நோய்களை அகற்றும் சோமவார விரதம்


நோய்களை அகற்றும் சோமவார விரதம்
x
தினத்தந்தி 25 Nov 2021 12:35 PM GMT (Updated: 25 Nov 2021 12:35 PM GMT)

பொதுவாகவே திங்கட்கிழமை அன்று, சிவபெருமானை வழிபடுவது மிகவும் விசேஷம். இந்த நாளை ‘சோமவாரம்’ என்றும் அழைப்பார்கள். ‘சோம’ என்பது சந்திரனைக் குறிப்பதாகும். சந்திரனுக்குரிய திங்கட்கிழமை தினத்தில் சிவபெருமானை வணங்குவது கூடுதல் பலனைத் தரும்.

ஒரு முறை சாபத்தால், தேய்ந்துகொண்டே சென்ற சந்திரன், தன்னுடைய சாபத்தில் இருந்து மீள சிவபெருமானை நினைத்து விரதம் இருந்தான். இதையடுத்து தன்னுடைய சடைமுடி மீது சந்திரனை சூடிக்கொண்ட சிவன், அவனுக்கு சாப விமோசனம் அளித்தார். சந்திரனின் சாபம் நீங்க, அவனது மனைவி ரோகிணியும் இந்த விரதத்தை மேற்கொண்டாள். இந்த சோமவார விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு, சகல சவுபாக்கியங்களும் கிடைப்பதுடன், கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நோய்கள் விலகும்.

ஒருமுறை சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடினர். அதில் பார்வதியே வெற்றிபெற்றார். ஆனால் சிவபெருமான், தானே வெற்றிபெற்றதாக கூறினார். இதனால் கோபமடைந்த பார்வதி, அந்த வழியாகச் சென்ற முனிவர் ஒருவரை அழைத்து நியாயம் கேட்டார். அதற்கு அந்த முனிவர், ‘ஆட்டத்தைப் பார்க்காமல் தீர்ப்பு கூற முடியாது’ என்று சொல்ல, பார்வதியும் சிவனும் மீண்டும் விளையாடினர். அப்போதும் பார்வதியே வெற்றிபெற்றார். ஆனால் முனிவரும் கூட ‘சிவபெருமானே வெற்றிபெற்றார்’ என்று சொன்னார்.

இதனால் ஆத்திரம் கொண்ட பார்வதி தேவி, துர்க்கையாக மாறி முனிவருக்கு சாபம் கொடுத்தார். இதனால் தொழு நோய் பாதிக்கப்பட்டு முனிவர் அவதிப்பட்டார். இதனால் அவர் தற்கொலை செய்துகொள்ள துணிந்தார். அப்போது ஒரு பெண், முனிவரை தடுத்து நிறுத்தினாள். அவரது கதையைக் கேட்டவள், பின்னர் “நான் ஒரு தேவலோகப் பெண். இந்திரனின் சாபத்தால், பூலோகத்தில் பிறந்தேன். இங்கு சோமவார விரதத்தை மேற்கொண்டதால் எனக்கு விமோசனம் கிடைத்து, தற்போது தேவலோகம் சென்று கொண்டிருக்கிறேன். நீங்களும் சோம வார விரதம் மேற்கொண்டால், உங்களுடைய சாபமும் நீங்கும்” என்று கூறிச் சென்றாள். அதன்படி முனிவரும் விரதம் மேற்கொண்டு நோயில் இருந்து விடுபட்டார்.

விரதம் இருக்கும் முறை

சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம். சோம வார தினத்தில், ராகு காலத்துக்கு முன்பாகவே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் கணபதியை வழிபட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபம் காட்ட வேண்டும். பின்னர் கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி போன்றவற்றை போட்டு, கலசத்துக்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும்.

கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமத்தால் அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். வழிபாட்டின் போது சிவ நாமத்தை உச்சரிப்பது சிறப்பான வாழ்வை அருளும். வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும். பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி - பரமேஸ்வரனாக நினைத்து வணங்க வேண்டும். அவர்களுக்கு ஆடை தானமும், அன்னதானமும் அளித்து, அட்சதையை அவர்களிடம் கொடுத்து ஆசி பெற வேண்டும்.

இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை மேற்கொள்ளலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ, அல்லது 12 ஆண்டுகளோ கடைப் பிடிக்கலாம். அதுவும் முடியவில்லை என்றால், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமை களிலாவது இந்த விரதத்தை மேற்கொண்டு வந்தால், முற்பிறவி பாவங்களும், தீராத நோய்களும் நீங்கும்


Next Story