டி.என்.பாளையம் அருகே கோவில் விளை நில ஏலம் தற்காலிகமாக ஒத்திவைப்பு


டி.என்.பாளையம் அருகே கோவில் விளை நில ஏலம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
x

டி.என்.பாளையம் அருகே கோவில் விளை நில ஏலம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

ஈரோடு

டி.என்.பாளையம்:

டி.என்.பாளையத்தை அடுத்த கணக்கம்பாளையம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக அதே பகுதியில் 158 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளது. இந்த விளை நிலங்கள் ஆண்டுதோறும் குத்தகை அடிப்படையில் பொது ஏலத்தில் விடப்படும். அதன்படி இந்த ஆண்டு ஏலம் நடத்த நேற்று கோவில் வளாகத்தில் பரம்பரை அறங்காவலர் நரசிம்மர், கோபி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஹரி, சத்தியமங்கலம் செயல் அலுவலர் கலைவாணி உள்ளிட்டோர் கூடினார்கள். 54 குத்தகைதாரர்களும், புதிதாக ஏலம் எடுப்பவர்களும் வந்திருந்தனர். அப்போது குத்தகையை பயன்படுத்தி வருபவர்கள், தங்களை நிரந்தர குத்தகைதாரராக அறிவிக்க வேண்டும் என்று கூறி ஏலம் விடும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டனர். அதே நேரத்தில் ஏலத்தில் கலந்து கொள்ள வந்த மற்றவர்கள், ஏல முறையையே பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்கள்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் மறு உத்தரவு பெற்று ஏலம் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.


Next Story