அகத்தியருக்கு உபதேசித்த மருந்தீஸ்வரர்

தேவாரப் பாடல்கள் பாடப்பெற்ற 274 சிவன் கோவில்களில், 258-வது தேவாரத் தலமாக இது விளங்குகிறது.
5 நிலைகளுடன் அமைந்த இவ்வாலயத்தின் மூலவர் வீற்றிருக்கும் விமானத்திற்கு ‘சதுர்வஸ்தம்’ என்று பெயர்.
ஒரு முறை அபயதீட்சிதர் என்ற பக்தர், இறைவனை தரிசிக்க வந்தார். அப்போது பெரும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. அவர் சுவாமிக்கு பின்புறம் இருந்ததால், இறைவனின் முதுகுப்பகுதியைத்தான் தரிசிக்க முடிந்தது. “இறைவா.. உன் முகம் காட்டு’ என்று அவர் வேண்டியதன் பேரில், இறைவன் மேற்கு முகமாக திரும்பி தன் முக தரிசனத்தை வழங்கினார். இதனால் இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்கிறார்.

கோவில் பிரகாரத்தில் அகத்தியருக்கும், வால்மீகிக்கும், சிவபெருமான் காட்சி கொடுத்த வன்னிமரம் உள்ளது.
அகத்தியர் இத்தலம் வந்து ஈசனை வழிபட்டார். அவருக்கு வன்னி மரத்தடியில் காட்சி தந்த ஈசன், உலகில் தோன்றியுள்ள நோய்கள் பற்றியும், அதற்கான மருந்துகளையும், மருந்துகளை தயார் செய்வதற்கான மூலிகைகளையும் பற்றி உபதேசித்தார். எனவேதான் இத்தல இறைவன் ‘மருந்தீஸ்வரர்’ என்ற பெயர் பெற்றார்.
தினமும் அதிகாலையில் கோ பூஜை செய்யப்பட்ட பிறகே, இத்தல இறைவனான மருந்தீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்யப்படும்.
மூலவருக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கி, விபூதி பிரசாதம் சாப்பிட்டால், எவ்வித நோயாக இருந்தாலும் நீங்கிவிடும் என்பது ஐதீகம், பாவங்களும் தீரும். வன்னி மரத்தை சுற்றி வந்து வணங்கினால் முக்தி கிடைக்கும்.
தல வரலாறு

ஒரு முறை வசிஷ்ட முனிவர் யாக வேள்வி நடத்தினார். அதற்கு பால் தேவைப்பட்டது. இதனால் இந்திரன், தன்னிடம் இருந்த காமதேனுவை அனுப்பி வைத்தான். பூஜை நேரத்தில், காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்தது. இதனால் கோபம் கொண்ட வசிஷ்டர், காமதேனுவை காட்டுப் பசுவாக மாறும்படி சபித்தார். இதையடுத்து காமதேனு இத்தலம் வந்து சுயம்புலிங்கமாக இருந்த ஈசனின் மீது பால் சுரந்து வழிபட்டு, விமோசனம் பெற்றது. காமதேனு, இறைவனை பாலால் அபிஷேகித்த நேரத்தில் அங்கு வந்த வால்மீகியைக் கண்டு பயந்த காமதேனு அங்கும் இங்கும் ஓடியது. அதில் சிவலிங்க திருமேனியின் மீது காமதேனுவின் கால் தடம் பதிந்தது. இன்றும், சிவலிங்கத்தின் தலையிலும், மார்பிலும் பசுவின் கால் தடம் இருப்பதைக் காணலாம்.
Related Tags :
Next Story






