியப் பெண்ணிடம் தண்ணீர் வாங்கி அருந்தியபின் அவளிடம் மனம்விட்டு உரையாடினார்.

Next Story