ஆனந்த வாழ்வருளும் ஆடிப்பூரம்


ஆனந்த வாழ்வருளும் ஆடிப்பூரம்
x
தினத்தந்தி 10 Aug 2021 5:44 AM GMT (Updated: 10 Aug 2021 5:44 AM GMT)

அம்பாளை வழிபடுவதற்கான சிறப்புமிக்க தினங்களில் ஒன்று, ஆடிப்பூரம். இந்த நல்ல நாளில், அம்மன் கோவில்கள் அனைத்திலும் அம்பாளுக்கு வளையல் காப்பு அணிவிக்கப்படும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்தக் கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஆடிப்பூரம் அன்று பக்தர்கள், குறிப்பாக பெண்கள் பலரும் வளையல்களை வாங்கிச் சென்று, அம்பாள் வழிபாட்டிற்கு கொடுப்பார்கள்.

பலரும் கொடுக்கும் வளையல்கள் ஒன்றாக பூஜையில் வைக்கப்பட்டு, வழிபாட்டிற்கு பின்னர் அந்த வளையல்கள் பக்தர்களுக்கே மீண்டும் பிரசாதமாக வழங்கப்படும். அந்த வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால், மனம் போல் மாங்கல்யம் அமையும். திருமணமான பெண்களுக்கு மாங்கல்யம் நிலைக்கும். அம்பிகை வளையல் அணிந்து, தாய்மை கோலம் கொண்ட நாளாக ஆடிப்பூரம் இருப்பதால், இந்த நாளில் வழிபடும் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

* திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு 10 நாள் விழா நடத்தப்படும். அதில் 4-ம் நாளில் காந்திமதி அம்மனுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு நடத்துவார்கள்.

* திருவாரூர் - கமலாம்பாள், நாகப்பட்டினம் - நீலாயதாட்சி, திருக்கருகாவூர் - கர்ப்பரட்சாம்பிகை ஆகிய சிறப்புமிக்க அம்மன்கள் அருளாட்சி புரியும் திருக்கோவில்களிலும், ஆடிப்பூரத்தை முன்னிட்டு 10 நாள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

* சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில், கற்பகவல்லி அம்மனுக்கு ஆடிப்பூரம் அன்று சந்தனக் காப்பு அலங்காரமும், இரவு வளையல் அலங்காரமும் செய்யப்படும்.

* ஆடிப்பூரம் அன்று, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு கூழ்வார்க்கும் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

* திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும், திரிபுரசுந்தரி அம்மன் சுயம்பு வடிவானவர். இங்குள்ள அம்மனின் மூர்த்தமானது, அஷ்ட கந்தகம் என்ற எட்டுவிதமான வாசனைப் பொருட்களால் உருவாக்கப்பட்டதாகும். இந்த அம்மன் தன்னுடைய மார்பில் ஸ்ரீசக்கரத்தை பதக்கமாக அணிந்திருக்கிறாள். இந்த அம்மனுக்கு, வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே முழுமையாக அபிஷேகம் செய்யப்படும். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும் பூஜை நடைபெறும். பங்குனி உத்திரம், நவராத்திரியில் வரும் நவமி மற்றும் ஆடிப்பூரம் ஆகியவையே அபிஷேகம் நடைபெறும் நாட்களாகும்.

* ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் இந்நாளில், ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பது நல்லது. மேலும் இந்த நாளில், தாலிக்கு புதிய மஞ்சள் கயிறு கோர்ப்பது நன்மை அளிக்கும்.

* ஆடிப்பூரம் அன்று வைணவத் திருக்கோவில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். ஏனெனில் இந்த நாளில்தான் ஆண்டாள் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

Next Story