ஆச்சரியமூட்டும் அம்மன்கள்


ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
x

நாடு முழுவதும் சிறப்புமிக்க ஏராளமான அம்மன் கோவில்கள் உள்ளன. அதில் ஆச்சரியமூட்டும் மூன்று அம்மன்களை பற்றி பார்க்கலாம்.

மடிசார் கட்டிய அம்பாள்

லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலின் அம்பிகை ஸ்ரீப்ரவிருத்தஸ்ரீமதி (ஸ்ரீபெருந்திரு பிராட்டி) என்று அழைக்கப்படுகிறாள். இவள் லட்சுமிக்கே லட்சுமி கடாட்சம் தந்த அம்பாள்.

சுவாமி கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். அம்பாள் மேற்கு நோக்கியவாறு மாலை மாற்றும் வடிவில் அருள்பாலிக்கிறாள். நித்தியகல்யாணியாக மடிசார் புடவையுடன் எப்போதும் காட்சி தரும் அம்பாள் தன் காதுகளில் ஸ்ரீசக்கர தாடங்கம்(காதணி) அணிந் திருக்கிறாள்.

லிங்க வடிவில் அம்மன்

கோயம்புத்தூர் மாவட்டம் கொழுமம் என்ற தலத்தில் மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள மாரியம்மன், லிங்க வடிவில் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

லிங்கத்தின் கீழ் ஆவுடையாரும் உள்ளது. இந்த மூலவரைப் பார்க்கும்போது, அம்மனுக்குரிய எந்தவித அம்சமும் தென்படாது. இருப்பினும் கூட இந்த லிங்கத்தை, அம்மனாக பாவித்து, புடவை அணிவித்து பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.

சிவனை தழுவிய கோலத்தில் அம்பாள்

பட்டீஸ்வரம் மக்களால் சின்னக்கோவில் என்று அன்புடன் அழைக்கப்படும் சக்திமுற்றம், பிரம்மாண்ட ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு முகமாய் காட்சி தருகின்றது. இந்த கோவிலில் மூலவர் சிவக்கொழுந்தீசுவரர் கிழக்கு முகமாய் காட்சி தருகின்றார்.

இவருக்கு சக்திவனேஸ்வரர் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இவரை வணங்கி, சண்டிகேசுவரரை வழிபட்டு வரும்போது, சுவாமி சன்னிதிக்கு இடதுபுறம் சக்தி தழுவிய நாதரின் திருமேனியும், அதன் பின்புறம் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்யும் அம்மன் திருமேனியும் நம்மைப் பரவசப்படுத்துகின்றன.

அம்பாள் ஒற்றைக் காலைத் தரையில் ஊன்றி, மற்றொரு காலை ஆவுடையாரின் மீது மடக்கி வைத்து, தன் இரு கைகளாலும் சிவலிங்கத்தைத் தழுவி நிற்கும் இத்திருக்கோலம் வேறெந்த ஆலயத்திலும் காண முடியாத சிறப்பாகும். இத்தலத்தை வழிபடுவோருக்குத் திருமணம் கைகூடும்.


Next Story