மலையாக நிற்கும் சிவன்


மலையாக நிற்கும் சிவன்
x
தினத்தந்தி 9 Nov 2021 11:52 AM IST (Updated: 9 Nov 2021 11:52 AM IST)
t-max-icont-min-icon

நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலம் என்று போற்றப்படுவது, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவில். விஷ்ணுவும், பிரம்மாவும் ‘யார் பெரியவர்?’ என்று சர்ச்சையில் ஈடுபட்டபோது, அவர்கள் இருவரும் அடிமுடி காண முடியாதபடி ஜோதி வடிவாக உயர்ந்து நின்றார், சிவபெருமான். அந்த சிறப்புக்குரிய தலம் இது.

பஞ்சபூதத் தலங்களில் இது அக்னித் தலமாக விளங்குகிறது. அக்னிக்குரிய நாள் செவ்வாய்க்கிழமை, அந்த நாளில் இங்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

‘அண்ணுதல்’ என்பதற்கு ‘நெருங்குதல்’ என்று பொருள். ‘அண்ணா’ என்பது, ‘நெருங்க முடியாத’ என்ற பொருளைத் தரும். பிரம்மனாலும், விஷ்ணுவாலும் நெருங்க முடியாத நெருப்பு மலையாக நின்றதால், இத்தலம் ‘அண்ணாமலை’ என்று பெயர் பெற்றது.


இத்தல கிளி கோபுரத்தின் கீழ் இட பக்கம் ஒரு விநாயகர் சன்னிதி உள்ளது. இவருக்கு ‘அல்லல் தீர்க்கும் விநாயகர்’ என்று பெயர். முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் உள்ள ஆறு படைவீடுகளில், இது முதல் படைவீடாகும்.

கிரிவலப்பாதையின் எட்டு திசைகளுக்கும் எட்டு லிங்கங்கள் இருக்கின்றன. இதனை அஷ்டலிங்கங்கள் என்கிறோம். அவை, இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசான லிங்கம் ஆகியவை ஆகும்.

இங்குள்ள இறைவன், ‘அண்ணாமலையார், அருணாச்சலேஸ்வரர்’ என்றும், அம்பாள் ‘உண்ணாமுலையம்மன், அபிதகுஜாம்பாள்’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ‘அருணை சக்தி பீட’மாக விளங்குகிறது.


25 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரமாண்ட ஆலயம் இது. இதில் 9 கோபுரங்கள், 6 பிரகாரங்கள், 142 சன்னிதிகள், 306 மண்டபங்கள், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்டவை அடங்கியிருக்கின்றன.

அண்ணாமலையார் ஆலயத்தின் தற்போதைய முழுமையான கட்டிட அமைப்புகள் அனைத்தும் கட்டி முடிக்க, சுமார் 1000 ஆண்டுகள் ஆகி இருப்பதாக கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.


* கயிலாய மலையில் சிவபெருமான் வீற்றிருப்பதால் அது புனிதமானது. அதே போல் சிவபெருமானே மலையாக வீற்றிருப்பதால் திருவண்ணாமலையும் புனிதமானதாக கருதப்படுகிறது.

* இந்த மலை கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் உள்ளதாக புராணம் சொல்கிறது.

* பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவது சிறப்புக்குரியது. கிரிவலம் வரும் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு பலன் கிடைப்பதாக ஐதீகம். சித்தர்கள் இன்றும் அரூபமாக வாழ்வதாக கருதப்படும் இங்கு, கிரிவலப் பாதையை சித்தர்களும் வலம் வருவதாக நம்பிக்கை நிலவுகிறது.

* கார்த்திகை தீபத் திருநாள் அன்று, 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், தீபம் ஏற்றப்படுகிறது. 7½ அடி உயரம் கொண்ட கொப்பரையில், 1000 மீட்டர் காடா துணியால் ஆன திரி, 3 ஆயிரம் கிலோ பசுநெய், 2 கிலோ கற்பூரம் சேர்த்து இந்த தீபம் ஏற்றப்படும். தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும்.
1 More update

Next Story