சிவபெருமானால் திசைமாறிய மாணிக்கவாசகர்


சிவபெருமானால் திசைமாறிய மாணிக்கவாசகர்
x
தினத்தந்தி 15 July 2021 12:57 PM GMT (Updated: 15 July 2021 12:57 PM GMT)

சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராக அறியப்படுபவர், மாணிக்கவாசகர். இவரது இயற் பெயர் வாதவூரார் என்பதாகும். இவர், தேவாரம் பாடிய திரு நாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவருக்கும் மூத்தவர் என்று ஆய்வுகள் சொல்கின்றன. இவர் கி.பி. 9-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக இவரது பாடல்கள் மூலம் அறிய முடிகிறது. இவர் அரிமர்த்தன பாண்டியன் என்ற மன்னனின் அரசவையில், முதன்மை அமைச்சராக பணியாற்றி வந்தவர்.

பின்னாளில் சிவபெருமானின் மீதான பக்தியின் காரணமாக பல பதிகங்களைப் பாடி, 63 நாயன்மார்களில் ஒருவராக மாறினார். இவர் பாடிய பாடல்கள் ‘திருவாசகம்’ என்று அழைக்கப் படுகிறது. ‘திருவாசகத்திற்கு உருகாதார், ஒரு வாசகத்திற்கும் உருகார்’ என்பது சொல் வழக்கு. அத்தகைய நெகிழ்வுத் தன்மை கொண்ட பாடல்களாக ‘திருவாசகம்’ சிறப்புற்று விளங்குகிறது.

ஒரு முறை சோழநாட்டில் வளமான குதிரைகள் கிடைப்பதாக அறிந்தான், பாண்டிய மன்னன். வாதவூராரை அனுப்பி, குதிரை களை வாங்கி வரும்படி பணித்தான். குதிரை வாங்குவதற்கு தேவையான  பொன், பொருட்களையும் கொடுத்து அனுப்பினான். குதிரைகள் இருக்கும் இடத்தை அடைய, திருப்பெருந்துறை திருத்தலத்தைக் கடந்து செல்ல வேண்டியதிருந்தது. இந்த நிலையில் தன்னை ஒரு குருவாக மாற்றிக்கொண்டு, அங்கிருந்த குருந்த மரம் ஒன்றின் அடியில் அமர்ந்து தவம் இயற்றிக்கொண்டிருந்தார், சிவபெருமான்.திருப்பெருந்துறை வழியாக வந்த வாதவூரார், குருந்த மரத்தின் அடியில் இருந்த குருவை, அருகில் சென்று பணிந்து வணங்கினார். அப்போது சிவபெருமானின் பாதம், வாதவூராரின் தலை மீது பட்டது. அடுத்த நொடியே இறைவனை நினைத்து பாடல்களைப் பாடத் தொடங்கினார். 

அவரது பாடலைக் கேட்டு ஈசனே உள்ளம் உருகிப்போனார். “உன் நாவில் இருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையும் மாணிக்கம் போன்றது, ஆகையால் நீ இனிமேல் மாணிக்கவாசகன் என அழைக்கப்படுவாய்” என்று திருவாய் மலர்ந்தருளினார்.இறையருள் கிடைத்த மகிழ்ச்சியில், தன்னையே மறந்து போன மாணிக்கவாசகருக்கு, மன்னன் சொன்ன வேலை எப்படி நினைவிருக்கும். மன்னன் கொடுத்தனுப்பிய பொன், பொருட் களைக் கொண்டு அங்கேயே தங்கியிருந்து ஈசனுக்கு ஆலயம் எழுப்பத் தொடங்கிவிட்டார். வெகு காலம் ஆகியும் வாதவூரார் வராததால், மன்னன் அவருக்கு ஒரு ஓலை 
அனுப்பினான்.

தன்னை வந்தடைந்த மன்னனின் ஓலையை எடுத்துக் கொண்டு, குருந்த மரத்தடியில் இருந்த குருவிடம் ஓடினார். “சுவாமி... மன்னன் கொடுத்த பொன்னையெல்லாம் திருப் பணிக்காக செலவிட்டுவிட்டேன். இப்போது நான் என்ன செய்வது?” என்று வருந்தினார்.“ஆடி மாதம் முடிவதற்குள் குதிரைகள் வந்துசேரும் என்று மறு ஓலை அனுப்பு” என்று இறைவன் சொன்னதை, அப்படியே செய்தார். சிறிது நாள் கழித்து மாணிக்கவாசகரை, மதுரைக்கு திரும்பும்படி ஈசன் கூறினார். அதன்படி மதுரை திரும்பியவரிடம், “குதிரைகள் எங்கே?” என்று கேட்டான், மன்னன்.குதிரைகள் வந்துகொண்டிருப்பதாக மாணிக்கவாசகர் சொன்ன பதிலைக் கேட்டு கோபம் கொண்ட மன்னன், அதுவரை சிறையில் இருக்கும்படி உத்தரவிட்டான். மாணிக்கவாசகர் சிறையிலடைக்கப்பட்டார். 

இதையடுத்து காட்டில் இருந்த நரிகளை எல்லாம், பரிகளாக (குதிரை) மாற்றி மதுரைக்கு அனுப்பினார், சிவபெருமான். அதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தான் மன்னன். ஆனால் அன்றிரவே, குதிரைகள் அனைத்தும் மீண்டும் நரிகளாக மாறி காட்டிற்குள் ஓடிவிட்டன.இதனால் கோபம் கொண்ட மன்னன், மாணிக்கவாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தினான். அவர் ஈசனை நினைத்து வேண்டினார். அப்போது ஆற்றில் உருவான வெள்ளம் மதுரையைச் சூழ்ந்தது. ஆனாலும் கூட மாணிக்கவாசகரை சுற்றிலும் தண்ணீர் கால் அளவுக்கே ஓடியது. ‘ஆற்றின் கரையை அடைக்க வீட்டிற்கு ஒருவர் வரவேண்டும்’ என்று மன்னன் உத்தரவிட்டான்.

அவ்வூரில் வந்தி என்ற மூதாட்டி புட்டு விற்று பிழைத்து வந்தாள். தினமும் ஒரு புட்டை ஈசனுக்கு படைத்து, அடியவர் களுக்கு அளிப்பாள். வயோதிகம் காரணமாக தன்னால் ஆற்றின் கரையை அடைக்கும் பணிக்கு செல்ல முடியாது என்பதால், கூலிக்கு ஆள் தேடினாள். அப்போது ஈசன், பணியாள் வேடம் கொண்டு தனக்கு புட்டு தந்தால், பணிக்கு செல்வதாக கூறி, பாட்டியிடம் புட்டு வாங்கி சாப்பிட்டு விட்டு பணிக்கு சென்றார். அங்கு பணியை கவனிக்காமல், ஓரிடத்தில் படுத்து உறங்கினார். அங்கு வந்த மன்னன், பிரம்மால் பணியாள் வேடத்தில் இருந்த ஈசனை அடிக்க, அந்த அடி உலகம் முழுவதும் இருந்த உயிர்கள் அனைத்தின் மீதும் விழுந்தது. மன்னன் திகைத்தான். அப்போது பணியாள் உருவில் வந்த ஈசன், ஒரு கூடை மண்ணை ஆற்றின் கரையில் கொட்டியதும் வெள்ளம் வடிந்தது. “இது தன்னுடைய திருவிளையாடல். மாணிக்கவாசகனை விடுதலை செய்” என்று மன்னனுக்கு சொல்லி மறைந்தார்.

பின்னாளில் ஒவ்வொரு சிவதலமாக சென்று பாடல்கள் பாடிய மாணிக்கவாசகர், இறுதியில் சிதம்பரம் வந்துசேர்ந்தார். அங்கு ஈசனே, ஒரு வேதியர் வடிவில் வந்து, அவர் இதுநாள் வரை ஈசன் மீது பாடிய பாடல்கள் அனைத்தையும் மீண்டும் பாடச் செல்லி அதைத் தொகுத்து, அதன் இறுதியில் ‘திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான் எழுதியது’ என்று கையெழுத்திட்டு, சிற்றம்பலத்தின் சன்னிதியில் வைத்துவிட்டு மறைந்தார்.

பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகர் பாடி அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும், 8-ம் திருமுறையாக விளங்குகின்றன. 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த மாணிக்கவாசகர், ஒரு ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் சிவனடி சேர்ந்தார்.

Next Story