காரிய வெற்றி தரும் கணபதி வழிபாடு


காரிய வெற்றி தரும் கணபதி வழிபாடு
x
தினத்தந்தி 9 Aug 2021 11:38 AM GMT (Updated: 9 Aug 2021 11:38 AM GMT)

எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும் விநாயகரை வழிபட்ட பிறகு தொடங்குவதே நம்முடைய வழக்கம். ‘பிள்ளையார் சுழி’ போட்டு தொடங்கும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைப்பதாக நம்பிக்கை. கணங்கள் அனைத்திற்கும் அதிபதியாக இருப்பதால், அவரை ‘கணபதி’ என்கிறோம். அந்தக் கணபதிக்கு உகந்த திதி ‘சதுர்த்தி’ திதியாகும்.

மாதந்தோறும் சதுர்த்தி திதி வந்தாலும், ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியை மட்டுமே ‘விநாயகர் சதுர்த்தி’ என்று கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் 25-ந் தேதி (10-9-2021) வெள்ளிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் விரதம் இருந்து விநாயகப்பெருமானை வழிபட வேண்டும். அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டும், அவல், பொரி, கடலை படைத்தும் விநாயகரை வணங்கி வந்தால் கவலைகள் தீரும். உங்களுடைய கனவுகள் நனவாகும்.

அனைத்து பொருட்களிலும் எழுந்தருளி அருள்பவர், விநாயகப் பெருமான். மஞ்சள், பசு சாணம், சந்தனம் என்று எதை வேண்டுமானாலும் பிள்ளையாராக பிடித்து வைத்து வழிபடலாம். விக்கிரகம் வைத்துதான் வழிபட வேண்டும் என்ற ஐதீகம் விநாயகருக்குக் கிடையாது. ஆலயத்திற்குச் சென்றும் வழிபடலாம், வீட்டில் இருந்தபடியேயும் வழிபாட்டை தொடரலாம். தும்பிக்கை வைத்திருக்கும் விநாயகரை, நம்பிக்கையோடு வழிபாடு செய்தால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்துசேரும். துன்பங்கள் தூரமாக விலகி ஓடும்.

‘சதுரம்’ என்றால் ‘நான்கு பக்கங்கள் பூர்த்தியாகிய அமைப்பு’ ஆகும். அதே போல் நம்முடைய வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக, சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டும். விநாயகர் சதுர்த்தி அன்று, அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கடலை, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு நைவேத்தியமாக படைக்க வேண்டும். மேலும் அவருக்குப் பிடித்த அருகம்புல், வன்னி இலை, எருக்கம்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ போன்றவற்றையும் வைத்து வழிபட வேண்டும்.

விநாயகருக்கு முன்பாக நின்று, தோப்புக்கரணம் போட்டு தலையில் குட்டிக்கொண்டு வணங்குவது பக்தர்களின் வழக்கம். கஜமுகாசூரன் என்ற அசுரன், தேவர்களை துன்புறுத்தி, தினந்தோறும் தனக்கு முன்பாக 108 தோப்புக்கரணம் போட வைத்தான். அந்த அசுரனை விநாயகப்பெருமான் அழித்தார். இதையடுத்து அசுரனுக்கு பயத்தால் போட்ட தோப்புக்கரணத்தை, விநாயகரின் முன்பாக பக்தியோடு தேவர்கள் அனைவரும் செலுத்தினர். இதுவே விநாயகருக்கு தோப்புக்கரணம் போடுவதன் காரணமாகும்.

திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை, விநாயகருக்கு உகந்த நாட்களாகும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க, விநாயகருக்கு மோதகம் நிவேதனம் செய்ய வேண்டும். துன்பங்கள் சிதறி ஓட சிதறுகாய் உடைக்க வேண்டும். கணபதி கவசம் பாடினால் மனம் மகிழும் வாழ்க்கை கிடைக்கும். ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர் களுக்கு அருள் கொடுப்பவர், ஆனைமுகப் பெருமான். இத்தகைய சிறப்புமிக்க விநாயகப் பெருமானை, ஆவணி சதுர்த்தியில் பூவணிந்து வழிபட்டால் தேவைகள் பூர்த்தியாகும். செல்வ வளம் பெருகும்.

Next Story